Thursday, June 11, 2020

சேமிப்பு

விடிந்தாலும் வெளிச்சம் இல்லை வானத்தில். முருகனுக்கு பாயிலிருந்து எழும்பவே மனமில்லை. குளிர் காற்று நடுங்கச்செய்ய நெஞ்சைக் குறுக்கிக்கொண்டு புரண்டு படுத்தான். அப்பாலே அவன் மனைவி சரசுவும் இருபிள்ளைகளும் ஒண்டிக்கொண்டு படுத்திருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் துயரம் வந்து கௌவிக்கொண்டது. எல்லாம் இந்த கொரோணா செய்தவேலை. இந்த இரண்டு மாதமாகத்தான் இந்தப்பாடு. 

கட்டட வேலைதான் முருகனின் தொழில். திறமையான மேசன் எனப்பெயரெடுத்தவன். வருடத்தில் பெரும்பாலான நாட்கள் வேலை இருக்கும். வீடு கட்டும் கொன்ராக்டர் சுப்பையா அண்ணன் ஒரு வீடு முடிய இன்னொரு வீடு என வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு, உடுப்பிட்டி என எங்கேயாவது எடுத்துவிடுவார். எடுத்தால் அதை முடிக்காமல் மற்றவீடு தொடங்கமாட்டார். அவரது தொழில் நேர்த்தி கண்டு எப்படியும் யாராவது அவருக்காக காத்திருப்பார்கள். அவரது ஆஸ்தான மேசன் முருகன். தச்சுவேலை நடக்கும் சில தினங்களுக்கு முருகனுக்கு வேலை இருக்காது. அப்போது சுப்பையா அண்ணன் சொல்லுவார் “டேய் முருகா ஒண்டுக்கும் யோசியாத. கூரை போட்டதும் கெதியா பூச்சுவேலை முடிச்சிடு அடுத்த வீடு ரெடியா இருக்கு. நாங்கதான் கட்டோனும் எண்டு கந்தையாண்ணை ஒத்தைக்காலிலை நிக்கிறார்.” சொல்லும்போது அவர் முகத்தில் ஒரு பெருமிதம் இருக்கும். இவன் வெறுமனே சிரித்துவைப்பான். அவனது சுபாவமே அப்படித்தான். அவ்வளவாக கதைக்கமாட்டான். சுப்பையா அண்ணன் மேலும் சொல்லுவார் “எங்கட சனத்திட்ட காசு இருக்கு கண்டியோ. அதுவும் சாகிறதுக்குள்ள வீடுகட்டாட்டி அவையின்ற ஆத்மா சாந்தியடையாது”. “ஏதோ எங்கட சிவபெருமான் அருளால தொடர்ந்து வேலைவந்தாச்சரி” என மனதுக்குள் நினைத்துக்கொள்வான்.

முருகனுக்கு பீடி சிகரெட் என எந்த கெட்டபழக்கமும் இல்லை. மனம் சந்தோசமாக இருந்தால் தவறணையில் போய் கொஞ்சம் கள்ளு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவான். கள்ளு குடித்திருந்தால் படலையில் கதவைச்சாத்தும்போதே சரசு கண்டுபிடித்துவிடுவாள். பக்கத்தில் படித்துக்கொண்டிருக்கும் மகளைப்பார்த்துச் சொல்வாள் “உன்ர கொப்பருக்கு இண்டைக்கு என்ன குசியோ தெரியேல்லை வந்திட்டார் கள்ளடிச்சிட்டு”. குடிச்சிட்டு ஒரு வம்புதும்பும் செய்யமாட்டார் ஆனால் முறைக்கும் மனைவியை சமாதானப்படுத்த கொஞ்சம் அதிகமாகவே கொஞ்சிவழிவார். இது கல்யாணமான புதிதில் முதல்முறையாக கள்ளு குடித்துவிட்டு வந்ததில் இருந்து தொடர்கிறது. சரசுவும் கூலிக்கு வெங்காயம் வைப்பது, புல்லுப் பிடுங்கப் போகிறது என அவ்வப்போது வேலைக்குப் போகிறவள். எனவே பெரிய கஸ்டம் ஏதுமின்றி சீவிக்கமுடிந்தது. இடையிடையே வரும் பிள்ளைகளின் செலவுகள், திருவிழாக்கள், சொந்தக்காரர்களின் விசேசங்கள் என எதிர்காலத்துக்காகச் சேமிப்பதை கவனிக்காது விட்டுவிட்டதால் தான் இந்த இட்டுமுட்டு.

“காசைக்கொஞ்சம் பாங்கில போட்டுவையுங்கோ. மூத்தவளுக்கும் பிறகு தேவைப்படும்” என்று சரசு அடிக்கடி கூறினாலும் “அடி இவளுக்கு இப்பதானே எட்டு வயசாகிது. அவன் சின்னவன் வளர்ந்து தன்ரபாடப் பார்ப்பான். இவளுக்குத்தானே இந்த வீடு” என அவள் வாயை அடைத்துவிடுவான். ஏதோ கையில் இருந்ததை வைத்து ஒருமாதம் சமாளிக்க முடிந்தது. அரசாங்கம் தந்த சமுர்த்தி காசு ஐந்தாயிரமும் ஐந்தாயிரம் பெறுமதியான உணவுப்பொட்களும் எத்தனை நாட்களுக்குப் போதும். நகைகள் இருந்தாலும் அடகுவைக்கலாம். எல்லாம் வீடுகட்டுவதில் கரைந்துவிட்டது. பிள்ளைகளும் வாய்க்கு ருசியாக சாப்பிட்டு வளர்ந்தவர்கள். செலவைக்குறைப்பதற்காக சிக்கனச்சாப்பாடு சாப்பிட்டு இளைத்துப்போய்விட்டார்கள்.

நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்துவதாக சூரியன் காலைச் செய்தியறிக்கை கூறியது. ஒரு உத்வேகம் வர சீக்கிரம் தேநீரைக்குடித்துவிட்டு சைக்கிளை எடுத்து வீதியில் பொலிஸ் நிற்கிறார்களா என அவதானித்துவிட்டு வேகமாக மிதித்து சுப்பையா அண்ணாவின் வீட்டைநோக்கி விரைந்தான். அங்கே சுப்பையா அண்ணன் தற்போது கட்டிக்கொண்டிருக்கும் வீட்டுச்சொந்தக்காரரிடம் தான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். பேசிவிட்டு கேள்வியுடன் ஏறிட்ட முருகனின் முகத்தைப்பார்த்து மலர்ச்சியுடன் “முருகா நாளைக்கு வேலை தொடங்குவம். காலமை வந்திடு, நான் எங்கட ஆக்களுக்கு போன்பண்ணி வரச்சொல்றன்.” என்றவாறே ஒரு ஐநூறு ரூபாயை எடுத்து கொடுத்தார்.

மனநிம்மதியுடன் வீட்டுக்கு சைக்கிளை மிதித்தான் முருகன். வழியில் மதவடியில் இருந்த சாப்பாட்டுக்கடையைப் பார்த்ததும் பிள்ளைகளின் நினைப்பு வந்தது. அவர்களுக்கு நீண்டகாலமாக ஒன்றும் வாங்கிக்கொடுக்கவில்லை எனநினைத்தபடியே ஆளுக்கு முன்று தோசைகள் வாங்கிக்கொண்டு வீடு வந்து ஆவலுடன் பார்த்த பிள்ளைகளுக்குக் கொடுத்தபடி சந்தோசமாக சரசுவிடம் விசயத்தைச் சொன்னான்.

“ம்ம்... இனி பழையபடி எல்லாம் சரிவரும். ரெண்டு மாசமா கையில காசில்லாம சரியாக் கஸ்ரப்பட்டிட்டம். இனியாவது நான் சொல்றபடி காசைக் கொஞ்சம் சேர்த்துவைப்பம். திரும்பவும் இதுபோல வேலைக்குப் போகேலாம இருந்தா பிறகும் இதேமாரி கஸ்ரப்படோணும். இப்பவே சிக்கனமா இருந்து பழகீட்டம்தானே. கொஞ்சம் பார்த்து செலவுகளைக் குறைக்கோணும். என்ன நான் சொல்றது” சரசு கேட்டாள்.

அமைதியாக சிலவிநாடிகள் சரசுவை பார்த்தவன் ஆமோதிப்பாகத் தலையசைத்தான் முருகன்.

Monday, June 8, 2020

மெசெஞ்சரில் வந்த மாயக்காரி

ஃபேஸ்புக் மெசெஞ்சரில் ஹாய் என்று குறுந்தகவல் வந்திருந்தது. இரண்டு தினங்களுக்கு முன்பே வந்திருந்தாலும் அனுப்பிய நபர் நண்பராக இல்லையென்பதால் வழக்கமான உள்பெட்டியில் காட்டவில்லை அவனும் கவனிக்கவில்லை. யார் என்று பார்த்தான். பெண் பெயரில் இருந்து. தெரிந்த பெயராக இல்லை. ஃபேஸ்புக் கணக்கில் போய்ப்பார்த்தான். யாரோ ஒரு நடிகை சிரித்துக்கொண்டிருந்தார். சமீபத்தில் பிரபலமான நடிகை. ஆனால் அவனுக்கு அந்த நடிகையைப் பிடிப்பதில்லை. வேறு எந்த விபரமும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அந்தநேரம் பார்த்து புரஜெக்ட் மனேஜரின் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினான். இன்று நண்பகல்தான் விடுமுறை முடிந்து சிங்கப்பூர் வந்திருந்தான். நாளைதான் வேலைத்தளத்துக்குப் போகவேண்டியது. அதற்கிடையில் அவருக்கு அவசரம். சலிப்புடன் தொலைபேசியை கட்டிலில் எறிந்துவிட்டு வாங்கிவந்த பிக்மக் பேகரை அசுவாரசியமாக விழுங்கினான்.

சற்றுநேரம் தூங்குவோம் என கட்டிலில் விழுந்தவன் பளீரென அறைவிளக்கு பிரகாசமாக முகத்தில் அடிக்க விழித்துப் பார்த்தால் அறைநண்பன் நின்றிருந்தான். “என்னடா வெள்ளனை வந்திட்டாய்” என்று கேட்டான். அவன் கேலியாகச் சிரித்தபடி “டேய் இரவு மணி ஆகீட்டுது. நானே இண்டைக்கு சப்கொன்ரக்டர் கொன்கிறீட்டை லேற்றாக்கி என்னை வெளிக்கிடவிடாமல் செய்திட்டான் எண்டு கடுப்பில இருக்கிறன்” என்றபடி குளியலறைக்கு போனான். அடகறுமத்த எட்டுமணியாகீற்றா இனி நாளைக்கு வேலை என யோசித்துக்கொண்டே நிமிர்ந்து படுத்தான்.

ஸ்பொட்டிஃபையை எடுத்து தட்டினால் சத்யபிரகாஸ் பறக்கும் ராசாளியே என்று ஆரம்பித்தார். மனம் இயல்பாக நான்குநாட்களுக்குமுன் ஆதிவிநாயகர் கோயிலில் பார்த்த பெண்ணை நினைத்தது. அவன் பொதுவாக கோயில்களுக்குப் போவதில்லை. சிங்கப்பூர் போகமுன்பும் வவுனியாவில் இருந்தகாலப்பகுதியில் ஆதிவிநாயகர் கோயிலுக்குப் போனதாக நினைவில்லை. பாடசாலைத் தோழன் ஒருவன் கேட்டதால் அவனுடன் சென்றான். கோயிலைச் சுற்றிக்கும்பிட்டபின் ஒருஓரமாக தூண்பக்கத்தில் அமர்ந்திருந்தான். நண்பன் இப்போதுதான் பிரகாரத்தை பாதி முடித்திருந்தான். அப்போதுதான் அவளைப் பார்த்தான். இரு நண்பியருடன் வந்துகொண்டிருந்தாள். இருபத்திநாலு இருபத்தைந்து வயது இருக்கலாம். படங்களில் காட்டுவதுபோல் பேரழகியென்று சொல்லமுடியாது. ஆனால் அவனுக்கு அவளில் ஏதோ ஈர்த்தது. மாநிறத்தில் ஊதா நிற சுடிதார் அணிந்திருந்தாள். நீள்வட்ட முகத்தில் சின்னதாக சுடர்போன்ற பொட்டு. கூந்தலை பின்னால் அவிழ்த்து விட்டிருந்தாள். இன்றுதான் முழுகியிருப்பாள் போலும். வீசும் காற்றில் கூந்தல் அலைபாய்ந்தது. அவன் கவனிப்பதை அவளது நண்பி சுட்டிக்காட்ட சடாரென திரும்பிப்பார்த்தாள். அந்த பார்வையில் இருந்த கூர்மை அவனுக்குப் பிடித்திருந்தது. மேலும் பார்ப்பது நாகரிகம் இல்லையென பார்வையை விலக்கினாலும் அவள்பக்கம் பார்வையைத் திருப்பாமலிருக்க முடியவில்லை. மறுபடியும் பார்த்தபோது அவள் அவனை கடைக்கண்ணால் பார்த்தபடி ஏதோ நண்பிகளிடம் கேட்பது தெரிந்தது. என்ன கேட்டிருப்பாள் என அறியும் ஆவல் எழுந்தது. அவளைத்தெரியுமா என நண்பனிடம் கேட்கலாம் என அவனை அணுகுவதற்குள் மூவரும் வெளியே சென்றுவிட்டனர்.

நண்பனிடம் “டேய் யார்ரா அந்த ஊதா சுடிதார்காரி” என்று கேட்டால்  அவன் கோயிலுக்கு வந்து சைட் அடிக்கிறியா நாயே என்கிறான். “என்ன இழவுடா இது போற இடமெல்லாம் சைட் அடிக்கும் நாதாரி கோயில்ல பொண்ணுகளை ஏறெடுத்தும் பார்க்கமாட்டியோ” என்றால் முறைக்கிறான். இன்னும் சிலதினங்களில் வெளிக்கிடவேண்டும் அதற்குமுன் அவளை மறுபடியும் பார்க்கலாம் என்றால் கண்ணில் தென்படவே இல்லை அவள்.

பசிவயிற்றைக் கிள்ளியதும் உணவுச்சாலைக்குச் சென்று கிரிலில் வாட்டிய மாட்டிறைச்சியை ஒரு பிடி பிடித்தபின் அப்படியே காலாற நடக்கும்போதுதான் பகலில் தகவல் அனுப்பிய பெண்ணின் ஞாபகம் வந்தது. யாரும் பெண் பெயரில் விளையாடுகிறார்களோ எனவும் ஒரு சந்தேகம் வந்தது. அடுத்தவிநாடியே இந்த முரட்டு சிங்கிளுடன் யார் விளையாடப்போகிறார்கள் என சிரிப்பும் வந்தது. ஒரு பதில் ஹாய் அனுப்பிவிட்டு தூங்கிவிட்டான்.

காலையில் மறுபடியும் அவளிடம் இருந்து பதில் வந்திருந்தது. ஆனால் அப்போதே வேலைக்கு நேரமாகிவிட்டிருந்தது. அடித்துப்பிடித்து கிளம்பினால் சைட் வாட்ஸப் குறூப் அப்போதே உயிர்பெற்று வேலைச்சுழலுக்குள் இழுத்தது. அவனுக்காக இருவாரமாக காத்திருந்த வேலைகளை ஓரளவு முடிக்கவே இரவாகிவிட்டது. இப்போதுதான் மெசெஞ்சரில் வந்த குறுந்தகவலைப் பார்த்தான்.

“ஹாய் என்னைத் தெரியுமா?” என்றிருந்தது

“தெரியாது. என்னை உங்களுக்குத் தெரியுமா?” என பதில் அனுப்பினான்.

“தெரியும். உங்களை வீனஸில் பார்த்திருக்கிறேன். எனக்கு ஒரு தகவல் வேண்டும். நீங்கள் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த Mirror திரைப்படம் எங்கே பார்க்கலாம் என சொல்வீர்களா?”

அவளது பதிலைப்பார்த்ததும் எனக்கு குழப்பம்தான் வந்தது. நான் வீனஸில் படிக்கவேயில்லை. அதைவிட மிரர் ஒரு பேய்ப்படம். பேய்ப்பட விரும்பிகளுக்கு மாத்திரமே அதைப் பரிந்துரைத்தேன். சரி என்னவாக இருந்தால் என்ன என்று படம் இருக்கும் தளத்தை அனுப்பினேன். தொடர்ந்த நாட்களில் தொடர்ந்த தகவல் பரிமாற்றத்தில் திரைப்படங்கள் புத்தகங்கள் என போன உரையாடலில் இடையிடையே வந்த தனிப்பட்ட தகவல் மூலம் அவளுக்கு என்னைத் தெரிந்திருப்பது தெரியவந்தது. இடையிடையே இருவரும் ஓய்வாக இருந்தால் குரல் அழைப்பு ஏற்படுத்தி கதைப்பதும் தொடர்ந்தது. முகம் தெரியாத அவளது இரசனைகளும் பேச்சும் எனக்குப் பிடிக்க ஆரம்பித்திருந்தது. தினமும் அவளின் தகவலுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். அவளுக்கு நான் பதில் அனுப்ப எடுக்கும் நேரம் குறைய ஆரம்பித்திருந்தது.

அன்று காலையில் இருந்தே அவளை ஒன்லைனில் காணவில்லை. அடிக்கடி மெசெஞ்சரை எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். தொலைபேசி டிங் என பாய்ந்து எடுத்து பார்த்தால் அவள்தான். என்ன கேட்பதென்று தெரியாமல் எழுதி எழுதி அழிக்கின்றேன். கைகள் நடுங்கத்தொடங்கிவிட்டது. எனது தடுமாற்றம் அவளுக்கு விளங்கியிருக்க வேண்டும். மெசெஞ்சரில் அழைப்பை எடுத்தாள்.

அழைப்பை அனுமதித்து ஹலோ என்றேன். சிலவிநாடிகள் மௌனம். திடுமென “அன்று ஏன் என்னை அப்பிடி முறைச்சு முறைச்சு பார்த்தனியள்” என்றாள். ஏற்கனவே இருந்த மனநிலையில் ஒன்றும் புரியவில்லை. பேந்த பேந்த முழிக்கத்தான் முடிந்தது. “என்ன பதிலையே காணோம்” இது அவள். “எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை. உங்கட முகமே தெரியாது இதில நான் எப்பிடி முறைச்சு முறைச்சு பார்க்கிறது” இது நான். சிரித்துக்கொண்டே “நான் கேட்கிறது அண்டைக்கு  நீங்கள் ஆதிவிநாயகர் கோயில்ல என்னை பார்த்ததை”. அப்போதுதான் எனக்கு எல்லாம் விளங்கியது. “அடிகள்ளி அப்ப என்னை வீனஸில பார்த்தது, மிரர் பட லிங் கேட்டது எல்லாம் என்னை ஏமாற்றவா?” சந்தோசத்தில் கத்தியேவிட்டேன். சத்தத்தையே காணவில்லை. எடுத்துப்பார்த்தால் கட்பண்ணிவிட்டாள்.

சிரித்துக்கொண்டே தொலைபேசியைப்பார்த்தால் காதலுடன் ஒரு ஸ்மைலி சிரித்தது என்னைப்பார்த்து.



Saturday, June 6, 2020

Web Series - Defending Jacob

அப்பிள் ரீவி+ ல் வெளியாகியிருக்கும் ஒரு குறும் தொடர் Defending Jacob. ஸ்ட்ரீமிங் தளத்தை அப்பிள் நிறுவனம் தொடங்கியதும் சந்தையைப் பிடிப்பதற்காக அப்பிள் சில குறுந்தொடர்களைத் தயாரித்தது. இதுவும் எட்டு அத்தியாயம் மட்டும் கொண்ட ஒரு குறுந்தொடர். கதைச்சுருக்கம் என்னவென்றால் பதின்னான்கு வயதான ஜேக்கப் பார்பர் தனது பள்ளியில் பயிலும் சகமாணவனை கத்தியால் குத்திக் கொலைசெய்ததாக கைது செய்யப்படுகிறார். ஜேக்கப்பின் தந்தை அன்ட்ரூ பார்பர் தான் அப்போதைய அரசத்தரப்பு வக்கீல் மற்றும் விசாரணை அதிகாரி. ஜேக்கப்மீது சந்தேகம் வந்ததும் அன்ட்ரூ தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுகிறார். ஜேக்கப் பிணையில் விடப்பட்டாலும் பார்பர் குடும்பம் தமது சாதாரண வாழ்க்கையை வாழமுடியவில்லை. ஜேக்கப் கைதுசெய்யப்பட்ட நிமிடத்திலிருந்து பார்பர் குடும்பம் சந்திக்கும் சவால்களும் வழக்குக்கு தயாராவதும் வழக்கு நடைபெறுவதும் நொன்லீனியர் காட்சியமைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அன்ட்ரூவை நீதிபதி இல்லாத அவையில் அரச சட்டத்தரணி ஜூரிகள் முன்னிலையில் விசாரணை செய்வதோடு தொடங்கும் தொடரில் ஜேக்கப்பின் வழக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. அன்ட்ரூவின் மீதான கேள்விகளின் காரணம் இறுதியில் தெரியவருகிறது.

நான் இதைப்பார்க்க முடிவுசெய்ததன் காரணம் நீதிமன்ற வழக்கு சம்பந்தமான கதைகளில் எனக்கு இருந்த ஆர்வம். நீதிமன்றத்துக்கு முக்கியமான தேவை ஆதாரம். அத்தோடு அந்த ஆதாரத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் வழக்கறிஞரின் சாமர்த்தியமும் வாதத்திறமையும். இருக்கும் ஆதாரங்கள் ஜேக்கப்புக்கு எதிராகவே உள்ளன. அதை எவ்வாறு பார்பர் குடும்பமும் அவர்களது வழக்கறிஞரும் சமாளிக்கின்றார்கள் என்பது நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற காட்சிகளைவிட பார்பர் குடும்பம் எவ்வாறு சமூகத்திலிருந்து அந்நியப்பட்டு வாழவேண்டி இருப்பதையும் அவர்களது வேலையிடத்தில்கூட அவர்களுக்கு வரவேற்பு இல்லாதிருப்பதும், அத்தோடு தொடர்ந்து துரத்தும் பத்திரிகையாளர்களும் என வலிநிறைந்த வாழ்க்கையை வாழவேண்டி வருகிறது. வழக்கு முடிந்தபின் உங்கள் வாழ்க்கை மீண்டும் பழையபடி திரும்பியதுதானே என அன்ட்ரூவிடம் கேட்கப்பட்டபோது அன்ட்ரூ சொல்வார் “இச்சம்பவத்தின் பின் மீண்டும் எல்லாம் திரும்பியது என்றில்லை. நடந்தது நடந்ததுதான். அதைமாற்றமுடியாது. இனிமேல் வழக்குக்கு முன் வழக்குக்கு பின் என்றுதான் வாழ்க்கை இருக்கும்.” பார்க்கும் எங்களுக்கும் தெரியும் அதுதான் நிதர்சனமும் என்று.

இறுதிமுடிவும் ஒரு எதிர்பார்க்காத திருப்பமாக அமைந்துவிடுகிறது. இங்கே குறிப்பிடவேண்டிய ஒரு விசயம் ஜேக்கப் குடும்பத்தில் இருந்த ஒளிவுமறைவுகள். அன்ட்ரூ கொலை, வன்புணர்வு குற்றங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தந்தைபற்றி மனைவி லோரியிடம்கூட சொல்லவில்லை. அது பின்னர் தெரியவரும்போது சில பிரச்சனைகளை ஏற்படத்துகிறது. கொலை நடந்தபின் அதைத்தழுவி ஜேக்கப் நண்பர்கள் மத்தியில் எழுதிய ஒரு கதை பின்னர் நீதிமன்றத்தில் வைத்துவெளிவரும்போது அது வழக்கில் ஒரு பின்னடைவாகின்றது. ஜேக்கப் பற்றி அன்ட்ரூவும் லோரியும் சரியாகத் தெரிந்துவைத்திருக்கவில்லை. இனி எமக்கிடையில் இரகசியங்கள் இல்லை என்றபின்னும் அவர்கள் சில செயல்களை மறைக்கிறார்கள். இந்த இரகசியங்கள் பின்னர் எவ்வாறு என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்க்கும்போது, கணவன் மனைவிக்கிடையில் காணப்படும் ஒளிவுமறைவுகள், பெற்றோர் தமது பிள்ளைகளை சரியாக கண்காணிக்காத சந்தர்ப்பங்கள் எந்த நிலைமையில் கொண்டுபோய் விடும் என்பதையும் காணலாம்.

இத்தொடர் வில்லியம் லான்டி எழுதிய டிஃபெண்டிங் ஜேக்கப் என்ற அதேபெயரில் வந்த புத்தகத்தை அடிப்படையாக எடுக்கப்பட்டது. அன்ட்ரூ பார்பராக நடித்திருந்தவர் Caption America ஆக நடித்து புகழ்பெற்ற கிறிஸ் ஈவான். Crime drama வகையில் ஆர்வமுள்ளவர்கள் விரும்பிப்பார்க்கலாம். அதிரடி வகையில் எடுக்கப்படாத்தால் சிலருக்கு தொடர் மெதுவாக செல்வதுபோல் தெரியும். ஆனால் அவர்களது உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் நன்றாக எடுக்கப்பட்ட ஒரு தொடர் எனச்சொல்வேன் நான். அதோடு வசனங்களும் நன்றாக இருந்தது. தமிழ் subtitle ம் காணப்பட்டது. குறைவான நடிகர்களோடு நிறைவான நடிப்பும்கூட.

Thursday, June 4, 2020

Web Series - Fauda

ஃபௌடா என்ற அரபுச் சொல்லின் அர்த்தம் குழப்பம் என கூகிள் ஆண்டவர் சொல்கிறார். ஆனால் இந்த இஸ்ரேலிய தொடர் பார்க்கும்போது கலவரம் என்பதும் பொருந்தும்போல் தெரிகிறது. இஸ்ரேலிய இரகசிய தேடுதல் குழுவில் இருந்து ஒரு வெற்றிகரமான நடவடிக்கையின் மூலம் மிகவும் வேண்டப்பட்ட ஹமாஸ் உறுப்பினர் ஒருவரை கொலைசெய்தபின் அதிலிருந்து வெளிவந்து தனது குடும்பத்துடன் சாதாரண வாழ்க்கை வாழ்கின்றர் டோரோன். ஒன்றரை வருடத்தின்பின் அந்த கடைசி நடவடிக்கை தோல்வி என்று தெரியவந்ததும் மீண்டும் வந்து இணையுமாறு கேட்கப்படுகிறார் ஒரு இரண்டுமணிநேர இரகசிய நடவடிக்கைக்காக. ஏனெனில் டோரோன்போல அந்த தீவிரவாதியை நன்கு தெரிந்தவர் யாருமில்லை. அதில் ஆரம்பிக்கும் டோரோன் மற்றும் இரகசிய குழுவின் நடவடிக்கைகள் இரண்டு தரப்பிலும் ஏற்படுத்தும் தாக்கங்கள் காட்டப்படுகிகின்றது. இதுவரை மூன்று சீசன்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொன்றிலும் பத்து அல்லது பதினொரு எப்பிசோட்கள். ஒவ்வொரு எப்பிசோட்டும் முப்பத்தைந்திலிருந்து நாற்பத்தைந்து நிமிடங்கள் மட்டுமே. ஆகவே கதைக்குத் தேவையற்ற இழுவைகள் ஏதுமின்றி தொடர் மிகவேகமாகச் செல்கின்றது. திரில்லர் வகையில் மிகவும் விறுவிறுப்பான தொடர். 

இஸ்தரேலிய தயாரிப்பு என்பதால் நாங்கள் எதிர்பார்ப்பது போல தனியே இஸ்ரேலியர்களை மட்டும் நல்லவர்கள்போல் காட்டாது இஸ்ரேலிய மேலிடம் செய்யும் சில தவறுகளையும் காட்டுகின்றனர். இரகசிய குழுவினர் செய்யும் தேவையற்ற கொலைகளையும்கூட காட்டுகின்றனர். ஒரு குடும்பத்தில் ஒருவர் ஹமாஸ் முக்கியத்தவராக இருந்தால் அவரை வேட்டையாட இஸ்ரேல் எந்த எல்லைக்கும் செல்லும். அவரது குடும்பமெல்லாம் இஸ்ரேலுக்கு ஒரு பொருட்டே இல்லை. ஒரு கதையில் டோரோன் ஒரு ஹமாஸ் முக்கியஸ்தரின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள மேற்குக்கரையில் ஆறுமாதம் வரையில் இரகசியமாக வசிக்கிறார். அந்த முக்கியஸ்தரின் ஒன்றுவிட்ட சகோதரரான பஷாருக்கு குத்துச்சண்டை பயிற்சியளிக்கிறார். இறுதியில் வேறுவழியின்றி பஷாரை ஏமாற்றி அந்த ஹமாஸ் முக்கியஸ்தரை அழிக்கிறார். இப்பொழுது அப்பாவியான பஷீர் மேற்குக்கரையில் துரோகிப்பட்டம் பெறுகிறார். பஷாரை இஸ்ரேலுக்கு அழைத்துவர முயலும் டோரோனுக்கு மேலதிகாரிகளின் ஒப்புதல் கிடைக்க தாமதமாகிறது. இதற்கிடையில் தனது பாதுகாப்புக்காகவும் தனது துரோகிப்பட்டத்தைத் துடைத்தெறியவும் முற்படும் பஷார் இறுதியில் ஒரு தீவிரவாதியாகி வாழ்க்கையை சிறையில் கழிக்க நேரிடுகிறது. ஒரு சிறந்த குத்துச்சண்டைவீரன் இறுதியில் அனைத்தையும் இழந்து வாழ்க்கையையும் இழப்பது வேதனையான ஒன்று.

ஒருகாட்சியில் பஷாரும் பஷாரின் தந்தையும் காஸாவுக்கு தப்பிச்சென்றபின் அவர்களை இஸ்ரேலால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே மேற்குக்கரையில் இருந்த அவர்களின் வீடு இஸ்ரேலால் குண்டுவைத்துத் தகர்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததுபோலவே பஷாரின் தந்தை இரகசியமாக தனது மனைவியைத் தொடர்புகொள்கிறார். இது எனக்கு நான் சிறுவயதாக இருக்கையில் மேற்குக்கரையில் இருந்த யாசிர் அரபாத் அவர்களின் இருப்பிடம் அடிக்கடி இஸ்ரேலிய படையினரால் அழிக்கப்படும் செய்தி நினைவுக்கு வந்தது. பாலஸ்தீனியரின் இருப்பிடங்களை அழித்து அவர்களது மனோவலிமையைப் பலவீனப்படத்தும் நடவடிக்கையாக காலங்காலமாகவே இஸ்ரேலிர்களால் மேற்கொள்ளப்படுவதைப் புரிந்துகொள்ளலாம்.

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையில் இஸ்ரேல், பாலஸ்தீன எல்லைப்பாதுகாப்பு அமைப்பு, ஹமாஸ், சுற்றியுள்ள அரபுநாடுகள் மற்றும் சர்வதேசம் என அனைத்தும் இடியாப்ப சிக்கலில் குழம்பிப்போய் உள்ளன. இதில் சிலரின் தனிமனித விருப்புவெறுப்புகளும் சேர்ந்து நிலமையை மேலும் சிக்கலாக்குகின்றன. பாலஸ்தீன பகுதிக்குள் இரகசிய நடவடிக்கை மேற்கொள்ளும்முன் எப்படி பாலஸ்தீனர்கள் போலத் தோற்றமளிப்பதற்காக தயாராகின்றார்கள் என்பதெல்லாம் போன்ற ஆச்சரியங்கள் உண்டு இத்தொடரில். இதுவரை இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையைப்பற்றி சிறிது வாசித்து அறிந்திருந்தாலும் அந்நிலப்பரப்பு, அங்கே அவர்களின் வாழ்க்கைமுறைகளை விளங்கிக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு இத்தொடர். பாலஸ்தீனர்கள் சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்களை இத்தொடர் குறிப்பிட்டுப் பேசவில்லையாகினும் தொடர் பார்க்கும்போது ஏராளமானவற்றை விளங்கிக்கொள்ள முடிகிறது.

திரில்லர் விரும்பிகள் நிச்சயம் தவறவிடக்கூடாத ஒரு தொடர் Fauda. 

Wednesday, May 20, 2020

காக்கைக்கூடு

”வைக்கிங்” என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டாலே எனக்கு முதலில் ஞாபகம் வருவது சிறுவயதில் தமிழ்ப் பாடநூலில் இடம்பெற்ற ஒரு கதைதான். அந்தக்கதையின் சுருக்கம் என்னவென்றால் பண்டைய ஸ்கண்டிநேவிய பிரதேசத்தில் வாழ்ந்துவந்த மீனவர்கள் கடலாடும் போது புயல், கடற்சீற்றம் என்பனவற்றில் சிக்கி திசைதெரியாது தொலைந்துபோகிறார்கள். ஒருசிறுவன் இப்படியான சந்தர்ப்பத்தில் எவ்வாறு தமது கிராமத்தின் திசையைக் கண்டுபிடிக்கலாம் என்று யோசிக்கிறான். அதில் ஒரு வழியையும் கண்டடைகிறான். ஒருநாள் வயதான கடலோடி இன்று புயல் வரும் என கூறுகிறார் ஆனால் எனையோர் அவரைப் பொருட்படுத்தவில்லை. இந்தச் சிறுவன் மட்டும் அவர் கூறியதைக் கருத்தில்கொண்டு ஒரு மூடிய கூடையுடன் வருகிறான். படகுத்தலைவன் அக்கூடையை வைக்க இடமில்லை என்று கூறியதும் படகுத்தலைவனின் அனுமதியுடன் படகின் பாய்க்கம்பத்தின் உச்சியில் கட்டிவைத்துவிடுகிறான். நடுக்கடலுக்குச்சென்று மீன்பிடிக்கும் சமயத்தில் சீரான காலநிலை மோசமடைந்து புயல் அடிக்கிறது. பலமணிநேர அலைக்கழிப்புக்குப்பின்னர் காலநிலை சீரடைந்ததும் அவர்களுக்கு திசை தெரியவில்லை. அப்போது அச்சிறுவன் பாய்க்கம்பத்தில் ஏறிச்சென்று கூடையின் மூடியைத் திறந்ததும் அதிலிருந்து ஒருகாகம் வெளிவந்து படகை ஒருசுற்று சுற்றிவிட்டுப் பறந்து மறைந்தது. உடனே சிறுவன் காகம் சென்ற திசையில் படகைச்செலுத்துமாறு கூறினான். அவர்களும் தமது கிராமத்தை அடைந்தனர். அதன்பின்னரே படகில் காகத்தை கொண்டுசெல்லும் வழக்கம் தோன்றியதாக நம்பப்படுகிறது. அதன் ஞாபகமாகவே பிற்காலத்தில் கப்பலின் உச்சியில் ஏறி தொலைநோக்கியால் சுற்றுப்புறத்தை கண்காணிக்கும் இடமும் crow nest என அழைக்கப்படுகிறது.

வைக்கிங் இனத்தவர்கள் வாழ்ந்த ஸ்கண்டிநேவியா என்பது தற்போதைய நோர்வே, ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் அமைந்துள்ள பிரதேசம். ஐரோப்பிய வரலாற்றிலே எட்டாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி வைக்கிங் காலம் எனப்படுகிறது. எட்டாம் நூற்றாண்டில்தான் அவர்கள் முதல்முறையாக வெற்றிகரமாக கடல் கடந்து இங்கிலாந்தை அடைந்தனர். ஸ்கண்டிநேவியா மலைகளாலும் காடுகளாலும் மணல்வெளியாலும் சூழப்பட்ட இடம். அவர்களுக்கு விவசாயம் செய்ய போதுமான நிலம் இல்லை. ஆகவே அவர்கள் ஒவ்வொரு வருடமும் கிழக்கே ரஸ்யாவின் பிரதேசங்களுக்கு கோடைகாலத்தில் சென்று கொள்ளையடிப்பது வழக்கம். அச்செல்வத்தைக் கொண்டு அவர்களது குளிர்காலத்தைக் கழிக்கிறார்கள். மேற்கே இங்கிலாந்து செல்வச்செழிப்புடன் இருக்கும் செவிவழிச் செய்தி அவர்களை மேற்கே கடலோடத்தூண்டுகிறது. அப்பகுதி கடல் அதிக சீற்றத்துடன் இருப்பதாலும் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் இருப்பதாலும் அவர்களால் சரியாக மேற்கு நோக்கி பயணம் செய்ய முடியவில்லை. இங்கிலாந்தை நோக்கிச் சென்றவர்கள் காணாமல் போகிறார்கள் அல்லது மேற்கே நிலம் இல்லை என முடிவு செய்து தோல்வியுடன் திரும்புகிறார்கள். அவர்கள் முதன்முதலாக 8ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நோர்த்தம்பிரியா என்ற இடத்தில் வெற்றிகரமாக இறங்கி கொள்ளையடித்ததாக வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.


இந்த சம்பவத்தைக் கருவாக கொண்டு எடுக்கப்பட்ட தொடர்தான் வைக்கிங். அதில் நாயகனாக காட்டப்படும் ரக்னர் லோத்புரொக் உண்மையிலேயே ஒரு வைக்கிங் ஹீரோ. ரக்னர் பற்றிய தொல்கதை அவர்களிடையே இருக்கிறது. ஆனால் அதில் காட்டப்படும் ரக்னர் ஒன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்த மன்னன். அதில் கூறியவற்றையும் வைக்கிங் இங்கிலாந்தை அடைந்ததையும் சேர்த்து புனைவாக காட்டியுள்ளனர். தொடர்பற்றி தேடியபோது இது ஒன்றும் விபரணத் தொடர் இல்லை அனைத்தையும் உண்மையாக காட்டுவதற்கு. ஆனால் ஓரளவுக்கு நியாயம் செய்திருப்பதாகவே கருதப்படுகிறது. அயர்லாந்தில் வைத்து படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளனர்.  இலட்சியத்துடன் கூடிய விவசாயியாக சித்தரிக்கப்படும் ரக்னரின் எழுச்சி காட்டப்படுகிறது நான் இதுவரை  பார்த்த இரண்டு சீசன்களில். இன்னமும் நான்கு சீசன்கள் உள்ளன.

பூமியிலுள்ள நாகரிகங்களின் வரலாறுகளையும் நாடுகளின் வரலாறுகளையும் வெவ்வேறு மனித கலாச்சாரங்களையும் விரும்பித் தெரிந்துகொள்பவர்களுக்கு ஒரு சிறந்த தொடர் இது. நான் இதுவரை பார்த்த இரண்டு சீசன்களிலும் சேர்த்து வைக்கிங் நாகரிகம் மட்டுமல்லாது இங்கிலாந்தும் காட்டப்படுகிறது. அப்பொழுது கூட அதாவது 8ம் நூற்றாண்டளவில் கூட ஆங்கிலம் முழுதாக பிறக்கவில்லை. வழிபாடுகள் இலத்தீன் மொழியிலேயே செய்யப்படுகின்றன.  இணையத்தில் தேடியபோது அப்போதைய இங்கிலாந்தில் பேசிய மொழி Old English என்று கூறப்படுகிறது. 

வைக்கிங்களின் கடவுள்களாக ஓடின், தோர், லோக்கி மற்றும் பல கடவுள்களையும் கொண்டுள்ளனர். ஓடின், தோர், லோக்கி எமக்கு அறிமுகமானவர்கள்தான் மார்வல் படங்கள், கார்ட்டூன் மூலமாக. கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக ஓடின் உள்ளார். இடிமின்னலின் கடவுள் தோர். காதலுக்கு ஒரு கடவுள் உண்டு. மேலும் பல கடவுள்கள் உண்டு. இந்துசமயத்தில் உள்ளதுபோன்ற ஒரு நம்பிக்கை கடவுள்களில். இதற்கு காரணமாக நான் நினைப்பது ஆரம்பத்தில் மனிதர்கள் இயற்கையையே கடவுளாக வணங்கினர். பின்னர் அந்த சக்திகளை மனிதரூபத்தில் உள்ள கடவுள்களாக மாற்றினர். இயற்கையை கடவுளாக வழிபட்டதின் சான்றுகளை சிந்துவெளி நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைக்கிங் நாகரிகத்தின் தொடக்கத்தை ஆராய்ந்தால் அங்கேயும் ஏதேனும் சான்றுகள் இருக்கக்கூடும். ஆகவே வெவ்வேறு பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கும் கடவுளின் பெயர் வேறுவேறாக இருந்தாலும் கடவுளின் இயல்புகள் ஒத்துப்போவதைக் காணலாம். இதைவிட ஓடினுக்காக மிருகங்கள் மனிதர்களைப் பலிகொடுப்பது என வேதங்களில் கூறப்படும் யாகங்களை ஒத்ததாக இருக்கின்றன அவர்களின் வழிபாடுகள்.

இங்கிலாந்தில் கொள்ளையடித்த வைகிங் இங்கிலாந்து அரசியலிலும் தமது தடத்தைப் பதித்த நிகழ்ச்சிகள் வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. காரணம் வைக்கிங்களின் போர்த்திறன் மற்றும் சாவுக்குப் பயப்படாத மனவுறுதி. அவர்களது நிலவமைப்பு காரணமாக ஓங்கிய உடலுடன் திகழ்ந்தனர் வைக்கிங். போராட்டமே அவர்களது வாழ்க்கை. வளங்கள் இல்லாத்தால் கொள்ளையடித்து வரும் செல்வமே அவர்களது குடும்பத்திற்கான உணவு. ஆகவே இயற்கையாகவே குரூரமான போர்வீரர்களாகத் திகழ்ந்தனர். அவர்களது கதைகளில் பெண்களும் போர்வீர்ர்களாகத் திகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் ஷீல்ட் மெய்டன் என அழைக்கப்படுகின்றனர். தற்போதும் பாரம்பரிய விளையாட்டுகளில் ஈடுபடும் ஸ்கண்டிநேவிய, ஐஸ்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் கிறீன்லாந்து நாட்டைச்சேர்ந்த மக்கள் ஓங்கிய உடலமைப்புடன் இருப்பதை அவதானித்துள்ளேன். ஐஸ்லாந்து, கிறீன்லாந்து, ஸ்கொட்லாந்து பிரதேசங்களில் வைக்கிங் குடியேற்றங்கள் இடம்பெற்றதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. 

தொடர்மூலம் தெரியும் இன்னொரு செய்தி வைக்கிங்களுக்கு எழுத்துவழக்கு இல்லை. அவர்களது கதைகள் வழிவழியாக கடத்தப்படுகிறது. கொம்பூதுவதும் சிறு முழவுகளை இசைப்பதும் அதற்கேற்ப கூடிநின்று குதித்துக் குதித்து நடனமாடுவதும்தான் மது அருந்துவதும்தான் அவர்களின் பொழுதுபோக்கு. அதேசமயம் இங்கிலாந்தில் சிறு நரம்புவாத்தியங்களை இசைக்கிறார்கள். கற்சிற்ப வேலைப்பாடு எதுவும் இல்லை ஸ்கண்டிநேவியாவிலும் சரி இங்கிலாந்திலும் சரி. இதேகாலப்பகுதியில் பார்த்தால் தமிழர் வரலாற்றில் அடைந்த கலைகளின் உச்சத்தை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் இதுபோன்ற தொடர்களைப் பார்க்கும்போது நாம் தொடருக்கு வெளியே சற்று அலசி ஆராய்தால் எமது வரலாற்றுடன் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ளலாம். தொடரில் ஒரு காட்சி வரும். பழைய ரோமானிய தகவல்களை மதகுரு ஒருவர்மூலம் வாசிக்கும் அரசன் எக்பேட் அதில் குறிப்பிட்ட போர்த்தந்திரம் ஒன்றை வைக்கிங் படையினர் மீது பிரயோகித்து வெற்றிபெற்றபின் அவரது படைவீரர்களாலேயே நம்பமுடியவில்லை. ஏதேனும் நூலிலிருந்து அத்தந்திரத்தைத் தெரிந்துகொண்டிருப்பார் என ஒரு போர்வீரன் சொல்கிறான். அடுத்தவன் நகைத்துக்கொண்டே சொல்வான் நூல்களை வாசித்தல் மதகுருமார்களின் வேலையல்லவா என்று. இந்த இடத்தில் நூல்நவின்று புலவர்களாகவும் விளங்கிய சங்ககால மன்னர்களை நினைத்துப்பார்க்காமலிருக்க முடியவில்லை.

பதினோராம் நூற்றாண்டு தொடங்கி வைக்கிங் கலாச்சாரத்தில் பிற இனமக்களின் கலாச்சாரம் ஊடுருவத்தொடங்குகிறது. கிறிஸ்தவ மதமும் பரவத்தொடங்குகிறது. தற்போது உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக வாழும் மக்கள் என்றால் ஸ்கண்டிநேவிய நாடுகளான டென்மார்க், ஸ்வீடன் மற்றும் நோர்வே தான் முன்னிலையில் உள்ளனர். காரணம் அவர்களது பண்டைய வாழ்க்கைமுறை காரணமாக மகிழ்ச்சியாக வாழ்வது அவர்களது ஜீன்களில் உள்ளதோ என எண்ணத்தோன்றுகிறது. 







Sunday, May 17, 2020

Web Series - Narcos Mexico

மெக்சிகோவில் இடம்பெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்தை உண்மைச் சம்பவங்களோடு புனைவு கலந்து காட்டுவதே நார்கோஸ் மெக்சிகோ தொடர். நார்கோஸ் உங்களை கவர்ந்திருந்தால் கட்டாயம் நார்கோஸ் மெக்சிகோவும் உங்களுக்குப் பிடிக்கும். எப்படி எண்பதுகள் தொண்ணூறுகளில் இருந்த கொலம்பியாவை நார்கோஸ் தொடரில் காட்டினார்களோ அதுபோல மெக்சிகோவை காட்டியுள்ளனர். இதுவரை இரண்டு சீசன்கள் வெளிவந்துள்ளன. இன்னும் ஒரு சீசன் வரும் என நினைக்கிறேன்.



மெக்சிகோவில் சட்டவிரோதமாக பயிரிடப்படும் கஞ்சா செடியை மெக்சிகோ இராணுவம் சின்னலோவா பிரதேசத்தில் தீவைத்து அழிப்பதுடன் தொடர் ஆரம்பமாகிறது. சின்னலோவாவைச் சேர்ந்த மிகெல் ஏஞ்ஞல் ஃபீலிக்ஸ் கயார்டொ ஒரு முன்னாள் பொலிஸ் மற்றும் தற்போதைய கஞ்சா பயிர் செய்கையாளன். ஃபீலிக்ஸின் உறவினனான ரஃபேல் விதைகள் அற்ற மதிப்புக்கூட்டப்பட்ட கஞ்சா பயிர்செய்வதைக் கண்டுபிடித்துள்ளான். சுற்றுவட்டாரத்தில் உள்ள கஞ்சா செடிகளில் இருந்து விதைகள் அவனது பயிர்களுக்குப் பரவாதிருக்க கூடாரத்தில் உள்ளது அவர்களது தோட்டம். இப்பொழுது உற்பத்தியைப் பெருக்கவேண்டும். அதற்கு ஃபீலிக்ஸ் எடுக்கும் முயற்சிகள் மூலம் மெக்சிகோவில் உள்ள கார்ட்டல் தலைவர்களை ஒன்றிணைத்து Guadalajara Cartel என்னும் கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. ரஃபேல் மேற்பார்வையிர் Chihuahua என்னும் பிரதேசத்தில் உள்ள பாலைவனத்தில் 1000 ஹெக்டயர் பரப்பளவில் கஞ்சா பயிர்ச்செய்கையை ஆரம்பிக்கிறார்கள். பெருந்தொகை இலஞ்சம் மூலம் அரசாங்கத்திடம் இருந்து பாதுகாப்புடன் வலம்வருகிறார்கள். இதற்கிடையே கொலம்பிய கொகைனை அமெரிக்காவுக்கு கடத்தும் ஒப்பந்தத்தையும் செய்கிறார்கள். வேறுயாருடன் போனபதிவில் பார்த்த நார்கோஸ் தொடர் எஸ்கோபர் மற்றும் கலி கார்டலுடன் தான்.

நினைத்துப்பார்க்க முடியாத கஞ்சா பயிர்செய்கை மூலம் புரளும் பணத்தினால் கிடைக்கும் சொத்துகளால் அமெரிக்க DEA அதிகாரிகள் ஏதோ நடக்கிறது என்று ஊகிக்கிறார்கள். DEA Agent Kiki Camarena கொடுத்த தகவல் மூலம் 1984ம் வருடம் கண்டுபிடிக்கப்பட்ட அறுவடைக்குத் தயாராக இருந்த 1000 ஹெக்டயர் கஞ்சாவும் மெக்சிகன் படைகளால் அழிக்கப்படுகிறது. அதனுடைய அப்போதைய மதிப்பு 160 மில்லியன் டொலர்கள். கிகி கமரானா கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார். 

கிகி கமரானா கடத்தப்பட்டதும் அமெரிக்கா உடனடியாக செயலில் இறங்குகிறது. DEA பலப்படுத்தப்படுகிறது. இது ஃபீலிக்ஸ் மற்றும் கூட்டாளிகள் எதிர்பார்க்காத விடையம். பல்லுப்போன பாம்பாக இருந்த அமெரிக்க அதிகாரிகள் இப்படி கொத்த வருவார்கள் எனபது அவர்கள் எதிர்பாராதது. தொடர் நடவடிக்கைகளால் Guadalajara Cartel ன் ஸ்தாபகர்களில் Ernesto Fonseca CarrilloRafael Caro Quintero கைதுசெய்யப்பட Miguel Ángel Félix Gallardo அரசாங்க தொடர்புகளுடன் காப்பாற்றப்படுவதுடன் முதல் சீசன் முடிவடைகிறது.

இரண்டாவது சீசனில் இரகசிய நடவடிக்கை மூலம் கிகி கமரானாவை கொன்றவர்களைக் கைது செய்ய DEA முயல்கிறது. சில மெக்சிகன் அரசியல்வாதிகளும் கொலையில் தொடர்புபட்டிருப்பதால் அவர்கள் பல சவால்களைச் சந்திக்கவேண்டி வருகிறது. இதற்கிடையே CIA நிகரகுவா என்னும் தென்னமரிக்க நாட்டிலுள்ள போராளிகளுக்கு இரகசியமாக ஆயுதங்கள் வழங்குகிறது. அதில் சில இடர்பாடுகள் வரும்போது ஃபீலிக்ஸ் CIA உடன் இரகசிய உடன்படிக்கை ஒன்று செய்ததும் அமெரிக்க அரசாங்கம் கமரானாவின் கொலைவழக்கை முடிக்க அழுத்தம் கொடுக்கிறது. கைதுசெய்யப்பட்ட டொன் நெற்றோ மற்றும் ரஃபேல் தான் கொலைக்கு காரணம் என நடவடிக்கையை முடிக்குமாறு உத்தரவு வருகிறது. இங்கேயும் அமெரிக்காவின் சர்வதேச சதிகள் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

1988ஆம் வருடம் மெக்சிகோவில் நடந்த அதிபர் தேர்தல் தற்போதும் சர்ச்சைக்குரிய ஒன்று. தொடரில் அதையும் காட்சிப்படுத்தியுள்ளார்கள். நெருக்கடிகள் ஒவ்வொன்றையும் தந்திரமாக கையாண்டு மெக்சிகோவில் இடம்பெற்ற பெரும்பாலான போதைமருந்து வர்த்தகத்தை தனக்குக்கீழே வைத்திருந்த ஃபீலிக்ஸ் இன் கூட்டமைப்பு சிதறுவதுடன் அவனுக்கு இருந்த அரசியல்வாதிகளின் பாதுகாப்பு இல்லாமல் ஆகிறது. மெக்சிகோ பொலிசாரால் ஃபீலிக்ஸ் கைது செய்யப்படுவதுடன் இரண்டாவது சீசன் முடிவடைகிறது.

ஃபீலிக்ஸின் கூட்டமைப்பு உடைந்தாலும் கைது செய்யப்பட்டது ஃபீலிக்ஸ் மட்டும்தான். போதைமருந்து வர்த்தகம் கூட்டமைப்பில் அங்கம் வகிர்த்தவர்களால் தனித்தனியாகத் தொடரப்போகிறது. ஆகவே இன்னுமொரு சீசன் வெளிவருமென எதிர்பார்க்கிறேன்.

நார்கோஸ் தொடரோடு ஒப்பிடும்போது நார்கோஸ் மெக்சிகோ தொடர் ஆரம்பத்தில் சிறிது சுவாரசியம் குறைவாக இருப்பதுபோல் எனக்குத் தோன்றியது. ஆனால் இரண்டாவது சீசனில் சுவாரசியத்திற்கு குறைவில்லை. அதேபோல் முதலாவது சீசனில் கமரானா துணிச்சலாக துப்பறியும் காட்சிகளிலும் தொடர் விறுவிறுப்பாகச் செல்கிறது.

தொடர்புடைய பதிவு Web series - Narcos

Thursday, May 14, 2020

Web series - Narcos

வெப் சீரிஸ்களில் நார்கோஸ் ஒரு குறிப்பிடத்தக்க தொடர். கட்டாயம் பார்க்க வேண்டியதும்கூட. போதைப்பொருளான கொகைன் எப்படி கொலம்பியாவில் இருந்து தயாரிக்கப்பட்டு உலகின் பிறநாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது மற்றும் அதனை கொலம்பியாவும் அமெரிக்காவும் முறியடிக்க முயற்சிப்பதை உண்மைச் சம்பவங்களை சற்று புனைவு சேர்த்து சொல்கிறார்கள். நெற்ஃபிளிக்ஸ் தளத்தில் கிடைக்கிறது. மூன்று சீசன்கள் 2015 முதல் 2018 வரை வெளியாகியிருக்கிறது.

பாப்லோ எஸ்கோபரை பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். மிகப்பிரபலமான கொலம்பிய கொகைன் உற்பத்தியாளன். முதலில் சிறுவளவில் உற்பத்தியை தொடங்கி உற்பத்தியை எவ்வாறு சர்வதேச தேவைற்கேற்ப விரிபுபடுத்துவதும் எஸ்கோபரின் வீழ்ச்சியும் காட்டப்படுகிறது. அமெரிக்க DEA Agent பார்வையில் கதை சொல்லப்படுகிறது. இடையிடையே உண்மை காணொளிகளும் காட்டப்படுகிறது. ஆரம்பத்தில் சிறிது அசுவாரசியமாக செல்லும் கதை ஐந்து ஆறு எபிசோட்களின் பின் சுவாரசியமாக செல்கிறது. காரணம் எஸ்கோபரை பற்றி ஓரளவு முன்னரே தெரிந்திருப்பதும் மற்றும் விபரணப்படம் (documentary) போல இடையிடையே வரும் காட்சிகள் பழக்கமாக சிறிது நேரம் எடுக்கிறது. தொடங்கிவிட்டு மூன்று நான்கு எபிசோட்களில் நிறுத்தியவர்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு திருப்தி கிடைக்கும். பலவித அரசியல்களைப்பற்றி தெரிந்துகொள்ள முடியும். 

எஸ்கோபர் பற்றி சிறிது கேள்விப்பட்ட எனக்கு Medellín Cartel, Cali Cartel, narcos trafficking போன்றவற்றை புதிதாக இருந்தது. அமெரிக்கா கொடுத்த அழுத்தம் காரணமாக கொலம்பிய அரசாங்கம் எஸ்கோபரை கைதுசெய்ய தயாரானதும் தலைமறைவான எஸ்கோபர் வன்முறையை கையிலெடுத்ததும் கொலம்பியா வேறுவழியின்றி எஸ்கோபர் விதித்த நிபந்தனைகளுடன் வீட்டுக்காவலில் வைக்கிறது. பெயருக்குத்தான் சிறையேதவிர எஸ்கோபரின் அனைத்து நடவடிக்கைகளும் தொடர்கின்றன. அரசாங்கத்துக்கு ஒரே ஆறுதல் நாட்டில் வன்முறைகள் குறைவடைந்ததுதான். இத்துடன் முதல் சீசன் முடிவடைகிறது.

ஆனால் அமெரிக்க DEA அதிகாரிகளுக்கு திருப்தி இல்லை. இன்னும் அமெரிக்காவுள் வரும் கொகைன் அளவு குறைத்தபாடில்லை. ஆனால் கொலம்பியாவில் DEA சுதந்திரமாக செயல்படமுடியாது. ஊழலில் திளைக்கும் கொலம்பிய அதிகாரிகளைத்தாண்டி அங்கிருக்கும் நேர்மையான அதிகாரிகளுடன் சேர்ந்து தமது பணிகளை செய்கிறார்கள். கொலம்பிய அதிபர் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக இருப்பதால் வீட்டுச்சிறையில் இருக்கும் போது எஸ்கோபர் செய்த கொலைக்காக கைது செய்து வேறுசிறைக்கு மாற்ற முயற்சிக்கும்போது இரகசிய சுரங்கப்பாதை மூலம் எஸ்கோபர் தப்பிக்கிறான். 

இந்த இடத்தில் அப்போதைய கொலம்பிய அரசியல் நிலைமையை நோக்கவேண்டும். போதைப்பொருள் பிரச்சினை மற்றும் அதனால் விளையும் வன்முறை ஒருபக்கம். எல்லையில் உள்ள கம்யூனிஸ்ட்களை வேட்டையாட தனியார் இராணுவ குழுக்கள். இந்த இராணுவ குழுக்களுக்கு நிதியுதவி மற்றும் ஆயுத உதவி செய்வது CIA. அமெரிக்காவுக்கு கம்யூனிஸ்ட் என்றாலே ஆகாது என்பது உலகறிந்த உண்மை. கொலம்பியா CIA இன் சிலமுடிவுகளால் DEA ன் கைகள் கட்டப்படுவது இதில் இன்னொரு நகைமுரண். இப்படி இரு அமெரிக்க அமைப்புகளுக்கிடையே உள்ள பிரச்சினைகளையும் காட்சிப்படுத்த தவறவில்லை இத்தொடர். இன்னுமொன்று அமெரிக்கர்கள் தம்மையும் தமது நாட்டையும் பெருமையாகவும் மற்றையோரை சிறுமையாக நினைப்பதையும் கூட காட்சிப்படுத்தியுள்ளனர். எஸ்கோபரின் மனைவி மூலமாக தலைமறைவாக இருக்கும் எஸ்கோபரின் செய்மதி தொலைபேசியின் frequency யை கண்டடைந்த பாதுகாவலர் agent Murphy யிடம் சொல்லும்போது தெனாவெட்டாக மேர்பி கேட்பார் “இந்த தகவலுக்காக என்ன வேண்டும்? அமெரிக்க விசாவா அல்லது அமெரிக்காவில் வேலையா? ஆனால் அதுவெல்லாம் தரமுடியாது” என்று சொல்ல அந்த கொலம்பியன் சொல்லுவார் “எல்லோரையும் அப்படியா நினைக்கிறீர்கள்? எனக்கு எதுவும் வேண்டாம். எஸ்கோபரின் குடும்பம் மிகவும் துன்பப்படுகிறது. எஸ்கோபரை கண்டுபடித்து கொல்லுங்கள் முதலில்” என்பார். 

கைதுசெய்ய முற்படும்போது தப்பியோடும் எஸ்கோபர் அந்நாட்டு இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படுவார். எஸ்கோபரின் Medellín Cartel ஐ வீழ்த்தியதில் முன்னின்று உழைத்தவர் DEA Agent Javier Peña அடுத்தவர் Stephen Murphy. இரண்டாவது சீசன் எஸ்கோபரின் வீழ்ச்சியுடன் முடிகிறது.

மூன்றாவது சீசன் Cali cartel இன் வீழ்ச்சியை சொல்கிறது. உண்மையில் ஏஐன்ட் பென்யா கலி காட்ரலை ஒடுக்குவதில் சம்பந்தப்படவில்லை. ஆனால் சீரிசில் பென்யாவின் கதாபாத்திரம் ஒரு புனைவு. மெடயின் காட்ரல் அழிக்கப்பட்டதும் இப்போது வர்த்தகத்தில் முதலிடம் கலி காட்ரலுக்கு. அமெரிக்காவுக்கு இன்னமும் தலையிடி குறைந்தபாடில்லை. Cali cartel ன் பங்குதாரர் நால்வர். Gilberto Rodríguez OrejuelaMiguel Rodríguez OrejuelaJosé Santacruz LondoñoHélmer Herrera. இதில் முக்கியமானவர்கள் ரொட்ரிகோ சகோதரர்கள். 

கலி காட்ரல் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு போதைமருந்து உற்பத்தி ஸ்தாபனம். அவர்களது கணக்குகள் முறையாகவும், கொடுக்கப்பட்ட இலஞ்சங்கள் மறைசொற்களாலும் பேணப்பட்டது. அவர்களிடம் திறமையான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குழு ஒன்றும் இருந்தது. இந்த கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குழு ரஷ்யாவின் KGB உளவுத்துறைக்கு நிகராக அமெரிக்காவால் கூறப்பட்டது. Cali Cartel ஐ முறியடிப்பதில் பெரிய தலைவலியே அவர்கள் அரசாங்கத்தின் மேல்மட்டம் வரை வழங்கிய இலஞ்சம். அந்த நேரத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் கலி காட்ரலின் பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டிருந்த செய்தி வெளியாகி கொலம்பிய ஜனாதிபதிக்கு நெருக்கடி கிளம்பியது. என்றால் அரசாங்கத்தில் விளையாடிய இலஞ்சத்தின் அளவை நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம். CIA வேறு தமது இலாபங்களுக்காக  DEA உடன் முரண்பட்டது. இதனூடாக அமெரிக்கா உலகளவில் தனது தேவைகளுக்கூடாக தன் சொந்த நாட்டுமக்களையே பணயம் வைப்பதை புரிந்துகொள்ளலாம். 

நார்கோஸ் சீரிஸ் ஏன் முக்கியத்துவம் பெறுகிறதென்றால் உண்மைச் சம்பவங்ககளை விறுவிறுப்பாக காட்டியதை விட அது பேசும் அரசியல். எண்பதுகள் தொண்ணூறுகளில் தென்னமரிக்க நாடுகள் பற்றிய ஒரு பார்வை கிடைப்பதுடன் அமெரிக்காவின் உண்மை முகத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையான புரிதல் கிடைக்கும் என்பது நிச்சயம்.