Tuesday, September 20, 2011

விளாத்திக்குளம்

            வவுனியா மன்னார் மாவட்டங்களின் எல்லையில் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமே விளாத்திக்குளம். விளாத்திக்குளத்தில் வேலை காரணமாக சில மாதங்கள் தங்க நேரிட்டது. கிராமம் என்றதும் நினைவுக்கு வருவது பச்சைப்பசேல் என்ற வயல்கள், தோட்டங்கள் நிறைந்த பசுமையான பிரதேசம். ஆனால் இது அப்படியே நேர்மாறு. நான் சென்றது சூரியன் சுட்டெரிக்கும் கோடைகாலம். காய்ந்து வறண்டு கிடக்கும் நிலம், புளுதி பறக்கும் கிறவல் ரோட். அங்கங்கே பாலை, வீரை மரங்கள் மட்டும் இல்லை என்றால் கிராமமே பொசுங்கிப்போயிருக்கும்.
     போரில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த சில கட்டுமான வேலைகளை   விளாத்திக்குளத்திலும் மேலும் இரண்டு அயலுர்களிலும் மேற்கொள்வதற்கு  ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. அந்த வேலைக்காக நானும் ஒரு தொழில்நுட்ப உத்தியோகத்தவரும் சென்று வேலைத்திட்டத்திற்கான ஆயத்தங்களைச் செய்வது சிலநாட்களின் பின்னர் ஏனையோர் வந்து இணைந்துகொள்வது என ஏற்பாடு. வீடு ஒன்று ஏற்கனவே நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டுவிட்டதால் வீட்டிற்கு தேவையான பொருட்கள், ஆயத்தவேலைக்கு(Mobilization) தேவையான உபகரணங்களுடன் இருவரும் புறப்பட்டோம்.
     விளாத்திக்குளம் செல்வதற்கு வவுனியா மன்னார் பிரதான வீதியில் பூவரசங்குளத்தை அடைந்து வலதுபுறம் திரும்பி கிறவல் பாதையில் 18 km பயணிக்க வேண்டும். வவுனியாவில் இருந்து 33 கிலோமீட்டரும் மன்னாரில் இருந்து 85 கிலோமீட்டரும் தூரத்தில் இருக்கிறது விளாத்திக்குளம்.
     குண்டும் குழியுமான பாதையில் நாங்கள் குதித்து குதித்து செல்லும்போது துணைக்கு எம்முடனே பயணித்து வந்துகொண்டிருந்த மின்கம்பிகளை சிறிது துரத்தின்பின் காணவில்லை. மின்சாரம் இல்லாத ஊருக்கு செல்கிறோம் என்றதும் சிறிது ஏமாற்றமாக இருந்தது. மின்பிறப்பாக்கிகள் இரண்டு இருக்கிறதே என்று ஆறுதலாடைந்தால் வீட்டில் மின்சுற்றைக் காணவில்லை. இந்த ஜென்மத்தில் அவர்களுக்கு மின்சாரம் கிடைக்காது என்று நினைத்திருப்பார்கள் போலும். தற்காலிக மின்சுற்றை அமைக்கும்வரை மெழுகுதிரியுடன் காலத்தை கரைத்தோம்.
     பயண களைப்பு தீர குளிப்போம் என்று கிணறு எங்கே என்று விசாரித்தால் பாதி வீட்டு வளவிலும் மீதி ரோட்டு கரையிலும் இருந்த பொதுக்கிணறைக் காட்டினார்கள். இந்த வீடு ஒன்றுதான் தண்ணீர் வசதியுடன் கூடிய கல்வீடாம். கிராமத்தில் அட்டாச்டு பாத்ரூம் கேட்கமுடியாதுதான் இருந்தாலும் வசதியான கிணறும் இல்லை.
     மறுநாள் காலையில் பாண் சாப்பிடுவோம் என கடைக்கு போனால் ஞாயிற்றுக்கிழமை பாண் வராதாம். அந்த ஊருக்கு பாண் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. வரும்போது கண்டுகொள்ள வேண்டியதுதான். அவ்வூர் பாணும் சூப்பர் ஸ்டார் ரசிகன் என்று தொடர்ந்துவந்த நாட்களில் தெரிந்துகொண்டோம். சரி பாண் போனால் போகிறது கடையில் சாப்பிடுவோம் என சாப்பாட்டுக்கடையைத் தேடினோம். இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? வேறுவழி பிஸ்கட்தான் காலை உணவு. மதியம் சமைப்பது என்று முடிவெடுத்து சமைக்கத்தொடங்கினோம். சமைக்கத்தெரியாதவன் சமைத்து அதே சமையலை அவனே சாப்பிடுவதுபோல் கொடுமையான விசயம் உலகத்தில் வேறையெதுவும் இல்லை என அன்று எனக்குப் புரிந்தது. சோறு காய்ச்சினால் சோறு அரை அவியலாக இருந்தது. மறுநாள் நீரை அதிகமாக ஊற்றினால் சோறு குழைந்துவிட்டது. அரிசிக்கு அளவாக தண்ணீர் விடும் கைப்பக்குவம் வரவே ஒருகிழமையானது. இதில் நமது கறிகளின் அருமையைப்பற்றி கூறவேண்டுமா என்ன?
     சிலநாட்கள் சென்றபின் கூட்டம் ஒன்றுக்கு சமூகமளித்துவிட்டு இரவானதால் மன்னாரில் தங்கி மறுநாள் அதிகாலை மன்னாரில் இருந்து நானும் மற்ற பொறியியலாளரும் மோட்டார்சைக்கிளில்  புறப்பட்டோம். அன்று மடுமாதா ஆலய பெருநாள் ஆகையால் மடுவுக்கு சென்று மடுமாதாவை தரிசித்தோம். திரும்பும்போது விளாத்திக்குளம் செல்லும் குறுக்குவழி ஒன்றைக்காட்டினார்கள். அந்த வழியால் சென்றால் 20 கிலோமீட்டர்தான் என நம்பிக்கையூட்டினார்கள். மீண்டும் பிரதானசாலையை அடைந்து செல்வதென்றால் 50 கிலோமீட்டர் செல்லவேண்டும். எனவே மகிழ்ச்சியுடன் பயணத்தைத் தொடர்ந்தோம். இடையிடையே குடியிருப்பு பகுதிகள் இருந்ததால் பாதையை விசாரித்துக்கொண்டு பயணித்தோம். ஒரு கட்டத்தின்பின் சனநடமாட்டம் இல்லாத காட்டுப்பாதையை அடைந்தோம். பாதை சரியில்லாததால் வேகமாகவும் செல்லமுடியவில்லை. இடையில் எங்காவது யானைக்கூட்டம் வழிமறிக்குமோ என்ற நினைப்பே கிலியை உண்டாக்கியது. பாதையோரங்களில் கண்ணிவெடி இருக்குமோ என்ற யோசனை வயிற்றில் புளியைக் கரைத்தது. பாதையில்  வாகனத்தடங்கள் காணப்பட்டதால் ஓரளவு நிம்மதியாக இருந்தது. ஒருவழியாக வீடு ஒன்றைக்கண்டபின்னர் மகிழ்ச்சி பிறந்தது. விசாரித்தபோது சரியான பாதையில்தான் வந்திருந்தோம். விளாத்திக்குளம் வந்தபின் மோட்டார்சைக்கிள் மீட்டரைப் பார்த்தபோது 35 கிலோமீட்டர் பயணம் செய்திருந்தோம்.
     எமது Project ல் இரண்டு கிலோமீட்டர் நீளமான ரோட் ஒன்று புனரமைக்கவேண்டியிருந்தது. ஒரு கிலோமீட்டர் வரையான பாதையே அன்றாடம் மக்களால் பாவிக்கப்பட்டது. மிகுதி பெரிதாக பாவனையின்றி இருந்ததால் பாதையின் இருமருங்கும் பற்றைகள் வளர்ந்துகிடந்தது. Site cleaning முடிந்ததும் நானும் நண்பரும் இரண்டு உதவியாளர்களுடன் ரோட் Level அளக்கச்சென்றோம். அந்த ரோட் ஒரு குளத்தில் முடிவதாக உதவியாளர்கள் கூறினார்கள். வேலை முடிந்ததும் உபகரணங்களை ஒரு ஓரமாக வைத்துவிட்டு இருமருங்கும் பற்றைகள் கிடந்த பாதையில் தொடர்ந்து சென்றோம். சிறிது தூரத்தில் யானை இலத்தி பாதையில் ஆங்காங்கே கிடந்தது. அதைப்பார்த்ததும் பயம் இலேசாக எட்டிப்பார்த்தது. காற்றில் சருகுச்சத்தம் கேட்டதும் நால்வரும் ஓட ஆயத்தம். யானை துரத்தினால் நேராக ஓடக்கூடாது என்பார்கள். வேண்டுமானால் அந்த ஒடுங்கிய பாதையில் நாங்கள் வளைந்து வளைந்து ஓடலாம். யானை எந்த பிரச்சினையும் இன்றி நேராகவே ஓடிவரும். இவற்றை யோசித்ததும் ரஸ்கு சாப்பிடவேண்டாம் என திரும்பிவந்துவிட்டோம். எங்களுக்குக்கெல்லாம்  ரிஸ்கு எடுக்கிறது ரஸ்கு சாப்பிடுறது மாதிரி. முடிவிலயாச்சும் ஒரு பஞ்ச் டயலாக் சொல்லுவமெண்டால் ஏங்க முறைக்கிறீங்க?

இதுபோன்ற மேலும் சில சுவாரசியமான விடயங்கள் நான் விளாத்திக்குளத்தில் வேலைசெய்த இரண்டு மாதங்களில் கிடைத்தன. நேரம் கிடைக்கும்போது பின்னர் எழுதுகிறேன்.      

2 comments: