Tuesday, September 20, 2011

விளாத்திக்குளம்

            வவுனியா மன்னார் மாவட்டங்களின் எல்லையில் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமே விளாத்திக்குளம். விளாத்திக்குளத்தில் வேலை காரணமாக சில மாதங்கள் தங்க நேரிட்டது. கிராமம் என்றதும் நினைவுக்கு வருவது பச்சைப்பசேல் என்ற வயல்கள், தோட்டங்கள் நிறைந்த பசுமையான பிரதேசம். ஆனால் இது அப்படியே நேர்மாறு. நான் சென்றது சூரியன் சுட்டெரிக்கும் கோடைகாலம். காய்ந்து வறண்டு கிடக்கும் நிலம், புளுதி பறக்கும் கிறவல் ரோட். அங்கங்கே பாலை, வீரை மரங்கள் மட்டும் இல்லை என்றால் கிராமமே பொசுங்கிப்போயிருக்கும்.
     போரில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த சில கட்டுமான வேலைகளை   விளாத்திக்குளத்திலும் மேலும் இரண்டு அயலுர்களிலும் மேற்கொள்வதற்கு  ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. அந்த வேலைக்காக நானும் ஒரு தொழில்நுட்ப உத்தியோகத்தவரும் சென்று வேலைத்திட்டத்திற்கான ஆயத்தங்களைச் செய்வது சிலநாட்களின் பின்னர் ஏனையோர் வந்து இணைந்துகொள்வது என ஏற்பாடு. வீடு ஒன்று ஏற்கனவே நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டுவிட்டதால் வீட்டிற்கு தேவையான பொருட்கள், ஆயத்தவேலைக்கு(Mobilization) தேவையான உபகரணங்களுடன் இருவரும் புறப்பட்டோம்.
     விளாத்திக்குளம் செல்வதற்கு வவுனியா மன்னார் பிரதான வீதியில் பூவரசங்குளத்தை அடைந்து வலதுபுறம் திரும்பி கிறவல் பாதையில் 18 km பயணிக்க வேண்டும். வவுனியாவில் இருந்து 33 கிலோமீட்டரும் மன்னாரில் இருந்து 85 கிலோமீட்டரும் தூரத்தில் இருக்கிறது விளாத்திக்குளம்.
     குண்டும் குழியுமான பாதையில் நாங்கள் குதித்து குதித்து செல்லும்போது துணைக்கு எம்முடனே பயணித்து வந்துகொண்டிருந்த மின்கம்பிகளை சிறிது துரத்தின்பின் காணவில்லை. மின்சாரம் இல்லாத ஊருக்கு செல்கிறோம் என்றதும் சிறிது ஏமாற்றமாக இருந்தது. மின்பிறப்பாக்கிகள் இரண்டு இருக்கிறதே என்று ஆறுதலாடைந்தால் வீட்டில் மின்சுற்றைக் காணவில்லை. இந்த ஜென்மத்தில் அவர்களுக்கு மின்சாரம் கிடைக்காது என்று நினைத்திருப்பார்கள் போலும். தற்காலிக மின்சுற்றை அமைக்கும்வரை மெழுகுதிரியுடன் காலத்தை கரைத்தோம்.
     பயண களைப்பு தீர குளிப்போம் என்று கிணறு எங்கே என்று விசாரித்தால் பாதி வீட்டு வளவிலும் மீதி ரோட்டு கரையிலும் இருந்த பொதுக்கிணறைக் காட்டினார்கள். இந்த வீடு ஒன்றுதான் தண்ணீர் வசதியுடன் கூடிய கல்வீடாம். கிராமத்தில் அட்டாச்டு பாத்ரூம் கேட்கமுடியாதுதான் இருந்தாலும் வசதியான கிணறும் இல்லை.
     மறுநாள் காலையில் பாண் சாப்பிடுவோம் என கடைக்கு போனால் ஞாயிற்றுக்கிழமை பாண் வராதாம். அந்த ஊருக்கு பாண் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. வரும்போது கண்டுகொள்ள வேண்டியதுதான். அவ்வூர் பாணும் சூப்பர் ஸ்டார் ரசிகன் என்று தொடர்ந்துவந்த நாட்களில் தெரிந்துகொண்டோம். சரி பாண் போனால் போகிறது கடையில் சாப்பிடுவோம் என சாப்பாட்டுக்கடையைத் தேடினோம். இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? வேறுவழி பிஸ்கட்தான் காலை உணவு. மதியம் சமைப்பது என்று முடிவெடுத்து சமைக்கத்தொடங்கினோம். சமைக்கத்தெரியாதவன் சமைத்து அதே சமையலை அவனே சாப்பிடுவதுபோல் கொடுமையான விசயம் உலகத்தில் வேறையெதுவும் இல்லை என அன்று எனக்குப் புரிந்தது. சோறு காய்ச்சினால் சோறு அரை அவியலாக இருந்தது. மறுநாள் நீரை அதிகமாக ஊற்றினால் சோறு குழைந்துவிட்டது. அரிசிக்கு அளவாக தண்ணீர் விடும் கைப்பக்குவம் வரவே ஒருகிழமையானது. இதில் நமது கறிகளின் அருமையைப்பற்றி கூறவேண்டுமா என்ன?
     சிலநாட்கள் சென்றபின் கூட்டம் ஒன்றுக்கு சமூகமளித்துவிட்டு இரவானதால் மன்னாரில் தங்கி மறுநாள் அதிகாலை மன்னாரில் இருந்து நானும் மற்ற பொறியியலாளரும் மோட்டார்சைக்கிளில்  புறப்பட்டோம். அன்று மடுமாதா ஆலய பெருநாள் ஆகையால் மடுவுக்கு சென்று மடுமாதாவை தரிசித்தோம். திரும்பும்போது விளாத்திக்குளம் செல்லும் குறுக்குவழி ஒன்றைக்காட்டினார்கள். அந்த வழியால் சென்றால் 20 கிலோமீட்டர்தான் என நம்பிக்கையூட்டினார்கள். மீண்டும் பிரதானசாலையை அடைந்து செல்வதென்றால் 50 கிலோமீட்டர் செல்லவேண்டும். எனவே மகிழ்ச்சியுடன் பயணத்தைத் தொடர்ந்தோம். இடையிடையே குடியிருப்பு பகுதிகள் இருந்ததால் பாதையை விசாரித்துக்கொண்டு பயணித்தோம். ஒரு கட்டத்தின்பின் சனநடமாட்டம் இல்லாத காட்டுப்பாதையை அடைந்தோம். பாதை சரியில்லாததால் வேகமாகவும் செல்லமுடியவில்லை. இடையில் எங்காவது யானைக்கூட்டம் வழிமறிக்குமோ என்ற நினைப்பே கிலியை உண்டாக்கியது. பாதையோரங்களில் கண்ணிவெடி இருக்குமோ என்ற யோசனை வயிற்றில் புளியைக் கரைத்தது. பாதையில்  வாகனத்தடங்கள் காணப்பட்டதால் ஓரளவு நிம்மதியாக இருந்தது. ஒருவழியாக வீடு ஒன்றைக்கண்டபின்னர் மகிழ்ச்சி பிறந்தது. விசாரித்தபோது சரியான பாதையில்தான் வந்திருந்தோம். விளாத்திக்குளம் வந்தபின் மோட்டார்சைக்கிள் மீட்டரைப் பார்த்தபோது 35 கிலோமீட்டர் பயணம் செய்திருந்தோம்.
     எமது Project ல் இரண்டு கிலோமீட்டர் நீளமான ரோட் ஒன்று புனரமைக்கவேண்டியிருந்தது. ஒரு கிலோமீட்டர் வரையான பாதையே அன்றாடம் மக்களால் பாவிக்கப்பட்டது. மிகுதி பெரிதாக பாவனையின்றி இருந்ததால் பாதையின் இருமருங்கும் பற்றைகள் வளர்ந்துகிடந்தது. Site cleaning முடிந்ததும் நானும் நண்பரும் இரண்டு உதவியாளர்களுடன் ரோட் Level அளக்கச்சென்றோம். அந்த ரோட் ஒரு குளத்தில் முடிவதாக உதவியாளர்கள் கூறினார்கள். வேலை முடிந்ததும் உபகரணங்களை ஒரு ஓரமாக வைத்துவிட்டு இருமருங்கும் பற்றைகள் கிடந்த பாதையில் தொடர்ந்து சென்றோம். சிறிது தூரத்தில் யானை இலத்தி பாதையில் ஆங்காங்கே கிடந்தது. அதைப்பார்த்ததும் பயம் இலேசாக எட்டிப்பார்த்தது. காற்றில் சருகுச்சத்தம் கேட்டதும் நால்வரும் ஓட ஆயத்தம். யானை துரத்தினால் நேராக ஓடக்கூடாது என்பார்கள். வேண்டுமானால் அந்த ஒடுங்கிய பாதையில் நாங்கள் வளைந்து வளைந்து ஓடலாம். யானை எந்த பிரச்சினையும் இன்றி நேராகவே ஓடிவரும். இவற்றை யோசித்ததும் ரஸ்கு சாப்பிடவேண்டாம் என திரும்பிவந்துவிட்டோம். எங்களுக்குக்கெல்லாம்  ரிஸ்கு எடுக்கிறது ரஸ்கு சாப்பிடுறது மாதிரி. முடிவிலயாச்சும் ஒரு பஞ்ச் டயலாக் சொல்லுவமெண்டால் ஏங்க முறைக்கிறீங்க?

இதுபோன்ற மேலும் சில சுவாரசியமான விடயங்கள் நான் விளாத்திக்குளத்தில் வேலைசெய்த இரண்டு மாதங்களில் கிடைத்தன. நேரம் கிடைக்கும்போது பின்னர் எழுதுகிறேன்.      

Monday, May 30, 2011

நிலாக்காயும் நேரம்

நிலாக்காயும் நேரம் சென்ற மாதம் அதாவது 23-04-2011 அன்று பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட தமிழ் மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட கலை கலாச்சார நிகழ்வு ஆகும். பொறியியல் பீட E.O.E.Pereira அரங்கினில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அச்சமயம் நான் வலைப்பூ எழுத ஆரம்பிக்கவில்லை, ஆயினும் கடந்த மூன்று வருட காலத்தில் முதன்முறையாக பேராதனை பல்கலைக்கழக தமிழ் மாணவர் மத்தியில் நடைபெற்ற கலை கலாச்சார நிகழ்வு என்னும் விடயத்தில் இது முக்கியத்துவம் பெறுகின்ற காரணத்தால் நான் தற்போது இதை எழுதுகிறேன்.
இது போன்ற கலை கலாச்சார நிகழ்வுகளை பேராதனை பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம், சங்கீத நாட்டிய சங்கம் போன்றவற்றின் ஊடாக தமிழ் மாணவர்கள் முன்னெடுத்துச் செல்வது வழமை. ஆனால் துரதிஷ்டவசமாக இச்சங்கங்கள் கடந்த இரண்டு வருடங்களாக செயல்படாது முடங்கிக் கிடப்பது கவலை தரக்கூடிய ஒரு விடயமாகும். கடந்த இரு வருடங்களில் பல்கலைக்கழகம் புகுந்த மாணவர்களுக்கு இச்சங்கங்களின் பெயர் கூடத் தெரியாத நிலைமையே காணப்படுவது ஒரு வெட்கக்கேடான விடயமாகும். இருட்டில் மூழ்கிக்கிடக்கும் தமிழ் மாவர்களின் கலைத்தாகம் பெருக்கெடுத்துப் பாயவேண்டும் என்ற நோக்கில் பொறியியல் பீட இறுதியாண்டு மாவர்களின் மனதில் உதித்த யோசனைதான் இந்த “நிலாக்காயும் நேரம். இவ்விழாவின் வெற்றியின் மூலம் இச்சங்கங்கள் மிக விரைவாக தமது பிரச்சினைகளை களைந்து முழு மூச்சுடன் இயங்க வேண்டும் என்பதே அப்போது அனைவரதும் எதிர்பார்ப்பாக இருந்தது. எதிர்பார்த்தது போன்றே விழா சிறப்பாக நிறைவேறிவிட்டது. ஆனால் சங்கங்களின் நிலை என்னவென்று காலம் தான் பதில் கூறவேண்டும்.
நிகழ்ச்சிகள்
மூன்றாம் வருட மாணவன் செந்தூரன் இசையமைத்த பாடல் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு அனைவரதும் பாரட்டைப்பெற்றது. அந்தப் பாடலை எழுதியவர் செந்தூரனின் தந்தை அரவிந்தன். செந்தூரன் இசைத்துறையில் ஒரு சகலகலா வல்லவன். பல இசைக்கருவிகளை வாசிக்கும் திறமை கொண்டவர்.
அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்கவைத்த நகைச்சுவை நாடகம் சிங்கப்பூர் டொக்டர். சிங்கப்பூரில் இருந்துவந்து வைத்திய சேவை! செய்யும் போலி மருத்துவரினதும் உதவியாளரினதும் தில்லு முல்லுகள் தான் நாடகத்தின் கதை. எல்லா நோயையும் குணப்படுத்தும் என கூறி எல்லாமைசின் என்னும் ஏதோ ஒன்று கிடைத்துவிட மூளை வருத்தம் முதல் மூல வியாதி வரைக்கும் எல்லாமைசின் தான். காயமடைந்த ஒருவருக்கு முதலுதவி செய்ய nurse bandage ஐ கேட்க மருத்துவ குறிப்பேட்டை புரட்டிய உதவியாளர் பதட்டமாகச் சொல்கிறார் “சேர் bandage எண்டு ஒரு குளிசை இல்லை. உடனே டொக்டர் “சே bandage இல்லையோ? இப்ப என்ன செய்யிறது?” கோகுலனால் நெறியாள்கை செய்யப்பட்ட இந்நாடகத்தில் திவாகர் போலி டொக்டராகவும் சிவகணேசன் உதவியாளராகவும் மற்றும் பலரும் நடித்திருந்தார்கள்.
அனைவரதும் பாராட்டைப்பெற்ற மற்றுமொரு நிகழ்ச்சி பண்டாரவன்னியன் நாடகம். பண்டாரவன்னியனின் வாழ்க்கை வரலாறு மிகவும் உணர்ச்சி பூர்வமாக நடிக்கப்பட்டது. நாடகத்தின் மேடையமைப்பு மிகவும் நன்றாக இருந்தது. மேடையமைப்பை முன்னின்று கவனித்தவர் மணிவண்ணன். அவருக்கு இருக்கும் பெயர்களை எண்ணுவதற்கு கைவிரல்கள் போதாது. இதில் “architect மணி என்னும் புதிய பெயர் வேறு வழங்கிவிட்டார்கள். சுவர்ணராஜா மற்றும் சாரங்கன் நெறியாள்கை செய்ய கோபிராம் பண்டாரவன்னியனாகவும், பிரதாஸ் காக்கைவன்னியனாகவும் மற்றும் பலரும் நடித்திருந்தார்கள்.
எதிர்வரும் நான்காம் திகதி சனிக்கிழமை கொழும்பு இராமகிருஷ்ண மிஷனில் பண்டாரவன்னியன் நாடகத்தை மேடையேற்ற சந்தர்ப்பம் கிடைத்திருப்பது நாடகம் சிறப்பாக இருந்தமைக்கு சான்றாகும்.
இறுதியாக இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. 11 பாடல்கள் மிக இனிமையாக இசைக்கப்பட்டன. இசை நிகழ்ச்சியை சிறப்பாக ஒழுங்கமைத்தவர் கீபோர்ட் வாசித்த சுஜிந்தன், அத்தோடு ஒரு பாடலையும் பாடியிருந்தார். இதுபோன்ற நிகழ்வுகளில் பலவண்ணங்களில் புகை பரவச்செய்வது வழமை. ஆனால் ராகவனின் யோசனைப்படி அரங்கத்தின் மேலிருந்து குமிழிகள் ஊதப்பட்டன. நல்லவேளையாக பீமா விக்ரம் போல் யாரையேனும் நினைத்துக்கொண்டு பாடல் இசைப்பதை மறந்து குமிழிகளை உடைத்து விளையாடவில்லை.
இவற்றை தவிர கீழைத்தேய இசை, நடனம், கவியரங்கம், வில்லுப்பாட்டு போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன. விழாவிற்கான banner மிக அழகாக வரைந்தவர் பிரதாபன்.
எனது பல்கலைக்கழக வாழ்வில் நான் இரசித்த கடைசி கலை நிகழ்ச்சி இதுவாகத் தான் இருக்கும். இதில் எனது பங்களிப்பும் இருப்பதையிட்டு நான் பெருமையடைகிறேன். இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

Wednesday, May 25, 2011

முதல் பதிவு

வலைப்பூ ஒன்றை ஆரம்பித்தால் என்ன என்று நீண்ட நாட்களாக ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் ஆரம்பிக்கத்தான் சிறிது தயக்கம் இருந்தது. காரணம் பிரபல பதிவர் அடிக்கடி பதிவுகளை வலையேற்ற வேண்டுமே? (வேண்டாம் நீங்கள் முறைப்பது தேரிகிறது.) சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும், தொடங்கித்தான் பார்ப்போமே! புலி வாலைப் பிடிக்க உத்வேகம் அளித்த ஜெயன் அண்ணாவுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.

முதல் பதிவு என்று தலையங்கம் இட்டுவிட்டேன் ஆனால் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. (இந்த இலட்சணத்தில் வலைப்பூ அதில் முதல் பதிவு வேறயா என்று தானே யோசிக்கிறியள்?) எனது பதிவு ஹிட்டானால் மிகவும் சந்தோசம். ............... எண்ணிக்கையான வாசகர்கள் வாசித்த பிரபல பதிவர் என்னும் பெயர் கிடைக்கும். (இது வேற!!!) இல்லை மொக்கையாக இருந்தாலும் ஒரு வகையில் சந்தோசமே. இவரைப்போல எழுத வேண்டும் என சிலரைச் சொல்வார்களே, அது போல என்னைப்போல எழுத வேண்டாம் என பலர் சொல்வார்கள். எப்பிடியெண்டாலும் எனது பெயர் வலைப்பதிவுகளில் வாழும். (இல்லை நாறும் என நீங்கள் நினைப்பது தெரிகிறது.) அப்பிடியே படிப்படியாக‌ வளர்ந்து மொக்கை பதிவர் சங்க தலைவர் பதவியையும் அடைய முடியும் அல்லவா? லிஃப்டில் செல்லலாம் ஆனாலும் இடையில் நின்று விடுமோ என்று பயமாக இருக்கு. எனவே படியே சிறந்தத

ஏன் இந்த விபரீத முடிவு என எனது நலன் விரும்பிகள் நினைக்கக் கூடும். என்ன செய்வது அடி வாங்கினால் தான் கைப்புள்ள ஃபேமஷ் ஆன பயபுள்ள ஆக முடியும். (எப்பிடி பன்ச்???)

இது ஒருபக்கம் இருக்க, நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்ப கிங்ஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அது அரைஇறுதி இல்லை. புதுசா தகுதிகாண் சுற்று என்று வந்தபடியா ரோயல் சலஞ்சர்ஸ் பெகங்களூருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கு. இன்று வெற்றிபெறும் அணியுடன் மோதி இறுதிப்போட்டிக்கு தெரிவாக முடியும். எனவே பெங்களூரின் கிண்ண வாய்ப்பு இன்னும் முடிந்துவிடவில்லை.

கிரிஸ் கைல் துடுப்பாட்டத்தில் சோபிக்காவிட்டால் யார் அடித்தால் என்ன தோல்விதான் போலும். சுரேஸ் ரெய்னாவின் ஆட்டம் பாராட்டும்படி இருந்தது. ஆரம்பத்தில் அடக்கி வாசித்துவிட்டு தேவையான நேரத்தில் அட்டகாசமான ஆட்டம். காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட போதும் வலியைப் பொறுத்துக்கொண்டு வலிமையாகப் பந்துகளை பெவிலியனுக்கு அனுப்பிய லாவகத்தை என்னவென்று சொல்வது. வலியுடன் சிரமப்பட்ட ரெய்னா தான் பெவிலியன் போக வழி இல்லையே என்று பந்துகளை பெவிலியன் அனுப்பினார் போலும். அடுத்ததாக அல்பி மோர்க்கெல், இறுதி நேரத்தில் என்ன ஒரு சரவெடி. பந்துவீச்சாளரின் காதில் வில்லு பட பாடல் இப்படி கேட்டிருக்கும்
"நான் அடிச்சா தாங்க மாட்டே
அடுத்த பந்து போடமாட்டே
போட்டுபாரு பந்தை காணமாட்டே"
பாவம் விட்டோரியும் என்ன செய்வது அனுபவ பந்துவீச்சாளர் சகீர் கான் மற்றும் சமீபகாலமாக சிறப்பாக பந்து வீசிய அரவிந்த் இறுதி நேரத்தில் ஓட்டங்களை வாரி வழங்கினார்கள். கிரிஸ் கைல் சிறப்பாக பந்து வீசியும் பயனில்லை.

சென்னை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதுக்கு ஒரு தமிழனாக எனது வாழ்த்துக்கள்.

பி.கு: வீராச்சாமி படத்துக்கு பிரபல சஞ்சிகை ஒன்றில் அரைப்பக்க விமர்சனம் வெளியிட்டிருந்தார்கள். கவனிக்கவும் அரைப்பக்க விமர்சனம் தான். இறுதியில் "இந்தப்படத்தில் சென்டிமென்ட், சண்டைக்காட்சி, கொமெடி, பன்ச் வசனம் அனைத்தும் உள்ளன. ஆனால் ஒன்றுமே தேவையான இடத்தில் இல்லை". அது போலவே எனது பதிவிலும் இருக்க வேண்டிய இடத்தில் இல்லாவிட்டாலும் தேவையான விடயங்கள் இருந்தால் சந்தோசம்.
அடுத்த பதிவு எனக்கு வரும் மிரட்டல் அச்சுறுத்தல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.