Monday, June 8, 2020

மெசெஞ்சரில் வந்த மாயக்காரி

ஃபேஸ்புக் மெசெஞ்சரில் ஹாய் என்று குறுந்தகவல் வந்திருந்தது. இரண்டு தினங்களுக்கு முன்பே வந்திருந்தாலும் அனுப்பிய நபர் நண்பராக இல்லையென்பதால் வழக்கமான உள்பெட்டியில் காட்டவில்லை அவனும் கவனிக்கவில்லை. யார் என்று பார்த்தான். பெண் பெயரில் இருந்து. தெரிந்த பெயராக இல்லை. ஃபேஸ்புக் கணக்கில் போய்ப்பார்த்தான். யாரோ ஒரு நடிகை சிரித்துக்கொண்டிருந்தார். சமீபத்தில் பிரபலமான நடிகை. ஆனால் அவனுக்கு அந்த நடிகையைப் பிடிப்பதில்லை. வேறு எந்த விபரமும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அந்தநேரம் பார்த்து புரஜெக்ட் மனேஜரின் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினான். இன்று நண்பகல்தான் விடுமுறை முடிந்து சிங்கப்பூர் வந்திருந்தான். நாளைதான் வேலைத்தளத்துக்குப் போகவேண்டியது. அதற்கிடையில் அவருக்கு அவசரம். சலிப்புடன் தொலைபேசியை கட்டிலில் எறிந்துவிட்டு வாங்கிவந்த பிக்மக் பேகரை அசுவாரசியமாக விழுங்கினான்.

சற்றுநேரம் தூங்குவோம் என கட்டிலில் விழுந்தவன் பளீரென அறைவிளக்கு பிரகாசமாக முகத்தில் அடிக்க விழித்துப் பார்த்தால் அறைநண்பன் நின்றிருந்தான். “என்னடா வெள்ளனை வந்திட்டாய்” என்று கேட்டான். அவன் கேலியாகச் சிரித்தபடி “டேய் இரவு மணி ஆகீட்டுது. நானே இண்டைக்கு சப்கொன்ரக்டர் கொன்கிறீட்டை லேற்றாக்கி என்னை வெளிக்கிடவிடாமல் செய்திட்டான் எண்டு கடுப்பில இருக்கிறன்” என்றபடி குளியலறைக்கு போனான். அடகறுமத்த எட்டுமணியாகீற்றா இனி நாளைக்கு வேலை என யோசித்துக்கொண்டே நிமிர்ந்து படுத்தான்.

ஸ்பொட்டிஃபையை எடுத்து தட்டினால் சத்யபிரகாஸ் பறக்கும் ராசாளியே என்று ஆரம்பித்தார். மனம் இயல்பாக நான்குநாட்களுக்குமுன் ஆதிவிநாயகர் கோயிலில் பார்த்த பெண்ணை நினைத்தது. அவன் பொதுவாக கோயில்களுக்குப் போவதில்லை. சிங்கப்பூர் போகமுன்பும் வவுனியாவில் இருந்தகாலப்பகுதியில் ஆதிவிநாயகர் கோயிலுக்குப் போனதாக நினைவில்லை. பாடசாலைத் தோழன் ஒருவன் கேட்டதால் அவனுடன் சென்றான். கோயிலைச் சுற்றிக்கும்பிட்டபின் ஒருஓரமாக தூண்பக்கத்தில் அமர்ந்திருந்தான். நண்பன் இப்போதுதான் பிரகாரத்தை பாதி முடித்திருந்தான். அப்போதுதான் அவளைப் பார்த்தான். இரு நண்பியருடன் வந்துகொண்டிருந்தாள். இருபத்திநாலு இருபத்தைந்து வயது இருக்கலாம். படங்களில் காட்டுவதுபோல் பேரழகியென்று சொல்லமுடியாது. ஆனால் அவனுக்கு அவளில் ஏதோ ஈர்த்தது. மாநிறத்தில் ஊதா நிற சுடிதார் அணிந்திருந்தாள். நீள்வட்ட முகத்தில் சின்னதாக சுடர்போன்ற பொட்டு. கூந்தலை பின்னால் அவிழ்த்து விட்டிருந்தாள். இன்றுதான் முழுகியிருப்பாள் போலும். வீசும் காற்றில் கூந்தல் அலைபாய்ந்தது. அவன் கவனிப்பதை அவளது நண்பி சுட்டிக்காட்ட சடாரென திரும்பிப்பார்த்தாள். அந்த பார்வையில் இருந்த கூர்மை அவனுக்குப் பிடித்திருந்தது. மேலும் பார்ப்பது நாகரிகம் இல்லையென பார்வையை விலக்கினாலும் அவள்பக்கம் பார்வையைத் திருப்பாமலிருக்க முடியவில்லை. மறுபடியும் பார்த்தபோது அவள் அவனை கடைக்கண்ணால் பார்த்தபடி ஏதோ நண்பிகளிடம் கேட்பது தெரிந்தது. என்ன கேட்டிருப்பாள் என அறியும் ஆவல் எழுந்தது. அவளைத்தெரியுமா என நண்பனிடம் கேட்கலாம் என அவனை அணுகுவதற்குள் மூவரும் வெளியே சென்றுவிட்டனர்.

நண்பனிடம் “டேய் யார்ரா அந்த ஊதா சுடிதார்காரி” என்று கேட்டால்  அவன் கோயிலுக்கு வந்து சைட் அடிக்கிறியா நாயே என்கிறான். “என்ன இழவுடா இது போற இடமெல்லாம் சைட் அடிக்கும் நாதாரி கோயில்ல பொண்ணுகளை ஏறெடுத்தும் பார்க்கமாட்டியோ” என்றால் முறைக்கிறான். இன்னும் சிலதினங்களில் வெளிக்கிடவேண்டும் அதற்குமுன் அவளை மறுபடியும் பார்க்கலாம் என்றால் கண்ணில் தென்படவே இல்லை அவள்.

பசிவயிற்றைக் கிள்ளியதும் உணவுச்சாலைக்குச் சென்று கிரிலில் வாட்டிய மாட்டிறைச்சியை ஒரு பிடி பிடித்தபின் அப்படியே காலாற நடக்கும்போதுதான் பகலில் தகவல் அனுப்பிய பெண்ணின் ஞாபகம் வந்தது. யாரும் பெண் பெயரில் விளையாடுகிறார்களோ எனவும் ஒரு சந்தேகம் வந்தது. அடுத்தவிநாடியே இந்த முரட்டு சிங்கிளுடன் யார் விளையாடப்போகிறார்கள் என சிரிப்பும் வந்தது. ஒரு பதில் ஹாய் அனுப்பிவிட்டு தூங்கிவிட்டான்.

காலையில் மறுபடியும் அவளிடம் இருந்து பதில் வந்திருந்தது. ஆனால் அப்போதே வேலைக்கு நேரமாகிவிட்டிருந்தது. அடித்துப்பிடித்து கிளம்பினால் சைட் வாட்ஸப் குறூப் அப்போதே உயிர்பெற்று வேலைச்சுழலுக்குள் இழுத்தது. அவனுக்காக இருவாரமாக காத்திருந்த வேலைகளை ஓரளவு முடிக்கவே இரவாகிவிட்டது. இப்போதுதான் மெசெஞ்சரில் வந்த குறுந்தகவலைப் பார்த்தான்.

“ஹாய் என்னைத் தெரியுமா?” என்றிருந்தது

“தெரியாது. என்னை உங்களுக்குத் தெரியுமா?” என பதில் அனுப்பினான்.

“தெரியும். உங்களை வீனஸில் பார்த்திருக்கிறேன். எனக்கு ஒரு தகவல் வேண்டும். நீங்கள் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த Mirror திரைப்படம் எங்கே பார்க்கலாம் என சொல்வீர்களா?”

அவளது பதிலைப்பார்த்ததும் எனக்கு குழப்பம்தான் வந்தது. நான் வீனஸில் படிக்கவேயில்லை. அதைவிட மிரர் ஒரு பேய்ப்படம். பேய்ப்பட விரும்பிகளுக்கு மாத்திரமே அதைப் பரிந்துரைத்தேன். சரி என்னவாக இருந்தால் என்ன என்று படம் இருக்கும் தளத்தை அனுப்பினேன். தொடர்ந்த நாட்களில் தொடர்ந்த தகவல் பரிமாற்றத்தில் திரைப்படங்கள் புத்தகங்கள் என போன உரையாடலில் இடையிடையே வந்த தனிப்பட்ட தகவல் மூலம் அவளுக்கு என்னைத் தெரிந்திருப்பது தெரியவந்தது. இடையிடையே இருவரும் ஓய்வாக இருந்தால் குரல் அழைப்பு ஏற்படுத்தி கதைப்பதும் தொடர்ந்தது. முகம் தெரியாத அவளது இரசனைகளும் பேச்சும் எனக்குப் பிடிக்க ஆரம்பித்திருந்தது. தினமும் அவளின் தகவலுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். அவளுக்கு நான் பதில் அனுப்ப எடுக்கும் நேரம் குறைய ஆரம்பித்திருந்தது.

அன்று காலையில் இருந்தே அவளை ஒன்லைனில் காணவில்லை. அடிக்கடி மெசெஞ்சரை எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். தொலைபேசி டிங் என பாய்ந்து எடுத்து பார்த்தால் அவள்தான். என்ன கேட்பதென்று தெரியாமல் எழுதி எழுதி அழிக்கின்றேன். கைகள் நடுங்கத்தொடங்கிவிட்டது. எனது தடுமாற்றம் அவளுக்கு விளங்கியிருக்க வேண்டும். மெசெஞ்சரில் அழைப்பை எடுத்தாள்.

அழைப்பை அனுமதித்து ஹலோ என்றேன். சிலவிநாடிகள் மௌனம். திடுமென “அன்று ஏன் என்னை அப்பிடி முறைச்சு முறைச்சு பார்த்தனியள்” என்றாள். ஏற்கனவே இருந்த மனநிலையில் ஒன்றும் புரியவில்லை. பேந்த பேந்த முழிக்கத்தான் முடிந்தது. “என்ன பதிலையே காணோம்” இது அவள். “எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை. உங்கட முகமே தெரியாது இதில நான் எப்பிடி முறைச்சு முறைச்சு பார்க்கிறது” இது நான். சிரித்துக்கொண்டே “நான் கேட்கிறது அண்டைக்கு  நீங்கள் ஆதிவிநாயகர் கோயில்ல என்னை பார்த்ததை”. அப்போதுதான் எனக்கு எல்லாம் விளங்கியது. “அடிகள்ளி அப்ப என்னை வீனஸில பார்த்தது, மிரர் பட லிங் கேட்டது எல்லாம் என்னை ஏமாற்றவா?” சந்தோசத்தில் கத்தியேவிட்டேன். சத்தத்தையே காணவில்லை. எடுத்துப்பார்த்தால் கட்பண்ணிவிட்டாள்.

சிரித்துக்கொண்டே தொலைபேசியைப்பார்த்தால் காதலுடன் ஒரு ஸ்மைலி சிரித்தது என்னைப்பார்த்து.



No comments:

Post a Comment