Saturday, September 10, 2016

அங்கோர்வாட் - 3 : சியாம் ரெப் நகரம்

அதிகாலை மறுபடியும் அங்கோர்வாட் சென்று சூரிய உதயத்தைப் பார்ப்பதாக முடிவுசெய்தோம். இரவு நேரம் கழித்து உறங்கச்சென்றதால் காலையில் எங்களால் எழுந்திருக்கவே முடியவில்லை. வெளியே மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. புறப்படுவதாக இருந்த நேரம் கடந்திருந்தது. நாங்கள் யாரும் காலையில் எழுந்திருக்காததால் பிரவீன் மட்டும் தனியே சென்றிருந்தான் சூரியயுதயத்தைப் புகைப்படம் எடுப்பதற்காக. துரதிஷ்டவசமாக அன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சூரியயுதயத்தை காணமுடியவில்லை. அன்றைய எமது நாள் தோல்வியுடன் தொடங்கியது.

"சியாம் ரெப்" ல் உள்ள சுற்றுலாத்தளங்களைபற்றி விபரங்களைச் சேகரித்து வைத்திருந்த துவாரகசிங்கம் செல்லவேண்டிய இடங்களை பட்டியலிட்டதும் ஒரு வாகனமோட்டியுடன் பேரம்பேசி செல்லவேண்டிய இடங்களை முடிவுசெய்தோம். 

முதலில் "kulen mountain" செல்வதென முடிவானது. ஏனெனில் அதுவே தொலைவில் இருந்தது. அதற்கு தனியாக அனுமதிச்சீட்டு வாங்கவேண்டும். அனுமதிச்சீட்டு பெறுமிடம் எமது விடுதியில் இருந்து சிறிது தூரத்தில் அமைந்திருந்தது. அனுமதிச்சீட்டை வாங்கிக்கொண்டு kulen mountain நோக்கிச்சென்றோம். செல்லும் வழியில் சியம் ரெப் குடியிருப்புகளை கணமுடிந்தது. பெரும்பாலான வீடுகள் மரத்தால் கட்டிய வீடுகள். வேலிகள் எதுவும் காணப்படவில்லை. மழைக்காலத்தில் வெள்ளம் தேங்கிநிற்கும் பகுதிபோலும். மரக்கட்டைகளின் உதவியுடன் வீடுகள் தரையைவிட இரண்டு அல்லது இரண்டரை அடி உயரத்தில் காணப்பட்டது.

kulen mountain ல் முதலில் ஆயிரம் லிங்கங்கள் என கூறப்படும் இடத்தைச் சென்றடைந்தோம். இங்கிருந்து செல்லும் ஆற்று நீர்தான் புராதன அங்கோர்வாட் நகருக்கு நீர் வழங்கியது. எனவே ஆற்று நீரை புனிதப்படுத்த ஆற்றில் ஏராளமான சிறிய சிறிய லிங்கங்களை செதுக்கியுள்ளார்கள். இவ்விடத்தில் ஆற்றில் இறங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் சென்றபோது ஆற்றில் நீரோட்டம் குறைவாகவும் தெளிவாகவும் இருந்ததால் லிங்கங்களை நன்றாகப் பார்க்கக்கூடியதாக இருந்தது. அங்கிருந்து சிறிது கீழ்நோக்கி பயணம் செய்து ஒரு அருவியை அடைந்தோம். அருவி அவ்வளவு பெரிதில்லை. ஆனாலும் வீசும் காற்றினால் நீர்த்துளிகள் விசிறப்பட்டு அந்த இடமே குளிர்ச்சியாக இருந்தது.

Kulen Mountain ல் உள்ள அருவி
 ஆயிரம் சிவலிங்கம் எனக்குறிப்பிடப்படும் இடம்

சிறிய குன்று ஒன்றில் அமைந்திருக்கும் புத்தகோயில் ஒன்றைச்சென்று பார்த்தோம். அங்கு குன்றுமேலே சயனநிலையில் உள்ள புத்தர் சிலை ஒன்றை செதுக்கியுள்ளார்கள். பிற்காலத்தில் அவ்விடத்தில் சிறிய கோயிலைக்கட்டியுள்ளார்கள் போலும். இந்த புத்தர் சிலை அங்கோர்வாட் காலத்துக்கு பிற்பட்டதுபோல் தெரிகிறது.

Kulen Mountain ல் இருந்து திரும்பும்போது நண்பகல் ஆகிவிட்டது. எங்கேயாவது சாப்பிடுவோம் என சிறிய உணவுக்கூடத்தில் நிறுத்தச்சொன்னோம். ஆனால் வாகனச்சாரதி சரியாக புரிந்துகொள்ளாமல் சற்று பெரிய நவீன உணவகம் ஒன்றிற்கு எம்மை அழைத்துச்சென்றார். மறுபடியும் அவரிடம் விளங்கப்படுத்தி சிறியகடை ஒன்றைச்சென்றடைந்தோம். பயணம் செல்லும்போது அப்பிராந்திய உணவுகளை பாதையோர அல்லது சிறிய உணவுக்கூடங்களிலேயே உண்ணுவது எமது வாடிக்கை. அங்கு அப்பிரதேச பாரம்பரியமான(traditional) சுவை கிடைக்கும் என்பது நாங்கள் கண்டறிந்த உண்மை. சுருக்கமாகச் சொல்வதானால் "தரை லோக்கல்" உணவுப்பிரியர்கள் நாங்கள். சுவைதான் முக்கியம் எங்களுக்கு. சியாம் ரெப் பாரம்பரிய உணவையும் அருகில் இருந்த சிறுஅங்காடியில் இருந்து வாங்கிய மீன் பொரியலையும் ஒரு கைபார்த்தோம்.

இன்னமும் அரைநாள் மட்டுமே எமக்கு இருந்தது. அங்கோர் தோம் நிச்சயம் பார்த்தக வேண்டும். அங்கோர் தோம் ஏறத்தாள 17 ம் நூற்றாண்டளவில் கைவிடப்பட்டபின் கட்டுக்கு இரையாகிவிட்டது. பெரிய பெரிய விருட்சங்கள் கட்டிடங்களை தகர்த்துவிட்டன. அங்கோர் தோம் ன் கட்டிட அமைப்பு அங்கோர் வாட் போன்றதுதான். ஆனால் "அங்கோர் தோம்" ன் அழகே கட்டிடங்களுடன் சேர்ந்து வளர்ந்த விருட்சங்கள்தான். கட்டிடத்திலுள்ள கற்களை தகர்த்துக்கொண்டும் அதேநேரம் பெரிய பெரிய கற்களை பற்றிப்பிடித்தபடி வளர்ந்து நிற்கும் மரங்கள் மற்ற இடங்களை விட தனித்துவமான அழகைக் கொடுக்கிறது. தகர்ந்து கற்குவியலாக இருக்கும் சில மண்டபங்கள் யுனிசெஃப் ன் அனுசரணையுடன் திரும்பவம் நிர்மாணிக்கப்படுகின்றன. மறுபடியும் கற்பாளங்களை அடுக்கிக் கட்டப்படுவதால் பழைய வடிவத்தைக் கொண்டுவருவதைக் காணக்கூடியதாக இருந்தாலும் ஒவ்வொரு கற்பாளத்தையும் சரியான இடத்தில் வைக்கமுடியாத காரணத்தால் புராதன கட்டிடத்தில் உள்ள நேர்த்தியும் அழகும் இல்லையென்றே சொல்லலாம். அங்கோர் வாட் செல்பவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம் அங்கோர் தோம்.

நாங்கள் தங்கியிருந்த விடுதியின் பெயர் Mother Home Inn அது ஒரு மூன்று நட்சத்திர விடுதி. உபசரிப்பு நன்றாக இருந்தது. தங்கும் அறைகள், குளியலறை மிகவும் சுத்தமாக பரமரிக்கப்பட்டிருந்தன. கொடுத்த பணத்துக்கு பெறுமதியுடையதாக இருந்தது. காலையில் நாங்கள் விமானநிலையத்துக்குப் போவதற்கு வசதியாக காலை உணவுநேரத்துக்கு சிறிது முன்னதாகவே எமக்கு உணவு வசதி ஏற்படுத்தித் தந்தார்கள்.

ஆகமொத்ததில் அங்கோர் வாட் பயணம் திருப்தியாக முடிவடைந்தது. முதல்நாள் மலேசிய விமானநிலையத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் தவிர அனைத்தும் நன்றாகவே அமைந்தன. அழகான ஆச்சரியப்படுத்தும் இடத்தில் விடுமுறையைக் கழித்த மகிழ்வுடனும் இனிய நினைவுகளுடனும்  சியம் ரெப்பிலிருந்து விமானமேறினோம்.

எங்களது பயணத்தில் ஒருநாள் எதிர்பாராதபடி பயனற்றுப்போனதால் நேரம் குறைவாகவே இருந்தது. அங்கோர் வாட் செல்பவர்கள் குறைந்தது முழுமையாக இரண்டு நாட்கள் சியம் ரெப் ல் இருக்கும்படி திட்டமிடுவது நல்லது.

புகைப்படங்கள் : பிரவீன்
தொடர்புடைய பதிவுகள்
அங்கோர்வாட் - 1 : விமானநிலையத்தில் வாக்குவாதம்
அங்கோர்வாட் - 2 : கற்களின் சாம்ராஜ்யம்
                                      

Friday, June 10, 2016

நம்பிக்கை

வானம் இருண்டு கிடந்தது. ஆனால் மழைதான் வரமாட்டேன் என அடம்பிடித்துக்கொண்டிருந்தது. சிலநாட்களாகவே இப்படித்தான். மழை இல்லாமல் பயிர்கள் வாடிக்கிடந்தன. கிணற்றிலும் தண்ணீர் வற்றிவிட்டது. வரப்பில் இருந்து வெறித்தபார்வை பார்த்துக்கொண்டிருந்தவரின் மனதில் பல எண்ணங்களும் சூறாவளியாக சுழன்றடித்தன. 

சிறுபோகம் நடுவதா இல்லையா என பலவாறாக யோசித்து பயிர் நட்டிருந்தார். இறைவன்மேல் பாரத்தைப் போட்டு மனைவியின் தாலிக்கொடி அடைவுக்கடை வாசலைத்தாண்டியிருந்தது. அவளிடம் கடைசியாக இருந்த நகையும் அதுதான். பிள்ளைகளின் படிப்புச்செலவுகள் மளிகைக்கடை பாக்கிகள் கண்முன்னே விஸ்வரூப தரிசனம் காட்டின. இந்தமுறை எல்லாம் சரிவந்தால் கையூன்றி நிமிர்ந்திடலாம் என்றால் இயற்கை விடமாட்டேன் என்கிறது. 

ஒவ்வொரு முறையும் முயன்று பார்ப்பதும் கீழே விழுவதுமாக இருக்கிறது அவரது வாழ்வு. விவசாயத்தை விட்டால் வேறு தொழிலும் தெரியாது அவருக்கு. இயற்கை சமநிலை குழம்பியிருப்பது நன்றாகவே தெரிகிறது ஆனாலும் என்ன செய்வது. தொலைக்காட்சியிலும் செய்திதாள்களிலும் அடிக்கடி பருவநிலைமாற்றம் பற்றிய செய்திகளை விடாது பார்த்தும் வாசித்தும் இயற்கையை புரிந்துகொள்ள முடியவில்லை. எல் நினோவையும் லா நினோவையும் இப்பொழுதுதான் அவர் கேள்விப்படுகிறார். இது எதுவுமே தெரியாதுதான் அவர் அப்பனும் பாட்டனும் இயற்கையை புரிந்து விவசாயம் செய்தவர்கள். 

இன்று பள்ளிமுடிந்து வந்த மகள் தாயாரிடம் சொல்லிக்கொண்டிருந்தது அவரின் காதிலும் விழுந்தது. நகரமயமாக்கலும் காடழிப்பும் எவ்வாறு பூமியை வெப்பமடைய வைக்கிறது என்றும் மழைவீழ்ச்சியை குறைக்கிறது என்றும் மகள் தாயாருக்கு விளக்கிக்கொண்டிருந்தாள். இன்று பள்ளியில் படித்தவற்றையெல்லாம் கூறிவிடவேண்டும் என்ற ஆர்வம் அவளிடம் தெரிந்தது. இதையெல்லாம் காதுகொடுத்து கேட்டுக்கொண்டிருந்த அவருக்கு தான் படிக்காவிட்டாலும் தனது மகள் ஆர்வமுடன் படிப்பது மனநிறைவையும் பெருமிதத்தையும் கொடுத்தது. 

பெண்கல்வியின் முக்கியத்தை நன்கு உணர்ந்தவர்தான் அவர். அதேநேரம் உலகமயமாக்கலுக்கும் பெருகிவரும் காடழிப்புக்கும் எதிராக தன்னைப்போன்ற எளிய விவசாயி என்ன செய்யமுடியும் என்று யோசித்தபொழுது ஆயாசமும் அசதியுமே தோன்றியது. எப்போது இயற்கையை வஞ்சிக்கும் தவற்றைச் செய்யத்தொடங்கினோம் என யோசித்துப்பார்த்தார். ஆனால் விடைதான் இல்லை. யோசனையோடு இருந்தவரின் கையில் விழுந்தது ஒருதுளி மழை. சிந்தனை கலைந்து அண்ணாந்து வானத்தைப்பார்த்தார். 

கிழக்கிலிருந்து ஒரு மழைமேகம் வருவது தெரிந்தது. மனதில் நிறைந்த நம்பிக்கையுடன்திரும்பி பயிர்களைப்பார்த்தவருக்கு பயிர்கள் சிரிப்பது போலவே தோன்றியது.

Saturday, January 16, 2016

அங்கோர்வாட் - 2 : கற்களின் சாம்ராஜ்யம்

மறுபடியும் கோலாலம்பூர் விமானநிலையம். நேற்று எங்களை செல்லாவிடாமல் தடுத்த அந்த கடமைவீரனை தேடிப்பார்த்தோம். நாங்கள் வருவது தெரிந்து ஓடிவிட்டான் போலும். பாவம் பிழைத்துப்போகட்டும் என்று அவனை மன்னித்துவிட்டு நாங்கள் விமானமேறினோம். மலேசியாவில் இருந்து புறப்பட்டு ஏறத்தாழ ஒன்றரை மணித்தியாலங்களில் சியாம் ரெப் நிலப்பரப்பு கண்ணுக்குத் தென்பட்டது. பாம்பு போல நெளிந்து செல்லும் வீதிகளும் குறைந்த எண்ணிக்கையில் தென்பட்ட வீடுகளும் பரந்து விரிந்த விவசாய நிலங்களும் இலங்கையில் உள்ள பாரம்பரிய விவசாய கிராமங்களை நினைவூட்டியது. 

விமானம் தரையிறங்கியதும் விரைவாக அனைவருக்கும் முன்னதாக குடிவரவு நிலையத்தையடைந்தோம். இலங்கையர்களுக்கு விசேட வரவேற்பு கிடைக்குமென்பதால் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. எதிர்பார்த்தது போலவே எனது கடவுச்சீட்டை சமர்ப்பித்ததும் அங்கு கடமையில் இருந்த அதிகாரி தனது உயரதிகாரியை அழைத்தார். அவர் எங்கள் அறுவரையும் அழைத்துச்சென்று ஒரு அறையில் அமரவைத்தார். எங்களிடம் விசாரணை தொடங்கியது. அங்கே வந்த காரணம், தற்போது சிங்கப்பூரில் செய்யும் வேலை மற்றும் எமது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அனைத்தும் பிரதியெடுக்கப்பட்டன. ஏறக்குறைய முப்பது நிமிடங்களின் பின்னர் கம்போடியாவிற்குள் செல்ல அனுமதியளிக்கப்பட்டது.

விமானநிலையத்தின் வெளியே வந்ததும் நாங்கள் முன்பதிவு செய்த விடுதியின் வாகனமோட்டி எமக்காக காத்திருந்தார். எம்மை அழைத்துச்சென்று வாகனத்தில் வலதுபக்கமாக ஏறச்சொன்னார். எறியபின்னர்தான் புரிந்தது அங்கே புழக்கத்திலிருப்பது அமெரிக்க டொலர் மட்டுமல்ல வீதியின் வலதுபுறமாக வாகனமோட்டுவதும் என்று. விடுதிக்கு சென்று சீக்கிரமாக தயாராகி அங்கோர்வாட்டுக்கு புறப்பட்டோம். அங்கோர்வாட்டுக்கான நுழைவுச்சீட்டு  மேலும் பல இடங்களுக்கான அனுமதியையும்  கொண்டுள்ளது. அனுமதிச்சீட்டு ஒருநாள், மூன்றுநாட்கள் மற்றும் ஏழுநாட்கள் என மூன்றுவகைப்படும். மூன்றுநாட்களுக்கான அனுமதிச்சீட்டு 30 அமெரிக்க டொலர் பெறுமதியுடையது.

இதுவரை தகவல்களாகவும் காணொளிகளாகவும் அறிந்திருந்த அங்கோர்வாட்டைப் பார்த்ததும் ஒரு பரவசம் தொற்றிக்கொண்டது. ஏற்கனவே நாம் அறிந்திருந்தவற்றை அங்கிருந்தவற்றுடன் ஒப்பிட்டுப்பார்க்கத் தொடங்கினோம். உள்ளே செல்லச்செல்ல கோயிலின் பிரமாண்டம் கண்முன்னே விரியத்தொடங்கியது.

சுற்று மண்டபத்தின் நான்கு பக்க சுவர் முழுவதும் இராமாயண மற்றும் மகாபாரத காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருந்தன. நூற்றாண்டுகளானாலும் சோபையிழக்காத சிற்பவேலைப்பாடுகள். எத்தனையெத்தனை உளி ஏந்திய கரங்கள் வருடக்கணக்காக இந்த சிற்பங்களை செதுக்கிருக்கும் எனநினைக்கும்போது மலைப்பாக இருந்தது.

கட்டடத்தின் அமைப்பை உற்றுநோக்கினால் அது மற்றுமொரு ஆச்சரியம். அளவாக வெட்டப்பட்ட மில்லியன் கணக்கான கற்களைக்கொண்டு அக்கோயில் கட்டப்பட்டிருந்தது. கற்களுக்கிடையில் சாந்து போன்ற எதுவும் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. கற்களை தேவையான அளவுகளில் உள்ளே நகர்த்திவைப்பதன் மூலமே கூரை மற்றும் கோபுரம் அனைத்தும் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லும் தனது பாரத்திலும் மேலே உள்ள கல்லின் பாரத்தாலும் நிலையாக நிற்கிறது. சில இடங்களில் கூரையில் இருக்கும் கற்கள் விழுந்துவிடுமோ என அஞ்சவைக்கிறது. இதுவும் ஒருவகையான "ஆர்ச்" தொழில்நுட்பம் போல் தோன்றியது.

கோயிலின் ஒவ்வொரு தளமும் முதல் தளத்தைவிட உயரம் அதிகம். கோயிலின் கருவறை அமைந்திருக்கும் தளம்தான் மிக அதிக உயரமுடைய தளம். அதற்குச் செல்ல ஏறத்தாள ஐம்பது படிகள் ஏறவேண்டும் அதற்கு முந்தைய தளத்திலிருந்து. தற்போது இரும்பாலும் மரப்பலகையாலும் புதிய படிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அசலான கற்படிகள் மிகவும் குறுகலானவை. அத்தகைய படிகளில் முற்காலத்தில் எவ்வாறுதான் சென்றுவந்தார்களோ? கருவறை அமைந்திருக்கும் பகுதியின் உறுதித்தன்மைக்காக (stability) குறிப்பிட்ட எண்ணிக்கையான நபர்களே அனுமதிக்கப்படுகிறார்கள்.

கருவறை நான்கு பக்கமும் வாயில்களைக்கொண்டதும் மேலே கோபுரம் ஒன்றையும் கொண்டுள்ளது. நான்கு வாயில்களிலும் சுவரெழுப்பி உள்ளே இருக்கும் ஆரம்பகால தலமூர்த்தி மறைக்கப்பட்டுள்ளது. சுவரின் வெளியே நான்கு பக்கத்திலும் நான்கு புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அங்கோர்வாட் இந்துக்கோயிலாக இருந்தபோது விஷ்ணுவுக்காக கட்டப்பட்டது. கருவறையில் மறைக்கப்பட்டு தற்போதும் உள்ளே இருக்கும் சிலை விஷ்ணுவின் ஒரு அம்சமான "பாகன்" (Bakan) என அழைக்கப்படுகிறது.

அடுத்ததாக நாங்கள் பார்த்தது "பயன் கோயில்" (Bayon Temple). அங்கோர்வாட்டில் இருந்து ஏறத்தாள நான்கு கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது ஆரம்பகாலத்தில் பௌத்த ஆலயமாக கட்டப்பட்டு பின்னால் இந்து ஆலயமாக மாற்றப்பட்டு மறுபடியும் பௌத்த ஆலயமாகத் திகழ்கிறது. இவ்வாலயமும் அங்கோர்வாட் போலவே கற்களை அடுக்கியே கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பு கற்களை அடுக்கி அதன்மேல் செதுக்கப்பட்ட பிரமாண்டமான முகம்கள். இக்கோயிலின் நுழைவாயிலிலுள்ள சுவற்றிலும் சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. இங்கே சென்றபோது உள்ளே பௌத்த பிக்குகள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கூடியிருந்து வழிபாடுகள் செய்வதைப் பார்க்கமுடிந்தது.



பயன் கோயிலை சுற்றிப்பார்த்து முடிக்கும்போது மாலை ஐந்து மணிக்கு மேலாகிவிட்டது. நடந்துசெல்லும் தொலைவில் அமைந்திருக்கும் மேலுமிரு கற்கோயில்களையும் சென்று பார்த்தோம். ஆனால் அக்கோயில்கள் பூட்டப்பட்டிருந்தன. அங்கு குறிப்பிடத்தக்க விசேடஅம்சம் எதுவும் தெரியவில்லை  என்பதால் நாங்களும் உள்ளேசெல்ல ஆர்வப்படவில்லை.


அனைத்தையும் பார்த்து முடிக்கும்போது இருட்டத்தொடங்கிவிட்டது. அன்றையநாள் முழுவதும் பார்த்த இடங்கள் ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது. எவ்வளவு கற்கள்! எங்கிருந்தோ வெட்டியெடுத்து அவற்றை வேறொரு இடத்துக்கு கொண்டுவந்து பின்னர் அவற்றை அளவாக வெட்டி அதையெல்லாம் ஒன்றுசேர்த்து அழகான பிரமாண்டமான கட்டடங்களாகக் கட்டிமுடித்து அதன் சுவர்களில் சிற்பவேலைப்பாடுகள் செய்துமுடித்ததை நினைக்கும்போது ஏற்படும் பிரமிப்புக்கு அளவேயில்லை.

தொடர்புடைய பதிவு: அங்கோர்வாட் - 1 : விமானநிலையத்தில் வாக்குவாதம்