”வைக்கிங்” என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டாலே எனக்கு முதலில் ஞாபகம் வருவது சிறுவயதில் தமிழ்ப் பாடநூலில் இடம்பெற்ற ஒரு கதைதான். அந்தக்கதையின் சுருக்கம் என்னவென்றால் பண்டைய ஸ்கண்டிநேவிய பிரதேசத்தில் வாழ்ந்துவந்த மீனவர்கள் கடலாடும் போது புயல், கடற்சீற்றம் என்பனவற்றில் சிக்கி திசைதெரியாது தொலைந்துபோகிறார்கள். ஒருசிறுவன் இப்படியான சந்தர்ப்பத்தில் எவ்வாறு தமது கிராமத்தின் திசையைக் கண்டுபிடிக்கலாம் என்று யோசிக்கிறான். அதில் ஒரு வழியையும் கண்டடைகிறான். ஒருநாள் வயதான கடலோடி இன்று புயல் வரும் என கூறுகிறார் ஆனால் எனையோர் அவரைப் பொருட்படுத்தவில்லை. இந்தச் சிறுவன் மட்டும் அவர் கூறியதைக் கருத்தில்கொண்டு ஒரு மூடிய கூடையுடன் வருகிறான். படகுத்தலைவன் அக்கூடையை வைக்க இடமில்லை என்று கூறியதும் படகுத்தலைவனின் அனுமதியுடன் படகின் பாய்க்கம்பத்தின் உச்சியில் கட்டிவைத்துவிடுகிறான். நடுக்கடலுக்குச்சென்று மீன்பிடிக்கும் சமயத்தில் சீரான காலநிலை மோசமடைந்து புயல் அடிக்கிறது. பலமணிநேர அலைக்கழிப்புக்குப்பின்னர் காலநிலை சீரடைந்ததும் அவர்களுக்கு திசை தெரியவில்லை. அப்போது அச்சிறுவன் பாய்க்கம்பத்தில் ஏறிச்சென்று கூடையின் மூடியைத் திறந்ததும் அதிலிருந்து ஒருகாகம் வெளிவந்து படகை ஒருசுற்று சுற்றிவிட்டுப் பறந்து மறைந்தது. உடனே சிறுவன் காகம் சென்ற திசையில் படகைச்செலுத்துமாறு கூறினான். அவர்களும் தமது கிராமத்தை அடைந்தனர். அதன்பின்னரே படகில் காகத்தை கொண்டுசெல்லும் வழக்கம் தோன்றியதாக நம்பப்படுகிறது. அதன் ஞாபகமாகவே பிற்காலத்தில் கப்பலின் உச்சியில் ஏறி தொலைநோக்கியால் சுற்றுப்புறத்தை கண்காணிக்கும் இடமும் crow nest என அழைக்கப்படுகிறது.
வைக்கிங் இனத்தவர்கள் வாழ்ந்த ஸ்கண்டிநேவியா என்பது தற்போதைய நோர்வே, ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் அமைந்துள்ள பிரதேசம். ஐரோப்பிய வரலாற்றிலே எட்டாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி வைக்கிங் காலம் எனப்படுகிறது. எட்டாம் நூற்றாண்டில்தான் அவர்கள் முதல்முறையாக வெற்றிகரமாக கடல் கடந்து இங்கிலாந்தை அடைந்தனர். ஸ்கண்டிநேவியா மலைகளாலும் காடுகளாலும் மணல்வெளியாலும் சூழப்பட்ட இடம். அவர்களுக்கு விவசாயம் செய்ய போதுமான நிலம் இல்லை. ஆகவே அவர்கள் ஒவ்வொரு வருடமும் கிழக்கே ரஸ்யாவின் பிரதேசங்களுக்கு கோடைகாலத்தில் சென்று கொள்ளையடிப்பது வழக்கம். அச்செல்வத்தைக் கொண்டு அவர்களது குளிர்காலத்தைக் கழிக்கிறார்கள். மேற்கே இங்கிலாந்து செல்வச்செழிப்புடன் இருக்கும் செவிவழிச் செய்தி அவர்களை மேற்கே கடலோடத்தூண்டுகிறது. அப்பகுதி கடல் அதிக சீற்றத்துடன் இருப்பதாலும் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் இருப்பதாலும் அவர்களால் சரியாக மேற்கு நோக்கி பயணம் செய்ய முடியவில்லை. இங்கிலாந்தை நோக்கிச் சென்றவர்கள் காணாமல் போகிறார்கள் அல்லது மேற்கே நிலம் இல்லை என முடிவு செய்து தோல்வியுடன் திரும்புகிறார்கள். அவர்கள் முதன்முதலாக 8ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நோர்த்தம்பிரியா என்ற இடத்தில் வெற்றிகரமாக இறங்கி கொள்ளையடித்ததாக வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
இந்த சம்பவத்தைக் கருவாக கொண்டு எடுக்கப்பட்ட தொடர்தான் வைக்கிங். அதில் நாயகனாக காட்டப்படும் ரக்னர் லோத்புரொக் உண்மையிலேயே ஒரு வைக்கிங் ஹீரோ. ரக்னர் பற்றிய தொல்கதை அவர்களிடையே இருக்கிறது. ஆனால் அதில் காட்டப்படும் ரக்னர் ஒன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்த மன்னன். அதில் கூறியவற்றையும் வைக்கிங் இங்கிலாந்தை அடைந்ததையும் சேர்த்து புனைவாக காட்டியுள்ளனர். தொடர்பற்றி தேடியபோது இது ஒன்றும் விபரணத் தொடர் இல்லை அனைத்தையும் உண்மையாக காட்டுவதற்கு. ஆனால் ஓரளவுக்கு நியாயம் செய்திருப்பதாகவே கருதப்படுகிறது. அயர்லாந்தில் வைத்து படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளனர். இலட்சியத்துடன் கூடிய விவசாயியாக சித்தரிக்கப்படும் ரக்னரின் எழுச்சி காட்டப்படுகிறது நான் இதுவரை பார்த்த இரண்டு சீசன்களில். இன்னமும் நான்கு சீசன்கள் உள்ளன.
பூமியிலுள்ள நாகரிகங்களின் வரலாறுகளையும் நாடுகளின் வரலாறுகளையும் வெவ்வேறு மனித கலாச்சாரங்களையும் விரும்பித் தெரிந்துகொள்பவர்களுக்கு ஒரு சிறந்த தொடர் இது. நான் இதுவரை பார்த்த இரண்டு சீசன்களிலும் சேர்த்து வைக்கிங் நாகரிகம் மட்டுமல்லாது இங்கிலாந்தும் காட்டப்படுகிறது. அப்பொழுது கூட அதாவது 8ம் நூற்றாண்டளவில் கூட ஆங்கிலம் முழுதாக பிறக்கவில்லை. வழிபாடுகள் இலத்தீன் மொழியிலேயே செய்யப்படுகின்றன. இணையத்தில் தேடியபோது அப்போதைய இங்கிலாந்தில் பேசிய மொழி Old English என்று கூறப்படுகிறது.
வைக்கிங்களின் கடவுள்களாக ஓடின், தோர், லோக்கி மற்றும் பல கடவுள்களையும் கொண்டுள்ளனர். ஓடின், தோர், லோக்கி எமக்கு அறிமுகமானவர்கள்தான் மார்வல் படங்கள், கார்ட்டூன் மூலமாக. கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக ஓடின் உள்ளார். இடிமின்னலின் கடவுள் தோர். காதலுக்கு ஒரு கடவுள் உண்டு. மேலும் பல கடவுள்கள் உண்டு. இந்துசமயத்தில் உள்ளதுபோன்ற ஒரு நம்பிக்கை கடவுள்களில். இதற்கு காரணமாக நான் நினைப்பது ஆரம்பத்தில் மனிதர்கள் இயற்கையையே கடவுளாக வணங்கினர். பின்னர் அந்த சக்திகளை மனிதரூபத்தில் உள்ள கடவுள்களாக மாற்றினர். இயற்கையை கடவுளாக வழிபட்டதின் சான்றுகளை சிந்துவெளி நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைக்கிங் நாகரிகத்தின் தொடக்கத்தை ஆராய்ந்தால் அங்கேயும் ஏதேனும் சான்றுகள் இருக்கக்கூடும். ஆகவே வெவ்வேறு பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கும் கடவுளின் பெயர் வேறுவேறாக இருந்தாலும் கடவுளின் இயல்புகள் ஒத்துப்போவதைக் காணலாம். இதைவிட ஓடினுக்காக மிருகங்கள் மனிதர்களைப் பலிகொடுப்பது என வேதங்களில் கூறப்படும் யாகங்களை ஒத்ததாக இருக்கின்றன அவர்களின் வழிபாடுகள்.
இங்கிலாந்தில் கொள்ளையடித்த வைகிங் இங்கிலாந்து அரசியலிலும் தமது தடத்தைப் பதித்த நிகழ்ச்சிகள் வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. காரணம் வைக்கிங்களின் போர்த்திறன் மற்றும் சாவுக்குப் பயப்படாத மனவுறுதி. அவர்களது நிலவமைப்பு காரணமாக ஓங்கிய உடலுடன் திகழ்ந்தனர் வைக்கிங். போராட்டமே அவர்களது வாழ்க்கை. வளங்கள் இல்லாத்தால் கொள்ளையடித்து வரும் செல்வமே அவர்களது குடும்பத்திற்கான உணவு. ஆகவே இயற்கையாகவே குரூரமான போர்வீரர்களாகத் திகழ்ந்தனர். அவர்களது கதைகளில் பெண்களும் போர்வீர்ர்களாகத் திகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் ஷீல்ட் மெய்டன் என அழைக்கப்படுகின்றனர். தற்போதும் பாரம்பரிய விளையாட்டுகளில் ஈடுபடும் ஸ்கண்டிநேவிய, ஐஸ்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் கிறீன்லாந்து நாட்டைச்சேர்ந்த மக்கள் ஓங்கிய உடலமைப்புடன் இருப்பதை அவதானித்துள்ளேன். ஐஸ்லாந்து, கிறீன்லாந்து, ஸ்கொட்லாந்து பிரதேசங்களில் வைக்கிங் குடியேற்றங்கள் இடம்பெற்றதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன.
தொடர்மூலம் தெரியும் இன்னொரு செய்தி வைக்கிங்களுக்கு எழுத்துவழக்கு இல்லை. அவர்களது கதைகள் வழிவழியாக கடத்தப்படுகிறது. கொம்பூதுவதும் சிறு முழவுகளை இசைப்பதும் அதற்கேற்ப கூடிநின்று குதித்துக் குதித்து நடனமாடுவதும்தான் மது அருந்துவதும்தான் அவர்களின் பொழுதுபோக்கு. அதேசமயம் இங்கிலாந்தில் சிறு நரம்புவாத்தியங்களை இசைக்கிறார்கள். கற்சிற்ப வேலைப்பாடு எதுவும் இல்லை ஸ்கண்டிநேவியாவிலும் சரி இங்கிலாந்திலும் சரி. இதேகாலப்பகுதியில் பார்த்தால் தமிழர் வரலாற்றில் அடைந்த கலைகளின் உச்சத்தை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் இதுபோன்ற தொடர்களைப் பார்க்கும்போது நாம் தொடருக்கு வெளியே சற்று அலசி ஆராய்தால் எமது வரலாற்றுடன் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ளலாம். தொடரில் ஒரு காட்சி வரும். பழைய ரோமானிய தகவல்களை மதகுரு ஒருவர்மூலம் வாசிக்கும் அரசன் எக்பேட் அதில் குறிப்பிட்ட போர்த்தந்திரம் ஒன்றை வைக்கிங் படையினர் மீது பிரயோகித்து வெற்றிபெற்றபின் அவரது படைவீரர்களாலேயே நம்பமுடியவில்லை. ஏதேனும் நூலிலிருந்து அத்தந்திரத்தைத் தெரிந்துகொண்டிருப்பார் என ஒரு போர்வீரன் சொல்கிறான். அடுத்தவன் நகைத்துக்கொண்டே சொல்வான் நூல்களை வாசித்தல் மதகுருமார்களின் வேலையல்லவா என்று. இந்த இடத்தில் நூல்நவின்று புலவர்களாகவும் விளங்கிய சங்ககால மன்னர்களை நினைத்துப்பார்க்காமலிருக்க முடியவில்லை.
பதினோராம் நூற்றாண்டு தொடங்கி வைக்கிங் கலாச்சாரத்தில் பிற இனமக்களின் கலாச்சாரம் ஊடுருவத்தொடங்குகிறது. கிறிஸ்தவ மதமும் பரவத்தொடங்குகிறது. தற்போது உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக வாழும் மக்கள் என்றால் ஸ்கண்டிநேவிய நாடுகளான டென்மார்க், ஸ்வீடன் மற்றும் நோர்வே தான் முன்னிலையில் உள்ளனர். காரணம் அவர்களது பண்டைய வாழ்க்கைமுறை காரணமாக மகிழ்ச்சியாக வாழ்வது அவர்களது ஜீன்களில் உள்ளதோ என எண்ணத்தோன்றுகிறது.