Wednesday, May 20, 2020

காக்கைக்கூடு

”வைக்கிங்” என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டாலே எனக்கு முதலில் ஞாபகம் வருவது சிறுவயதில் தமிழ்ப் பாடநூலில் இடம்பெற்ற ஒரு கதைதான். அந்தக்கதையின் சுருக்கம் என்னவென்றால் பண்டைய ஸ்கண்டிநேவிய பிரதேசத்தில் வாழ்ந்துவந்த மீனவர்கள் கடலாடும் போது புயல், கடற்சீற்றம் என்பனவற்றில் சிக்கி திசைதெரியாது தொலைந்துபோகிறார்கள். ஒருசிறுவன் இப்படியான சந்தர்ப்பத்தில் எவ்வாறு தமது கிராமத்தின் திசையைக் கண்டுபிடிக்கலாம் என்று யோசிக்கிறான். அதில் ஒரு வழியையும் கண்டடைகிறான். ஒருநாள் வயதான கடலோடி இன்று புயல் வரும் என கூறுகிறார் ஆனால் எனையோர் அவரைப் பொருட்படுத்தவில்லை. இந்தச் சிறுவன் மட்டும் அவர் கூறியதைக் கருத்தில்கொண்டு ஒரு மூடிய கூடையுடன் வருகிறான். படகுத்தலைவன் அக்கூடையை வைக்க இடமில்லை என்று கூறியதும் படகுத்தலைவனின் அனுமதியுடன் படகின் பாய்க்கம்பத்தின் உச்சியில் கட்டிவைத்துவிடுகிறான். நடுக்கடலுக்குச்சென்று மீன்பிடிக்கும் சமயத்தில் சீரான காலநிலை மோசமடைந்து புயல் அடிக்கிறது. பலமணிநேர அலைக்கழிப்புக்குப்பின்னர் காலநிலை சீரடைந்ததும் அவர்களுக்கு திசை தெரியவில்லை. அப்போது அச்சிறுவன் பாய்க்கம்பத்தில் ஏறிச்சென்று கூடையின் மூடியைத் திறந்ததும் அதிலிருந்து ஒருகாகம் வெளிவந்து படகை ஒருசுற்று சுற்றிவிட்டுப் பறந்து மறைந்தது. உடனே சிறுவன் காகம் சென்ற திசையில் படகைச்செலுத்துமாறு கூறினான். அவர்களும் தமது கிராமத்தை அடைந்தனர். அதன்பின்னரே படகில் காகத்தை கொண்டுசெல்லும் வழக்கம் தோன்றியதாக நம்பப்படுகிறது. அதன் ஞாபகமாகவே பிற்காலத்தில் கப்பலின் உச்சியில் ஏறி தொலைநோக்கியால் சுற்றுப்புறத்தை கண்காணிக்கும் இடமும் crow nest என அழைக்கப்படுகிறது.

வைக்கிங் இனத்தவர்கள் வாழ்ந்த ஸ்கண்டிநேவியா என்பது தற்போதைய நோர்வே, ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் அமைந்துள்ள பிரதேசம். ஐரோப்பிய வரலாற்றிலே எட்டாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி வைக்கிங் காலம் எனப்படுகிறது. எட்டாம் நூற்றாண்டில்தான் அவர்கள் முதல்முறையாக வெற்றிகரமாக கடல் கடந்து இங்கிலாந்தை அடைந்தனர். ஸ்கண்டிநேவியா மலைகளாலும் காடுகளாலும் மணல்வெளியாலும் சூழப்பட்ட இடம். அவர்களுக்கு விவசாயம் செய்ய போதுமான நிலம் இல்லை. ஆகவே அவர்கள் ஒவ்வொரு வருடமும் கிழக்கே ரஸ்யாவின் பிரதேசங்களுக்கு கோடைகாலத்தில் சென்று கொள்ளையடிப்பது வழக்கம். அச்செல்வத்தைக் கொண்டு அவர்களது குளிர்காலத்தைக் கழிக்கிறார்கள். மேற்கே இங்கிலாந்து செல்வச்செழிப்புடன் இருக்கும் செவிவழிச் செய்தி அவர்களை மேற்கே கடலோடத்தூண்டுகிறது. அப்பகுதி கடல் அதிக சீற்றத்துடன் இருப்பதாலும் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் இருப்பதாலும் அவர்களால் சரியாக மேற்கு நோக்கி பயணம் செய்ய முடியவில்லை. இங்கிலாந்தை நோக்கிச் சென்றவர்கள் காணாமல் போகிறார்கள் அல்லது மேற்கே நிலம் இல்லை என முடிவு செய்து தோல்வியுடன் திரும்புகிறார்கள். அவர்கள் முதன்முதலாக 8ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நோர்த்தம்பிரியா என்ற இடத்தில் வெற்றிகரமாக இறங்கி கொள்ளையடித்ததாக வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.


இந்த சம்பவத்தைக் கருவாக கொண்டு எடுக்கப்பட்ட தொடர்தான் வைக்கிங். அதில் நாயகனாக காட்டப்படும் ரக்னர் லோத்புரொக் உண்மையிலேயே ஒரு வைக்கிங் ஹீரோ. ரக்னர் பற்றிய தொல்கதை அவர்களிடையே இருக்கிறது. ஆனால் அதில் காட்டப்படும் ரக்னர் ஒன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்த மன்னன். அதில் கூறியவற்றையும் வைக்கிங் இங்கிலாந்தை அடைந்ததையும் சேர்த்து புனைவாக காட்டியுள்ளனர். தொடர்பற்றி தேடியபோது இது ஒன்றும் விபரணத் தொடர் இல்லை அனைத்தையும் உண்மையாக காட்டுவதற்கு. ஆனால் ஓரளவுக்கு நியாயம் செய்திருப்பதாகவே கருதப்படுகிறது. அயர்லாந்தில் வைத்து படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளனர்.  இலட்சியத்துடன் கூடிய விவசாயியாக சித்தரிக்கப்படும் ரக்னரின் எழுச்சி காட்டப்படுகிறது நான் இதுவரை  பார்த்த இரண்டு சீசன்களில். இன்னமும் நான்கு சீசன்கள் உள்ளன.

பூமியிலுள்ள நாகரிகங்களின் வரலாறுகளையும் நாடுகளின் வரலாறுகளையும் வெவ்வேறு மனித கலாச்சாரங்களையும் விரும்பித் தெரிந்துகொள்பவர்களுக்கு ஒரு சிறந்த தொடர் இது. நான் இதுவரை பார்த்த இரண்டு சீசன்களிலும் சேர்த்து வைக்கிங் நாகரிகம் மட்டுமல்லாது இங்கிலாந்தும் காட்டப்படுகிறது. அப்பொழுது கூட அதாவது 8ம் நூற்றாண்டளவில் கூட ஆங்கிலம் முழுதாக பிறக்கவில்லை. வழிபாடுகள் இலத்தீன் மொழியிலேயே செய்யப்படுகின்றன.  இணையத்தில் தேடியபோது அப்போதைய இங்கிலாந்தில் பேசிய மொழி Old English என்று கூறப்படுகிறது. 

வைக்கிங்களின் கடவுள்களாக ஓடின், தோர், லோக்கி மற்றும் பல கடவுள்களையும் கொண்டுள்ளனர். ஓடின், தோர், லோக்கி எமக்கு அறிமுகமானவர்கள்தான் மார்வல் படங்கள், கார்ட்டூன் மூலமாக. கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக ஓடின் உள்ளார். இடிமின்னலின் கடவுள் தோர். காதலுக்கு ஒரு கடவுள் உண்டு. மேலும் பல கடவுள்கள் உண்டு. இந்துசமயத்தில் உள்ளதுபோன்ற ஒரு நம்பிக்கை கடவுள்களில். இதற்கு காரணமாக நான் நினைப்பது ஆரம்பத்தில் மனிதர்கள் இயற்கையையே கடவுளாக வணங்கினர். பின்னர் அந்த சக்திகளை மனிதரூபத்தில் உள்ள கடவுள்களாக மாற்றினர். இயற்கையை கடவுளாக வழிபட்டதின் சான்றுகளை சிந்துவெளி நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைக்கிங் நாகரிகத்தின் தொடக்கத்தை ஆராய்ந்தால் அங்கேயும் ஏதேனும் சான்றுகள் இருக்கக்கூடும். ஆகவே வெவ்வேறு பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கும் கடவுளின் பெயர் வேறுவேறாக இருந்தாலும் கடவுளின் இயல்புகள் ஒத்துப்போவதைக் காணலாம். இதைவிட ஓடினுக்காக மிருகங்கள் மனிதர்களைப் பலிகொடுப்பது என வேதங்களில் கூறப்படும் யாகங்களை ஒத்ததாக இருக்கின்றன அவர்களின் வழிபாடுகள்.

இங்கிலாந்தில் கொள்ளையடித்த வைகிங் இங்கிலாந்து அரசியலிலும் தமது தடத்தைப் பதித்த நிகழ்ச்சிகள் வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. காரணம் வைக்கிங்களின் போர்த்திறன் மற்றும் சாவுக்குப் பயப்படாத மனவுறுதி. அவர்களது நிலவமைப்பு காரணமாக ஓங்கிய உடலுடன் திகழ்ந்தனர் வைக்கிங். போராட்டமே அவர்களது வாழ்க்கை. வளங்கள் இல்லாத்தால் கொள்ளையடித்து வரும் செல்வமே அவர்களது குடும்பத்திற்கான உணவு. ஆகவே இயற்கையாகவே குரூரமான போர்வீரர்களாகத் திகழ்ந்தனர். அவர்களது கதைகளில் பெண்களும் போர்வீர்ர்களாகத் திகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் ஷீல்ட் மெய்டன் என அழைக்கப்படுகின்றனர். தற்போதும் பாரம்பரிய விளையாட்டுகளில் ஈடுபடும் ஸ்கண்டிநேவிய, ஐஸ்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் கிறீன்லாந்து நாட்டைச்சேர்ந்த மக்கள் ஓங்கிய உடலமைப்புடன் இருப்பதை அவதானித்துள்ளேன். ஐஸ்லாந்து, கிறீன்லாந்து, ஸ்கொட்லாந்து பிரதேசங்களில் வைக்கிங் குடியேற்றங்கள் இடம்பெற்றதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. 

தொடர்மூலம் தெரியும் இன்னொரு செய்தி வைக்கிங்களுக்கு எழுத்துவழக்கு இல்லை. அவர்களது கதைகள் வழிவழியாக கடத்தப்படுகிறது. கொம்பூதுவதும் சிறு முழவுகளை இசைப்பதும் அதற்கேற்ப கூடிநின்று குதித்துக் குதித்து நடனமாடுவதும்தான் மது அருந்துவதும்தான் அவர்களின் பொழுதுபோக்கு. அதேசமயம் இங்கிலாந்தில் சிறு நரம்புவாத்தியங்களை இசைக்கிறார்கள். கற்சிற்ப வேலைப்பாடு எதுவும் இல்லை ஸ்கண்டிநேவியாவிலும் சரி இங்கிலாந்திலும் சரி. இதேகாலப்பகுதியில் பார்த்தால் தமிழர் வரலாற்றில் அடைந்த கலைகளின் உச்சத்தை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் இதுபோன்ற தொடர்களைப் பார்க்கும்போது நாம் தொடருக்கு வெளியே சற்று அலசி ஆராய்தால் எமது வரலாற்றுடன் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ளலாம். தொடரில் ஒரு காட்சி வரும். பழைய ரோமானிய தகவல்களை மதகுரு ஒருவர்மூலம் வாசிக்கும் அரசன் எக்பேட் அதில் குறிப்பிட்ட போர்த்தந்திரம் ஒன்றை வைக்கிங் படையினர் மீது பிரயோகித்து வெற்றிபெற்றபின் அவரது படைவீரர்களாலேயே நம்பமுடியவில்லை. ஏதேனும் நூலிலிருந்து அத்தந்திரத்தைத் தெரிந்துகொண்டிருப்பார் என ஒரு போர்வீரன் சொல்கிறான். அடுத்தவன் நகைத்துக்கொண்டே சொல்வான் நூல்களை வாசித்தல் மதகுருமார்களின் வேலையல்லவா என்று. இந்த இடத்தில் நூல்நவின்று புலவர்களாகவும் விளங்கிய சங்ககால மன்னர்களை நினைத்துப்பார்க்காமலிருக்க முடியவில்லை.

பதினோராம் நூற்றாண்டு தொடங்கி வைக்கிங் கலாச்சாரத்தில் பிற இனமக்களின் கலாச்சாரம் ஊடுருவத்தொடங்குகிறது. கிறிஸ்தவ மதமும் பரவத்தொடங்குகிறது. தற்போது உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக வாழும் மக்கள் என்றால் ஸ்கண்டிநேவிய நாடுகளான டென்மார்க், ஸ்வீடன் மற்றும் நோர்வே தான் முன்னிலையில் உள்ளனர். காரணம் அவர்களது பண்டைய வாழ்க்கைமுறை காரணமாக மகிழ்ச்சியாக வாழ்வது அவர்களது ஜீன்களில் உள்ளதோ என எண்ணத்தோன்றுகிறது. 







Sunday, May 17, 2020

Web Series - Narcos Mexico

மெக்சிகோவில் இடம்பெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்தை உண்மைச் சம்பவங்களோடு புனைவு கலந்து காட்டுவதே நார்கோஸ் மெக்சிகோ தொடர். நார்கோஸ் உங்களை கவர்ந்திருந்தால் கட்டாயம் நார்கோஸ் மெக்சிகோவும் உங்களுக்குப் பிடிக்கும். எப்படி எண்பதுகள் தொண்ணூறுகளில் இருந்த கொலம்பியாவை நார்கோஸ் தொடரில் காட்டினார்களோ அதுபோல மெக்சிகோவை காட்டியுள்ளனர். இதுவரை இரண்டு சீசன்கள் வெளிவந்துள்ளன. இன்னும் ஒரு சீசன் வரும் என நினைக்கிறேன்.



மெக்சிகோவில் சட்டவிரோதமாக பயிரிடப்படும் கஞ்சா செடியை மெக்சிகோ இராணுவம் சின்னலோவா பிரதேசத்தில் தீவைத்து அழிப்பதுடன் தொடர் ஆரம்பமாகிறது. சின்னலோவாவைச் சேர்ந்த மிகெல் ஏஞ்ஞல் ஃபீலிக்ஸ் கயார்டொ ஒரு முன்னாள் பொலிஸ் மற்றும் தற்போதைய கஞ்சா பயிர் செய்கையாளன். ஃபீலிக்ஸின் உறவினனான ரஃபேல் விதைகள் அற்ற மதிப்புக்கூட்டப்பட்ட கஞ்சா பயிர்செய்வதைக் கண்டுபிடித்துள்ளான். சுற்றுவட்டாரத்தில் உள்ள கஞ்சா செடிகளில் இருந்து விதைகள் அவனது பயிர்களுக்குப் பரவாதிருக்க கூடாரத்தில் உள்ளது அவர்களது தோட்டம். இப்பொழுது உற்பத்தியைப் பெருக்கவேண்டும். அதற்கு ஃபீலிக்ஸ் எடுக்கும் முயற்சிகள் மூலம் மெக்சிகோவில் உள்ள கார்ட்டல் தலைவர்களை ஒன்றிணைத்து Guadalajara Cartel என்னும் கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. ரஃபேல் மேற்பார்வையிர் Chihuahua என்னும் பிரதேசத்தில் உள்ள பாலைவனத்தில் 1000 ஹெக்டயர் பரப்பளவில் கஞ்சா பயிர்ச்செய்கையை ஆரம்பிக்கிறார்கள். பெருந்தொகை இலஞ்சம் மூலம் அரசாங்கத்திடம் இருந்து பாதுகாப்புடன் வலம்வருகிறார்கள். இதற்கிடையே கொலம்பிய கொகைனை அமெரிக்காவுக்கு கடத்தும் ஒப்பந்தத்தையும் செய்கிறார்கள். வேறுயாருடன் போனபதிவில் பார்த்த நார்கோஸ் தொடர் எஸ்கோபர் மற்றும் கலி கார்டலுடன் தான்.

நினைத்துப்பார்க்க முடியாத கஞ்சா பயிர்செய்கை மூலம் புரளும் பணத்தினால் கிடைக்கும் சொத்துகளால் அமெரிக்க DEA அதிகாரிகள் ஏதோ நடக்கிறது என்று ஊகிக்கிறார்கள். DEA Agent Kiki Camarena கொடுத்த தகவல் மூலம் 1984ம் வருடம் கண்டுபிடிக்கப்பட்ட அறுவடைக்குத் தயாராக இருந்த 1000 ஹெக்டயர் கஞ்சாவும் மெக்சிகன் படைகளால் அழிக்கப்படுகிறது. அதனுடைய அப்போதைய மதிப்பு 160 மில்லியன் டொலர்கள். கிகி கமரானா கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார். 

கிகி கமரானா கடத்தப்பட்டதும் அமெரிக்கா உடனடியாக செயலில் இறங்குகிறது. DEA பலப்படுத்தப்படுகிறது. இது ஃபீலிக்ஸ் மற்றும் கூட்டாளிகள் எதிர்பார்க்காத விடையம். பல்லுப்போன பாம்பாக இருந்த அமெரிக்க அதிகாரிகள் இப்படி கொத்த வருவார்கள் எனபது அவர்கள் எதிர்பாராதது. தொடர் நடவடிக்கைகளால் Guadalajara Cartel ன் ஸ்தாபகர்களில் Ernesto Fonseca CarrilloRafael Caro Quintero கைதுசெய்யப்பட Miguel Ángel Félix Gallardo அரசாங்க தொடர்புகளுடன் காப்பாற்றப்படுவதுடன் முதல் சீசன் முடிவடைகிறது.

இரண்டாவது சீசனில் இரகசிய நடவடிக்கை மூலம் கிகி கமரானாவை கொன்றவர்களைக் கைது செய்ய DEA முயல்கிறது. சில மெக்சிகன் அரசியல்வாதிகளும் கொலையில் தொடர்புபட்டிருப்பதால் அவர்கள் பல சவால்களைச் சந்திக்கவேண்டி வருகிறது. இதற்கிடையே CIA நிகரகுவா என்னும் தென்னமரிக்க நாட்டிலுள்ள போராளிகளுக்கு இரகசியமாக ஆயுதங்கள் வழங்குகிறது. அதில் சில இடர்பாடுகள் வரும்போது ஃபீலிக்ஸ் CIA உடன் இரகசிய உடன்படிக்கை ஒன்று செய்ததும் அமெரிக்க அரசாங்கம் கமரானாவின் கொலைவழக்கை முடிக்க அழுத்தம் கொடுக்கிறது. கைதுசெய்யப்பட்ட டொன் நெற்றோ மற்றும் ரஃபேல் தான் கொலைக்கு காரணம் என நடவடிக்கையை முடிக்குமாறு உத்தரவு வருகிறது. இங்கேயும் அமெரிக்காவின் சர்வதேச சதிகள் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

1988ஆம் வருடம் மெக்சிகோவில் நடந்த அதிபர் தேர்தல் தற்போதும் சர்ச்சைக்குரிய ஒன்று. தொடரில் அதையும் காட்சிப்படுத்தியுள்ளார்கள். நெருக்கடிகள் ஒவ்வொன்றையும் தந்திரமாக கையாண்டு மெக்சிகோவில் இடம்பெற்ற பெரும்பாலான போதைமருந்து வர்த்தகத்தை தனக்குக்கீழே வைத்திருந்த ஃபீலிக்ஸ் இன் கூட்டமைப்பு சிதறுவதுடன் அவனுக்கு இருந்த அரசியல்வாதிகளின் பாதுகாப்பு இல்லாமல் ஆகிறது. மெக்சிகோ பொலிசாரால் ஃபீலிக்ஸ் கைது செய்யப்படுவதுடன் இரண்டாவது சீசன் முடிவடைகிறது.

ஃபீலிக்ஸின் கூட்டமைப்பு உடைந்தாலும் கைது செய்யப்பட்டது ஃபீலிக்ஸ் மட்டும்தான். போதைமருந்து வர்த்தகம் கூட்டமைப்பில் அங்கம் வகிர்த்தவர்களால் தனித்தனியாகத் தொடரப்போகிறது. ஆகவே இன்னுமொரு சீசன் வெளிவருமென எதிர்பார்க்கிறேன்.

நார்கோஸ் தொடரோடு ஒப்பிடும்போது நார்கோஸ் மெக்சிகோ தொடர் ஆரம்பத்தில் சிறிது சுவாரசியம் குறைவாக இருப்பதுபோல் எனக்குத் தோன்றியது. ஆனால் இரண்டாவது சீசனில் சுவாரசியத்திற்கு குறைவில்லை. அதேபோல் முதலாவது சீசனில் கமரானா துணிச்சலாக துப்பறியும் காட்சிகளிலும் தொடர் விறுவிறுப்பாகச் செல்கிறது.

தொடர்புடைய பதிவு Web series - Narcos

Thursday, May 14, 2020

Web series - Narcos

வெப் சீரிஸ்களில் நார்கோஸ் ஒரு குறிப்பிடத்தக்க தொடர். கட்டாயம் பார்க்க வேண்டியதும்கூட. போதைப்பொருளான கொகைன் எப்படி கொலம்பியாவில் இருந்து தயாரிக்கப்பட்டு உலகின் பிறநாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது மற்றும் அதனை கொலம்பியாவும் அமெரிக்காவும் முறியடிக்க முயற்சிப்பதை உண்மைச் சம்பவங்களை சற்று புனைவு சேர்த்து சொல்கிறார்கள். நெற்ஃபிளிக்ஸ் தளத்தில் கிடைக்கிறது. மூன்று சீசன்கள் 2015 முதல் 2018 வரை வெளியாகியிருக்கிறது.

பாப்லோ எஸ்கோபரை பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். மிகப்பிரபலமான கொலம்பிய கொகைன் உற்பத்தியாளன். முதலில் சிறுவளவில் உற்பத்தியை தொடங்கி உற்பத்தியை எவ்வாறு சர்வதேச தேவைற்கேற்ப விரிபுபடுத்துவதும் எஸ்கோபரின் வீழ்ச்சியும் காட்டப்படுகிறது. அமெரிக்க DEA Agent பார்வையில் கதை சொல்லப்படுகிறது. இடையிடையே உண்மை காணொளிகளும் காட்டப்படுகிறது. ஆரம்பத்தில் சிறிது அசுவாரசியமாக செல்லும் கதை ஐந்து ஆறு எபிசோட்களின் பின் சுவாரசியமாக செல்கிறது. காரணம் எஸ்கோபரை பற்றி ஓரளவு முன்னரே தெரிந்திருப்பதும் மற்றும் விபரணப்படம் (documentary) போல இடையிடையே வரும் காட்சிகள் பழக்கமாக சிறிது நேரம் எடுக்கிறது. தொடங்கிவிட்டு மூன்று நான்கு எபிசோட்களில் நிறுத்தியவர்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு திருப்தி கிடைக்கும். பலவித அரசியல்களைப்பற்றி தெரிந்துகொள்ள முடியும். 

எஸ்கோபர் பற்றி சிறிது கேள்விப்பட்ட எனக்கு Medellín Cartel, Cali Cartel, narcos trafficking போன்றவற்றை புதிதாக இருந்தது. அமெரிக்கா கொடுத்த அழுத்தம் காரணமாக கொலம்பிய அரசாங்கம் எஸ்கோபரை கைதுசெய்ய தயாரானதும் தலைமறைவான எஸ்கோபர் வன்முறையை கையிலெடுத்ததும் கொலம்பியா வேறுவழியின்றி எஸ்கோபர் விதித்த நிபந்தனைகளுடன் வீட்டுக்காவலில் வைக்கிறது. பெயருக்குத்தான் சிறையேதவிர எஸ்கோபரின் அனைத்து நடவடிக்கைகளும் தொடர்கின்றன. அரசாங்கத்துக்கு ஒரே ஆறுதல் நாட்டில் வன்முறைகள் குறைவடைந்ததுதான். இத்துடன் முதல் சீசன் முடிவடைகிறது.

ஆனால் அமெரிக்க DEA அதிகாரிகளுக்கு திருப்தி இல்லை. இன்னும் அமெரிக்காவுள் வரும் கொகைன் அளவு குறைத்தபாடில்லை. ஆனால் கொலம்பியாவில் DEA சுதந்திரமாக செயல்படமுடியாது. ஊழலில் திளைக்கும் கொலம்பிய அதிகாரிகளைத்தாண்டி அங்கிருக்கும் நேர்மையான அதிகாரிகளுடன் சேர்ந்து தமது பணிகளை செய்கிறார்கள். கொலம்பிய அதிபர் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக இருப்பதால் வீட்டுச்சிறையில் இருக்கும் போது எஸ்கோபர் செய்த கொலைக்காக கைது செய்து வேறுசிறைக்கு மாற்ற முயற்சிக்கும்போது இரகசிய சுரங்கப்பாதை மூலம் எஸ்கோபர் தப்பிக்கிறான். 

இந்த இடத்தில் அப்போதைய கொலம்பிய அரசியல் நிலைமையை நோக்கவேண்டும். போதைப்பொருள் பிரச்சினை மற்றும் அதனால் விளையும் வன்முறை ஒருபக்கம். எல்லையில் உள்ள கம்யூனிஸ்ட்களை வேட்டையாட தனியார் இராணுவ குழுக்கள். இந்த இராணுவ குழுக்களுக்கு நிதியுதவி மற்றும் ஆயுத உதவி செய்வது CIA. அமெரிக்காவுக்கு கம்யூனிஸ்ட் என்றாலே ஆகாது என்பது உலகறிந்த உண்மை. கொலம்பியா CIA இன் சிலமுடிவுகளால் DEA ன் கைகள் கட்டப்படுவது இதில் இன்னொரு நகைமுரண். இப்படி இரு அமெரிக்க அமைப்புகளுக்கிடையே உள்ள பிரச்சினைகளையும் காட்சிப்படுத்த தவறவில்லை இத்தொடர். இன்னுமொன்று அமெரிக்கர்கள் தம்மையும் தமது நாட்டையும் பெருமையாகவும் மற்றையோரை சிறுமையாக நினைப்பதையும் கூட காட்சிப்படுத்தியுள்ளனர். எஸ்கோபரின் மனைவி மூலமாக தலைமறைவாக இருக்கும் எஸ்கோபரின் செய்மதி தொலைபேசியின் frequency யை கண்டடைந்த பாதுகாவலர் agent Murphy யிடம் சொல்லும்போது தெனாவெட்டாக மேர்பி கேட்பார் “இந்த தகவலுக்காக என்ன வேண்டும்? அமெரிக்க விசாவா அல்லது அமெரிக்காவில் வேலையா? ஆனால் அதுவெல்லாம் தரமுடியாது” என்று சொல்ல அந்த கொலம்பியன் சொல்லுவார் “எல்லோரையும் அப்படியா நினைக்கிறீர்கள்? எனக்கு எதுவும் வேண்டாம். எஸ்கோபரின் குடும்பம் மிகவும் துன்பப்படுகிறது. எஸ்கோபரை கண்டுபடித்து கொல்லுங்கள் முதலில்” என்பார். 

கைதுசெய்ய முற்படும்போது தப்பியோடும் எஸ்கோபர் அந்நாட்டு இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படுவார். எஸ்கோபரின் Medellín Cartel ஐ வீழ்த்தியதில் முன்னின்று உழைத்தவர் DEA Agent Javier Peña அடுத்தவர் Stephen Murphy. இரண்டாவது சீசன் எஸ்கோபரின் வீழ்ச்சியுடன் முடிகிறது.

மூன்றாவது சீசன் Cali cartel இன் வீழ்ச்சியை சொல்கிறது. உண்மையில் ஏஐன்ட் பென்யா கலி காட்ரலை ஒடுக்குவதில் சம்பந்தப்படவில்லை. ஆனால் சீரிசில் பென்யாவின் கதாபாத்திரம் ஒரு புனைவு. மெடயின் காட்ரல் அழிக்கப்பட்டதும் இப்போது வர்த்தகத்தில் முதலிடம் கலி காட்ரலுக்கு. அமெரிக்காவுக்கு இன்னமும் தலையிடி குறைந்தபாடில்லை. Cali cartel ன் பங்குதாரர் நால்வர். Gilberto Rodríguez OrejuelaMiguel Rodríguez OrejuelaJosé Santacruz LondoñoHélmer Herrera. இதில் முக்கியமானவர்கள் ரொட்ரிகோ சகோதரர்கள். 

கலி காட்ரல் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு போதைமருந்து உற்பத்தி ஸ்தாபனம். அவர்களது கணக்குகள் முறையாகவும், கொடுக்கப்பட்ட இலஞ்சங்கள் மறைசொற்களாலும் பேணப்பட்டது. அவர்களிடம் திறமையான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குழு ஒன்றும் இருந்தது. இந்த கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குழு ரஷ்யாவின் KGB உளவுத்துறைக்கு நிகராக அமெரிக்காவால் கூறப்பட்டது. Cali Cartel ஐ முறியடிப்பதில் பெரிய தலைவலியே அவர்கள் அரசாங்கத்தின் மேல்மட்டம் வரை வழங்கிய இலஞ்சம். அந்த நேரத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் கலி காட்ரலின் பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டிருந்த செய்தி வெளியாகி கொலம்பிய ஜனாதிபதிக்கு நெருக்கடி கிளம்பியது. என்றால் அரசாங்கத்தில் விளையாடிய இலஞ்சத்தின் அளவை நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம். CIA வேறு தமது இலாபங்களுக்காக  DEA உடன் முரண்பட்டது. இதனூடாக அமெரிக்கா உலகளவில் தனது தேவைகளுக்கூடாக தன் சொந்த நாட்டுமக்களையே பணயம் வைப்பதை புரிந்துகொள்ளலாம். 

நார்கோஸ் சீரிஸ் ஏன் முக்கியத்துவம் பெறுகிறதென்றால் உண்மைச் சம்பவங்ககளை விறுவிறுப்பாக காட்டியதை விட அது பேசும் அரசியல். எண்பதுகள் தொண்ணூறுகளில் தென்னமரிக்க நாடுகள் பற்றிய ஒரு பார்வை கிடைப்பதுடன் அமெரிக்காவின் உண்மை முகத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையான புரிதல் கிடைக்கும் என்பது நிச்சயம்.

Tuesday, May 12, 2020

குறும்படம் - Female

இந்த லொக் டௌன் காலத்தில் வெப் சீரிஸ் அல்லது திரைப்படங்கள் பார்த்து போரடித்து ஏதாவது குறும்படம் பார்ப்போம் என்றால், ஏன்தான் பார்த்தோம் என்று ஆகிவிடுகிறது. உப்புச்சப்பில்லாத கதைகள், நடிக்கத்தெரியத நடிகர்கள், தேவையில்லாத பாடல்கள் என்று ஒரே இம்சைதான். இதில் Award winning Tamil short film என்று வேறு போட்டிருப்பார்கள். முக்கால்வாசி குறும்படங்கள் பார்த்துச் சலித்த காதல் கதைகளாகவே இருக்கும்.

இந்தமாதிரி தொல்லைகள் இல்லாத ஒரு குறும்படத்தை நம்நாட்டுக்காரர் கார்த்திக் சிவா இயக்கியுள்ளார். சற்றே பெரிய குறும்படம். நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை நீண்ட குறும்படம். பெயரிலேயே எதைப்பற்றிய படம் என தெரிகிறது. பிறந்தது முதல் தகப்பனாலும் திருமணத்தின் பின் கணவனாலும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு தனது ஆசைகளையும் கனவுகளையும் தியாகம் செய்யவேண்டிய ஒரு பெண்தான் முதன்மைப் பாத்திரம். ஒருகட்டத்தில் புருசனின் கனவுக்காக எதிர்பாராத ஒன்றைத் தியாகம் செய்யவேண்டி வரும்போது என்ன செய்தாள், தனது கனவை அடைந்தாளா என்பதே மையக்கரு. 

குறும்படத்தின் முதல் வெற்றி கதையை சிதைக்காத திரைக்கதையமைப்பு. Non linear காட்சியமைப்பில் திரைக்கதையமைக்கப்பட்டுள்ளது. லக்ஷ்மி கதாபாத்திரத்தின் ஆசைகளும் கனவுகளும் சிறுவயது முதல் கல்யாணமானபின்பு வரை எல்லாமே நிராசையாவது நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. லக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடித்த நட்சத்திரா ஒரு தேர்ந்த நடிகை. இதிலும் நன்றாகவே நடித்திருந்தார். ஆச்சரியம் சிறுவயது லக்ஷ்மியாக நடித்த நடிகை. தனது ஏமாற்றங்களை நன்றாகவே பிரதிபலித்தித்திருந்தார். மற்றைய நடிகர்களின் நடிப்பும் நன்றாகவே இருந்தது. நடிக நடிகையர் தேர்வுக்கு ஒரு சபாஸ் இயக்குனருக்கு. 

அடுத்ததாக குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது வசனங்கள். சிறுவயது லக்ஷ்மியும் தோழியும் விவாதிக்கும் காட்சிகளாகட்டும் லக்ஷ்மியின் நேர்காணலில் வரும் வசனங்களாகட்டும் மிகவும் நன்றாக இருந்தது. இல்லையேல் சற்று நீளமான குறும்படம் சலிப்படையவைத்திருக்கும். ஒளிப்பதிவும் நன்றாகவே இருந்தது. படத்தொகுப்பில் முன்பின்னாக காட்சிகளை காட்டவேண்டிய நிலையிலும் நன்றாகவே படத்தொகுப்பு இருந்தது. நீளம் கருதி லக்ஷ்மியின் நேர்காணல் காட்சிகளில் சிலவற்றை வெட்டியிருக்கலாம். ஏனெனில் படத்தில் நேர்காணலின் நோக்கமே லக்ஷ்மியின் கனவுகள் நனவாவதை சொல்வதுதான். இறுதியில் நேர்காணல் செய்பவர் கேட்கும் லக்ஷ்மியின் அமைப்பை தொடர்புகொள்வது பற்றிய விபரங்கள் மற்றும் லக்ஷ்மி நிகழ்ச்சியை வாழ்த்தும் காட்சிகளை வெட்டியிருக்கலாம். 

ஒரு சமூகநல கருத்தையெடுத்து அதை சிறப்பாக இயக்கிய கார்த்திக் சிவாவிற்கும் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். குறும்பட இணைப்பு கீழே.