ஏழாம் திகதி ஆவணி மாதம் நண்பகல் நேரம். மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலையத்தில் கம்போடியாவின் சியாம் ரெப் விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் எயார் ஏசியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சிறிது நேர தாமதத்துடன் பயணிகளை ஏற்ற தயாரானது. நாங்கள் ஆறு பேரும் எமது இருக்கைகளை கண்டடைந்து பயணபொதிகளையும் மேலே வைத்து விமானம் புறப்படுவதை எதிர்பார்த்து காத்திருந்தோம். இன்னமும் பயணிகள் விமானத்தில் ஏறிக்கொண்டிருந்தார்கள். அப்போது விமான சிப்பந்தி எம்மை நோக்கிவந்து எங்கள் ஐந்து பேரை வெளியே வருமாறு அழைத்தாள். நான், துவாரகசிங்கம், சத்யன் அண்ணா, பிரவீன் மற்றும் ஸ்ரீகாந்தன் ஐவரும் gate பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கே எம்மை விமானத்தில் அனுமதிக்க முடியாதென கூறப்பட்டது. சரியான காரணம் கூறப்படவில்லை. நீண்ட நேர வாக்குவாதத்தின் பின் எம்மிடம் sponsor letter இல்லை எனவே அனுமதிக்க முடியாது என்றார்கள்.
இலங்கையில் இருந்து செல்பவர்களுக்கு தான் sponsor letter தேவை ஆனால் நாங்கள் சிங்கப்பூரில் வேலை செய்யும் மற்றும் நீண்ட நாள் வதியும் உரிமை பெற்றிருப்பதால் எமக்கு தேவை இல்லை மற்றும் நாங்கள் சிங்கப்பூரில் உள்ள கம்போடியா தூதரகத்தில் முறையாக வீசா எடுத்துள்ளோம் என எவ்வளவோ விளக்கிக் கூறியும் பயனில்லை. எமது பயணப்பொதிகளை எடுத்துவரச் சொன்னதுக்கு நாங்கள் உடன்படவில்லை. விமானம் ஏற்கனவே தாமதம். எனவே அவர்களுக்கு அவசரம். நாங்கள் எமது பைகளை எடுக்காவிட்டால் எமது உடைமைகளுடன் விமானம் புறப்படப்போகிறது என்று சொன்னவுடன் வேறு வழியின்றி எமது பைகளை வெளியே எடுத்தோம். அதுவரை எம்முடன் வந்த கோபிசங்கர் விமானத்தின் உள்ளே இருப்பத்தை நாங்கள் அவர்களிடம் சொல்லவில்லை அவர்களும் கவனிக்கவில்லை. ஏனெனில் நாங்கள் இருந்தது முன்பக்கதில் கோபி இருந்தது கடைசி வரிசையில். எமது பயணப்பைகளை எடுத்துவிட்டு எங்கள் ஐவரையும் அனுமதிக்க முடியாது ஆனால் எம்முடன் வந்த ஒருவர் மட்டும் எப்படி செல்லமுடியும் என்று கேட்டோம். மறுபடியும் அவர்களுக்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. யார் அவர் என சிங்கத்திடம் கேட்டார்கள். இருந்த ஆத்திரத்தில் நீங்களே கண்டுபிடியுங்கள் என முறைப்புடன் பதில் கிடைத்ததும், அடுத்ததாக என்னிடம் கேட்டார்கள். நான் திரும்பியே பார்க்கவில்லை. எங்கள் ஒருவரிடம் இருந்தும் பதிலில்லை. ஆனால் கோபி மட்டும் தனியாக கம்போடியா சென்று என்ன செய்வது என்பதால் கோபியை அழைத்து வருவதைத்தவிர வேறு வழியில்லை. விமானத்தின் வெளியே நாங்கள் என்ன செய்வதென முடிவெடுக்கும்வரையும் அவர்களுக்கு பதட்டம். யாரந்த ஆறாவது நபர். சத்யன் அண்ணா கோபியை அழைத்துவர சென்றால் கோபிக்கு நடப்பது எதுவுமே தெரியாது. கோபி சுகமாக ஒரு நித்திரை செய்வதற்கு ஆயத்தம்.
மறுபடியும் gate ல் நிற்பவர்களுடன் வாக்குவாதம். அவர்கள் தம்மால் ஒன்றுமே செய்ய முடியாது check in செய்யுமிடத்தில் ஒரு கருமபீட (Counter) இலக்கத்தையும் ஒரு உத்தியோகத்தர் பெயரையும் சொல்லி அங்கே செல்லுமாறு சொன்னார்கள். கடவுச்சீட்டில் குத்தப்பட்ட வெளியேறுகையை செல்லுபடியற்றதாக்கி check in பகுதிக்கு வந்தோம். வரும் வழியில் கோபத்தில் நாங்கள் திட்டியபடி வந்ததையெல்லாம் இங்கே எழுதமுடியாது. எழுதினால் ஏகப்பட்ட பீப் சத்தங்கள் போடவேண்டியிருக்கும், வாசிப்பவர்கள் மானே தேனே பொன்மானே போட்டு நிரப்பவேண்டியிருக்கும்.
குறிப்பிட்ட கருமபீடத்தில் அவர்கள் குறிப்பிட்ட உத்தியோகத்தர் இல்லை. கடமையில் இருந்த உத்தியோகத்தரிடம் சொன்னதும் எம்மை காத்திருக்க சொல்லிவிட்டு தொலைபேசியூடாக விசாரிப்புகள் தொடர்ந்தது. நாங்கள் பொறுமையிழந்து மீண்டும் மீண்டும் விசாரித்தபொழுது கம்போடியா தூதரகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாகவும் அவர்களது பதிலுக்காக காத்திருப்பதாகவும் சொன்னார். நேரம் 5 மணியை தாண்டிவிட்டது. நடப்பதை வைத்து பார்க்கும்போது தவறு தங்கள் மேல் எனத் தெரிந்ததால் வேண்டுமென்றே நேரத்தை கடத்துவது போல் தெரிந்தது. இதற்கு மேல் காத்திருந்தால் பயனில்லையென அங்கே எயார் ஏசியா உயர் அதிகாரி போல் தோற்றமளித்த ஒருவரிடம் முறையிட்டோம். மேலும் 20 நிமிட காத்திருப்புக்கு பிறகு மறுநாள் காலை ஏழு மணி விமானத்தில் ஆசனம் தருவதாகவும் திரும்பி வருவதையும் அடுத்த நாளுக்கு மாற்றித்தருவதாகவும் உறுதியளித்தார். ஆனால் எமக்கு லீவு இல்லையென்பதால் திரும்பல் பயணத்தேதியை நாங்கள் மற்றவில்லை. இரவு தங்குவதற்கு ஹோட்டல் வசதி மற்றும் பிரயாண வசதியும் ஒழுங்குபடுத்தி தரப்பட்டது. ஆனாலும் அவர்கள் தமது தவறை ஒத்துக்கொள்ளவில்லை. எங்களுக்கு sponsor letter தேவையில்லையென நீங்கள் உறுதியாக கூறுவதால் விமானத்தில் இடம் தருகிறோம் ஆனால் கம்போடியாவில் அனுமதிக்க மறுத்தால் அது உங்கள் பொறுப்பு என்றும் கூறினார்கள். சாதுரியமாக தங்கள் தவற்றை மறைக்கப்பார்த்தார்கள்.
எயார் ஏசியாவின் பொறுப்பற்ற செயலால் ஒரு பகல் முழுவதையும் மலேசியா விமானநிலையத்தில் செலவழிக்கவேண்டி வந்தது. நாங்கள் எவ்வளவு விளங்கப்படுத்தியும் ஏற்றுக்கொள்ளாத உத்தியோகத்தார்களால் பயணம் தடுக்கப்பட்டது. அதிலும் gate ல் நின்ற பணியாளர் தமது விமான நிறுவனத்தைப்பற்றி விளக்கம் வேறு. அடேய் உலகத்துக்கே தெரியுமே உங்கட விமான சேவையின் இலட்சணம். நீண்ட காத்திருப்பால் உடலும் உள்ளமும் சோர்வடைய மேலும் நாற்பத்தைந்து நிமிடங்கள் பயணம் செய்து ஹோட்டலை வந்தடைந்தோம். கம்போடியாவில் இருக்கவேண்டிய எம்மை மலேசிய இரவு வரவேற்றது.
பின்குறிப்பு- இலங்கையில் இருந்து கம்போடியா வீசா பெறுவதற்கு கம்போடியாவில் இருந்து வழங்கப்படும் sponsor letter அவசியமானது. ஆனால் சிங்கப்பூரில் employment pass ல் தங்கியுள்ளவர்கள் சிங்கப்பூரில் உள்ள கம்போடியா தூதரகத்தில் வீசா பெறும்போது sponsor letter அவசியமில்லை.