Friday, June 10, 2016

நம்பிக்கை

வானம் இருண்டு கிடந்தது. ஆனால் மழைதான் வரமாட்டேன் என அடம்பிடித்துக்கொண்டிருந்தது. சிலநாட்களாகவே இப்படித்தான். மழை இல்லாமல் பயிர்கள் வாடிக்கிடந்தன. கிணற்றிலும் தண்ணீர் வற்றிவிட்டது. வரப்பில் இருந்து வெறித்தபார்வை பார்த்துக்கொண்டிருந்தவரின் மனதில் பல எண்ணங்களும் சூறாவளியாக சுழன்றடித்தன. 

சிறுபோகம் நடுவதா இல்லையா என பலவாறாக யோசித்து பயிர் நட்டிருந்தார். இறைவன்மேல் பாரத்தைப் போட்டு மனைவியின் தாலிக்கொடி அடைவுக்கடை வாசலைத்தாண்டியிருந்தது. அவளிடம் கடைசியாக இருந்த நகையும் அதுதான். பிள்ளைகளின் படிப்புச்செலவுகள் மளிகைக்கடை பாக்கிகள் கண்முன்னே விஸ்வரூப தரிசனம் காட்டின. இந்தமுறை எல்லாம் சரிவந்தால் கையூன்றி நிமிர்ந்திடலாம் என்றால் இயற்கை விடமாட்டேன் என்கிறது. 

ஒவ்வொரு முறையும் முயன்று பார்ப்பதும் கீழே விழுவதுமாக இருக்கிறது அவரது வாழ்வு. விவசாயத்தை விட்டால் வேறு தொழிலும் தெரியாது அவருக்கு. இயற்கை சமநிலை குழம்பியிருப்பது நன்றாகவே தெரிகிறது ஆனாலும் என்ன செய்வது. தொலைக்காட்சியிலும் செய்திதாள்களிலும் அடிக்கடி பருவநிலைமாற்றம் பற்றிய செய்திகளை விடாது பார்த்தும் வாசித்தும் இயற்கையை புரிந்துகொள்ள முடியவில்லை. எல் நினோவையும் லா நினோவையும் இப்பொழுதுதான் அவர் கேள்விப்படுகிறார். இது எதுவுமே தெரியாதுதான் அவர் அப்பனும் பாட்டனும் இயற்கையை புரிந்து விவசாயம் செய்தவர்கள். 

இன்று பள்ளிமுடிந்து வந்த மகள் தாயாரிடம் சொல்லிக்கொண்டிருந்தது அவரின் காதிலும் விழுந்தது. நகரமயமாக்கலும் காடழிப்பும் எவ்வாறு பூமியை வெப்பமடைய வைக்கிறது என்றும் மழைவீழ்ச்சியை குறைக்கிறது என்றும் மகள் தாயாருக்கு விளக்கிக்கொண்டிருந்தாள். இன்று பள்ளியில் படித்தவற்றையெல்லாம் கூறிவிடவேண்டும் என்ற ஆர்வம் அவளிடம் தெரிந்தது. இதையெல்லாம் காதுகொடுத்து கேட்டுக்கொண்டிருந்த அவருக்கு தான் படிக்காவிட்டாலும் தனது மகள் ஆர்வமுடன் படிப்பது மனநிறைவையும் பெருமிதத்தையும் கொடுத்தது. 

பெண்கல்வியின் முக்கியத்தை நன்கு உணர்ந்தவர்தான் அவர். அதேநேரம் உலகமயமாக்கலுக்கும் பெருகிவரும் காடழிப்புக்கும் எதிராக தன்னைப்போன்ற எளிய விவசாயி என்ன செய்யமுடியும் என்று யோசித்தபொழுது ஆயாசமும் அசதியுமே தோன்றியது. எப்போது இயற்கையை வஞ்சிக்கும் தவற்றைச் செய்யத்தொடங்கினோம் என யோசித்துப்பார்த்தார். ஆனால் விடைதான் இல்லை. யோசனையோடு இருந்தவரின் கையில் விழுந்தது ஒருதுளி மழை. சிந்தனை கலைந்து அண்ணாந்து வானத்தைப்பார்த்தார். 

கிழக்கிலிருந்து ஒரு மழைமேகம் வருவது தெரிந்தது. மனதில் நிறைந்த நம்பிக்கையுடன்திரும்பி பயிர்களைப்பார்த்தவருக்கு பயிர்கள் சிரிப்பது போலவே தோன்றியது.