Saturday, June 6, 2020

Web Series - Defending Jacob

அப்பிள் ரீவி+ ல் வெளியாகியிருக்கும் ஒரு குறும் தொடர் Defending Jacob. ஸ்ட்ரீமிங் தளத்தை அப்பிள் நிறுவனம் தொடங்கியதும் சந்தையைப் பிடிப்பதற்காக அப்பிள் சில குறுந்தொடர்களைத் தயாரித்தது. இதுவும் எட்டு அத்தியாயம் மட்டும் கொண்ட ஒரு குறுந்தொடர். கதைச்சுருக்கம் என்னவென்றால் பதின்னான்கு வயதான ஜேக்கப் பார்பர் தனது பள்ளியில் பயிலும் சகமாணவனை கத்தியால் குத்திக் கொலைசெய்ததாக கைது செய்யப்படுகிறார். ஜேக்கப்பின் தந்தை அன்ட்ரூ பார்பர் தான் அப்போதைய அரசத்தரப்பு வக்கீல் மற்றும் விசாரணை அதிகாரி. ஜேக்கப்மீது சந்தேகம் வந்ததும் அன்ட்ரூ தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுகிறார். ஜேக்கப் பிணையில் விடப்பட்டாலும் பார்பர் குடும்பம் தமது சாதாரண வாழ்க்கையை வாழமுடியவில்லை. ஜேக்கப் கைதுசெய்யப்பட்ட நிமிடத்திலிருந்து பார்பர் குடும்பம் சந்திக்கும் சவால்களும் வழக்குக்கு தயாராவதும் வழக்கு நடைபெறுவதும் நொன்லீனியர் காட்சியமைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அன்ட்ரூவை நீதிபதி இல்லாத அவையில் அரச சட்டத்தரணி ஜூரிகள் முன்னிலையில் விசாரணை செய்வதோடு தொடங்கும் தொடரில் ஜேக்கப்பின் வழக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. அன்ட்ரூவின் மீதான கேள்விகளின் காரணம் இறுதியில் தெரியவருகிறது.

நான் இதைப்பார்க்க முடிவுசெய்ததன் காரணம் நீதிமன்ற வழக்கு சம்பந்தமான கதைகளில் எனக்கு இருந்த ஆர்வம். நீதிமன்றத்துக்கு முக்கியமான தேவை ஆதாரம். அத்தோடு அந்த ஆதாரத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் வழக்கறிஞரின் சாமர்த்தியமும் வாதத்திறமையும். இருக்கும் ஆதாரங்கள் ஜேக்கப்புக்கு எதிராகவே உள்ளன. அதை எவ்வாறு பார்பர் குடும்பமும் அவர்களது வழக்கறிஞரும் சமாளிக்கின்றார்கள் என்பது நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற காட்சிகளைவிட பார்பர் குடும்பம் எவ்வாறு சமூகத்திலிருந்து அந்நியப்பட்டு வாழவேண்டி இருப்பதையும் அவர்களது வேலையிடத்தில்கூட அவர்களுக்கு வரவேற்பு இல்லாதிருப்பதும், அத்தோடு தொடர்ந்து துரத்தும் பத்திரிகையாளர்களும் என வலிநிறைந்த வாழ்க்கையை வாழவேண்டி வருகிறது. வழக்கு முடிந்தபின் உங்கள் வாழ்க்கை மீண்டும் பழையபடி திரும்பியதுதானே என அன்ட்ரூவிடம் கேட்கப்பட்டபோது அன்ட்ரூ சொல்வார் “இச்சம்பவத்தின் பின் மீண்டும் எல்லாம் திரும்பியது என்றில்லை. நடந்தது நடந்ததுதான். அதைமாற்றமுடியாது. இனிமேல் வழக்குக்கு முன் வழக்குக்கு பின் என்றுதான் வாழ்க்கை இருக்கும்.” பார்க்கும் எங்களுக்கும் தெரியும் அதுதான் நிதர்சனமும் என்று.

இறுதிமுடிவும் ஒரு எதிர்பார்க்காத திருப்பமாக அமைந்துவிடுகிறது. இங்கே குறிப்பிடவேண்டிய ஒரு விசயம் ஜேக்கப் குடும்பத்தில் இருந்த ஒளிவுமறைவுகள். அன்ட்ரூ கொலை, வன்புணர்வு குற்றங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தந்தைபற்றி மனைவி லோரியிடம்கூட சொல்லவில்லை. அது பின்னர் தெரியவரும்போது சில பிரச்சனைகளை ஏற்படத்துகிறது. கொலை நடந்தபின் அதைத்தழுவி ஜேக்கப் நண்பர்கள் மத்தியில் எழுதிய ஒரு கதை பின்னர் நீதிமன்றத்தில் வைத்துவெளிவரும்போது அது வழக்கில் ஒரு பின்னடைவாகின்றது. ஜேக்கப் பற்றி அன்ட்ரூவும் லோரியும் சரியாகத் தெரிந்துவைத்திருக்கவில்லை. இனி எமக்கிடையில் இரகசியங்கள் இல்லை என்றபின்னும் அவர்கள் சில செயல்களை மறைக்கிறார்கள். இந்த இரகசியங்கள் பின்னர் எவ்வாறு என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்க்கும்போது, கணவன் மனைவிக்கிடையில் காணப்படும் ஒளிவுமறைவுகள், பெற்றோர் தமது பிள்ளைகளை சரியாக கண்காணிக்காத சந்தர்ப்பங்கள் எந்த நிலைமையில் கொண்டுபோய் விடும் என்பதையும் காணலாம்.

இத்தொடர் வில்லியம் லான்டி எழுதிய டிஃபெண்டிங் ஜேக்கப் என்ற அதேபெயரில் வந்த புத்தகத்தை அடிப்படையாக எடுக்கப்பட்டது. அன்ட்ரூ பார்பராக நடித்திருந்தவர் Caption America ஆக நடித்து புகழ்பெற்ற கிறிஸ் ஈவான். Crime drama வகையில் ஆர்வமுள்ளவர்கள் விரும்பிப்பார்க்கலாம். அதிரடி வகையில் எடுக்கப்படாத்தால் சிலருக்கு தொடர் மெதுவாக செல்வதுபோல் தெரியும். ஆனால் அவர்களது உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் நன்றாக எடுக்கப்பட்ட ஒரு தொடர் எனச்சொல்வேன் நான். அதோடு வசனங்களும் நன்றாக இருந்தது. தமிழ் subtitle ம் காணப்பட்டது. குறைவான நடிகர்களோடு நிறைவான நடிப்பும்கூட.

No comments:

Post a Comment