Saturday, August 16, 2014

இருட்டு குகையில் முரட்டு பயணம்

ஏதோ தலைப்பைப் பார்த்ததும் ரொம்ப பெரியளவில் எதிர்பார்க்க வேண்டாம். ஒரு இருட்டு குகையில் சில நூறு மீட்டர்கள்  தூரம் சென்று வந்ததற்காகத்தான் இப்படி ஒரு பில்டப்பு. அதிலும் நாங்கள் தேர்ந்தெடுத்தது Adventure Tour இல்லை, Educational Tour மட்டுமே. நான் குறிப்பிடும் இருட்டு குகை (Dark Cave) இருப்பது கோலாலம்பூரில் உள்ள பத்து மலையில் (Batu Caves). பத்து மலை சென்று முருகனை தரிசித்த பலர் இந்த இருட்டு குகையையும் பார்த்திருப்பீர்கள். சிலர் இந்த இருட்டுக்குள்ள என்ன பார்க்க கிடக்கு எண்டு திரும்பி வந்திருப்பீர்கள். நாங்களும் அப்படித்தான் நினைத்தோம். போவதா வேண்டாமா என முடிவெடுப்பதற்குள் அடுத்த குழு நிறைந்துவிட்டது. பத்துப்பேர் அடங்கிய சிறு சிறு குழுக்களாக ஏறத்தாள இருபது தொடக்கம் முப்பது நிமிட இடைவெளிகளில் ஒவ்வொரு வழிகாட்டிகளின் துணையுடன் உள்ளே அனுப்புகிறார்கள். கட்டணம் முப்பத்தைந்து மலேசியன் வெள்ளி.

பாதுகாப்புக்கு தலைக்கவசமும் (Helmet) இருட்டில் நடப்பதற்கு வசதியாக டோர்ச்லைட்டும் வழங்கப்பட்டது. குகை மூன்று பகுதிகளைக் கொண்டது. பாதுகாக்கப்பட்ட பகுதியில் (Conserved Cave) பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை. ஆய்வாளர்கள் ஆய்வுசெய்யும் பகுதி அது. மட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் (Limited Access Zone)  சில மாதிரிகள் சேகரித்தல் போன்ற பணிகளுக்காக தற்போது அப்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பயன்பாட்டில் உள்ள பகுதியில் சீமெந்தால் ஆன நடைபாதை மற்றும் படிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலே இருக்கும் படத்தைப் பார்த்தால் குகையின் அமைப்பை புரிந்துகொள்ள முடியும்.

சிறிது தூரம் டோர்ச்லைட் இல்லாமலேயே நடக்கக்கூடியதாக இருந்தது. பின்னர் வெளிச்சம் நன்றாக குறைந்துவிட்டது. குகைக்குள்ளே 200 000 தொடக்கம் 250 000 வரையான வவ்வால்கள் வாசம்செய்கின்றன. குகையின் உச்சியில் ஆங்காங்கே இருக்கும் சிறிய துவாரம் வழியே வரும் சிறிய வெளிச்சத்தின் துணையுடன் பறக்கும் ஒன்றிரண்டு வவ்வால்களைப் பார்க்கமுடிந்தது. கையில் இருக்கும் மின்விளக்கை வவ்வால்களை நோக்கி அடிக்கவேண்டாம் என வழிகாட்டியினால் அறிவுறுத்தப்பட்டது. ஏனெனில் வெளிச்சம் அவற்றை கீழே விழவைத்து வவ்வால்கள் மரணிக்கநேரிடும். வவ்வால்களைப் பெருவாரியாக பார்க்கமுடியவில்லையே தவிர அவற்றின் கீச்சிடும் சத்தம் குகைமுழுதும் நிரம்பியிருந்தது. எங்கே மேலே தொங்குகின்ற வவ்வால் கீழே விழுந்து பிறாண்டிவிடுமோ என்ற பயத்தில டோர்ச்லைட்டை மேலே அடிக்கவே இல்லை.

குகைக்குள்ளே வவ்வால் தவிர இன்னும் பல உயிர்கள் வாழ்கின்றன. நுண்ணுயிர்கள் பிரிகையடையச் செய்யும்  வவ்வால்களின் கழிவுகளை உட்கொள்கின்றன. இருட்டிலே இருப்பதனால் சிலவற்றிற்கு கண்கள் கிடையது. சில உணர்க்கொம்புகள் கொண்டவை. மலேசியா மற்றும் அவுஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் ஒருவகை சிலந்தி உட்பட சிலவகை சிலந்திகளும் காணப்படுகின்றன. வழிகாட்டி கூறிய ஒரு விடயம் மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அது வவ்வால்களை உண்டு வாழும் பாம்பு. தற்போதுவரை பன்னிரண்டு பாம்புகள் மட்டுமே அங்கு வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் ஒன்றை காணும் அதிஷ்டம் கிடைக்கவில்லை.

இவற்றையெல்லாம் விட மிகவும் அழகாக இருந்தது குகையின் பாறை கட்டமைப்பு. Sedimentation Rock வகையைச் சேர்ந்தது. நீரோட்டத்தோடு கலந்துள்ள கனிமங்கள் மூலம் சில இடங்களில் சிறிய சிறிய புடைப்புக்களாக பாறை வளர்கிறது. வளர்வது என்றால் மரம் வளர்வது போல இல்லை. வருடத்துக்கு ஒரு மில்லிமீட்டர் அல்லது  இரு மில்லிமீட்டர். வழிகாட்டி காட்டிய ஒரு சிறிய பகுதி உருவாக்க 400 வருடங்கள் எடுத்துள்ளதாம். ஒரு இடத்தில் குகையின் மேல்பகுதியில் இருந்து அடிவரை இருந்த பாறைத் தொகுதியின் வயது மில்லியன் வருடங்கள் என்று சொன்னபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பாறைகளின்மேல் ஓடும் நீரோட்டத்தின் காரணமாக அழுத்தமான மேற்பரப்புடனும் வளைந்த மேற்பரப்புடனும் பாறைகள் காணப்பட்டன. குறுகலான ஒரு இடத்தில் செல்லும்போது மிகவும் குளிர்ச்சியான தென்றலை உணரமுடிந்தது. ஒரு இடத்தால் நுழையும் காற்று அந்த குறுகலான இடத்தில் சிறிது வேகமாகவும் குளிர்ச்சித்தன்மையோடும் வீசுவதால் அதை Wind Tunnel ஆன அழைக்கின்றனர். வீசும் காற்று காரணமாக அவ்விடத்தில் உள்ள பாறைகள் உட்குழிந்த வளைவுகளோடு காணப்படுகின்றன. இன்னும் சிறிது தூரம் சென்றதும் வழிகாட்டி அனைவரது விளக்குகளையும்  அணைக்கச் சொன்னார். அணைத்ததும் கும்மிருட்டு. கண்களை திறந்து மூடியும் ஒன்றுமே தெரியவில்லை. இருட்டு எம்மை விழுங்கி விட்டது போலவும் இருட்டில் நீச்சல் அடிப்பது போலவும் உணரமுடிந்தது. வவ்வால்களின் கீச் கீச் சத்ததோடு இருட்டுக்குள் நிற்பது புதுமையான அனுபவமாக இருந்தது.

இந்த குகையும் மனிதனின் கரங்களில் சிக்கி சின்னாபின்னமாகாமல் இல்லை. 1970 களில் முதல் முறையாக மனிதர்கள் பார்வைக்காக திறந்துவிட்டபோது கட்டுப்பாடு இல்லாது குகை சுவர்களில் பெயரை எழுதுதல் பாறைகளை உடைத்தல் போன்றவற்றால் குகைவாழ் ஜீவராசிகள் கடும் ஆபத்தைச் சந்திக்க நேர்ந்தது. அதனால் சில வருடங்கள் மக்கள் நடமாட்டம் தடுக்கப்பட்டு 1980 களில் மீண்டும் பார்வைக்கு விடப்பட்டது. பாறைகளில் எழுதிய பெயர்களை அழிக்கும்போது பாறைகளின் கட்டமைப்பு மாறுதல் மற்றும் அழுத்தமான வழவழப்பான மேற்பரப்பு இல்லாதுபோதல் போன்ற காரணங்களால் இப்போதும் சில இடங்களில் மனிதனின் கைவண்ணங்களைக் காணலாம். தற்போது குகையின் பராமரிப்பு பணிகள்  Cave Management Group இனால் ஒரு சேவை போல நடத்தப்படுகின்றது. சுற்றுலா பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணம் குகையின் பராமரிப்பிற்கு உதவுகின்றது. மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

அரைமனதோடு உள்ளே சென்றோம். ஆனால் உள்ளே பார்த்த கட்சிகள் மனநிறைவைத் தந்தன. இந்த இருட்டு குகை இயற்கை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதில் ஐயமில்லை. அங்கே பார்த்தது கேட்டதில் நினைவில் இருப்பதை எழுதியுள்ளேன். தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.



No comments:

Post a Comment