Saturday, September 10, 2016

அங்கோர்வாட் - 3 : சியாம் ரெப் நகரம்

அதிகாலை மறுபடியும் அங்கோர்வாட் சென்று சூரிய உதயத்தைப் பார்ப்பதாக முடிவுசெய்தோம். இரவு நேரம் கழித்து உறங்கச்சென்றதால் காலையில் எங்களால் எழுந்திருக்கவே முடியவில்லை. வெளியே மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. புறப்படுவதாக இருந்த நேரம் கடந்திருந்தது. நாங்கள் யாரும் காலையில் எழுந்திருக்காததால் பிரவீன் மட்டும் தனியே சென்றிருந்தான் சூரியயுதயத்தைப் புகைப்படம் எடுப்பதற்காக. துரதிஷ்டவசமாக அன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சூரியயுதயத்தை காணமுடியவில்லை. அன்றைய எமது நாள் தோல்வியுடன் தொடங்கியது.

"சியாம் ரெப்" ல் உள்ள சுற்றுலாத்தளங்களைபற்றி விபரங்களைச் சேகரித்து வைத்திருந்த துவாரகசிங்கம் செல்லவேண்டிய இடங்களை பட்டியலிட்டதும் ஒரு வாகனமோட்டியுடன் பேரம்பேசி செல்லவேண்டிய இடங்களை முடிவுசெய்தோம். 

முதலில் "kulen mountain" செல்வதென முடிவானது. ஏனெனில் அதுவே தொலைவில் இருந்தது. அதற்கு தனியாக அனுமதிச்சீட்டு வாங்கவேண்டும். அனுமதிச்சீட்டு பெறுமிடம் எமது விடுதியில் இருந்து சிறிது தூரத்தில் அமைந்திருந்தது. அனுமதிச்சீட்டை வாங்கிக்கொண்டு kulen mountain நோக்கிச்சென்றோம். செல்லும் வழியில் சியம் ரெப் குடியிருப்புகளை கணமுடிந்தது. பெரும்பாலான வீடுகள் மரத்தால் கட்டிய வீடுகள். வேலிகள் எதுவும் காணப்படவில்லை. மழைக்காலத்தில் வெள்ளம் தேங்கிநிற்கும் பகுதிபோலும். மரக்கட்டைகளின் உதவியுடன் வீடுகள் தரையைவிட இரண்டு அல்லது இரண்டரை அடி உயரத்தில் காணப்பட்டது.

kulen mountain ல் முதலில் ஆயிரம் லிங்கங்கள் என கூறப்படும் இடத்தைச் சென்றடைந்தோம். இங்கிருந்து செல்லும் ஆற்று நீர்தான் புராதன அங்கோர்வாட் நகருக்கு நீர் வழங்கியது. எனவே ஆற்று நீரை புனிதப்படுத்த ஆற்றில் ஏராளமான சிறிய சிறிய லிங்கங்களை செதுக்கியுள்ளார்கள். இவ்விடத்தில் ஆற்றில் இறங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் சென்றபோது ஆற்றில் நீரோட்டம் குறைவாகவும் தெளிவாகவும் இருந்ததால் லிங்கங்களை நன்றாகப் பார்க்கக்கூடியதாக இருந்தது. அங்கிருந்து சிறிது கீழ்நோக்கி பயணம் செய்து ஒரு அருவியை அடைந்தோம். அருவி அவ்வளவு பெரிதில்லை. ஆனாலும் வீசும் காற்றினால் நீர்த்துளிகள் விசிறப்பட்டு அந்த இடமே குளிர்ச்சியாக இருந்தது.

Kulen Mountain ல் உள்ள அருவி
 ஆயிரம் சிவலிங்கம் எனக்குறிப்பிடப்படும் இடம்

சிறிய குன்று ஒன்றில் அமைந்திருக்கும் புத்தகோயில் ஒன்றைச்சென்று பார்த்தோம். அங்கு குன்றுமேலே சயனநிலையில் உள்ள புத்தர் சிலை ஒன்றை செதுக்கியுள்ளார்கள். பிற்காலத்தில் அவ்விடத்தில் சிறிய கோயிலைக்கட்டியுள்ளார்கள் போலும். இந்த புத்தர் சிலை அங்கோர்வாட் காலத்துக்கு பிற்பட்டதுபோல் தெரிகிறது.

Kulen Mountain ல் இருந்து திரும்பும்போது நண்பகல் ஆகிவிட்டது. எங்கேயாவது சாப்பிடுவோம் என சிறிய உணவுக்கூடத்தில் நிறுத்தச்சொன்னோம். ஆனால் வாகனச்சாரதி சரியாக புரிந்துகொள்ளாமல் சற்று பெரிய நவீன உணவகம் ஒன்றிற்கு எம்மை அழைத்துச்சென்றார். மறுபடியும் அவரிடம் விளங்கப்படுத்தி சிறியகடை ஒன்றைச்சென்றடைந்தோம். பயணம் செல்லும்போது அப்பிராந்திய உணவுகளை பாதையோர அல்லது சிறிய உணவுக்கூடங்களிலேயே உண்ணுவது எமது வாடிக்கை. அங்கு அப்பிரதேச பாரம்பரியமான(traditional) சுவை கிடைக்கும் என்பது நாங்கள் கண்டறிந்த உண்மை. சுருக்கமாகச் சொல்வதானால் "தரை லோக்கல்" உணவுப்பிரியர்கள் நாங்கள். சுவைதான் முக்கியம் எங்களுக்கு. சியாம் ரெப் பாரம்பரிய உணவையும் அருகில் இருந்த சிறுஅங்காடியில் இருந்து வாங்கிய மீன் பொரியலையும் ஒரு கைபார்த்தோம்.

இன்னமும் அரைநாள் மட்டுமே எமக்கு இருந்தது. அங்கோர் தோம் நிச்சயம் பார்த்தக வேண்டும். அங்கோர் தோம் ஏறத்தாள 17 ம் நூற்றாண்டளவில் கைவிடப்பட்டபின் கட்டுக்கு இரையாகிவிட்டது. பெரிய பெரிய விருட்சங்கள் கட்டிடங்களை தகர்த்துவிட்டன. அங்கோர் தோம் ன் கட்டிட அமைப்பு அங்கோர் வாட் போன்றதுதான். ஆனால் "அங்கோர் தோம்" ன் அழகே கட்டிடங்களுடன் சேர்ந்து வளர்ந்த விருட்சங்கள்தான். கட்டிடத்திலுள்ள கற்களை தகர்த்துக்கொண்டும் அதேநேரம் பெரிய பெரிய கற்களை பற்றிப்பிடித்தபடி வளர்ந்து நிற்கும் மரங்கள் மற்ற இடங்களை விட தனித்துவமான அழகைக் கொடுக்கிறது. தகர்ந்து கற்குவியலாக இருக்கும் சில மண்டபங்கள் யுனிசெஃப் ன் அனுசரணையுடன் திரும்பவம் நிர்மாணிக்கப்படுகின்றன. மறுபடியும் கற்பாளங்களை அடுக்கிக் கட்டப்படுவதால் பழைய வடிவத்தைக் கொண்டுவருவதைக் காணக்கூடியதாக இருந்தாலும் ஒவ்வொரு கற்பாளத்தையும் சரியான இடத்தில் வைக்கமுடியாத காரணத்தால் புராதன கட்டிடத்தில் உள்ள நேர்த்தியும் அழகும் இல்லையென்றே சொல்லலாம். அங்கோர் வாட் செல்பவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம் அங்கோர் தோம்.

நாங்கள் தங்கியிருந்த விடுதியின் பெயர் Mother Home Inn அது ஒரு மூன்று நட்சத்திர விடுதி. உபசரிப்பு நன்றாக இருந்தது. தங்கும் அறைகள், குளியலறை மிகவும் சுத்தமாக பரமரிக்கப்பட்டிருந்தன. கொடுத்த பணத்துக்கு பெறுமதியுடையதாக இருந்தது. காலையில் நாங்கள் விமானநிலையத்துக்குப் போவதற்கு வசதியாக காலை உணவுநேரத்துக்கு சிறிது முன்னதாகவே எமக்கு உணவு வசதி ஏற்படுத்தித் தந்தார்கள்.

ஆகமொத்ததில் அங்கோர் வாட் பயணம் திருப்தியாக முடிவடைந்தது. முதல்நாள் மலேசிய விமானநிலையத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் தவிர அனைத்தும் நன்றாகவே அமைந்தன. அழகான ஆச்சரியப்படுத்தும் இடத்தில் விடுமுறையைக் கழித்த மகிழ்வுடனும் இனிய நினைவுகளுடனும்  சியம் ரெப்பிலிருந்து விமானமேறினோம்.

எங்களது பயணத்தில் ஒருநாள் எதிர்பாராதபடி பயனற்றுப்போனதால் நேரம் குறைவாகவே இருந்தது. அங்கோர் வாட் செல்பவர்கள் குறைந்தது முழுமையாக இரண்டு நாட்கள் சியம் ரெப் ல் இருக்கும்படி திட்டமிடுவது நல்லது.

புகைப்படங்கள் : பிரவீன்
தொடர்புடைய பதிவுகள்
அங்கோர்வாட் - 1 : விமானநிலையத்தில் வாக்குவாதம்
அங்கோர்வாட் - 2 : கற்களின் சாம்ராஜ்யம்
                                      

No comments:

Post a Comment