விடிந்தாலும் வெளிச்சம் இல்லை வானத்தில். முருகனுக்கு பாயிலிருந்து எழும்பவே மனமில்லை. குளிர் காற்று நடுங்கச்செய்ய நெஞ்சைக் குறுக்கிக்கொண்டு புரண்டு படுத்தான். அப்பாலே அவன் மனைவி சரசுவும் இருபிள்ளைகளும் ஒண்டிக்கொண்டு படுத்திருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் துயரம் வந்து கௌவிக்கொண்டது. எல்லாம் இந்த கொரோணா செய்தவேலை. இந்த இரண்டு மாதமாகத்தான் இந்தப்பாடு.
கட்டட வேலைதான் முருகனின் தொழில். திறமையான மேசன் எனப்பெயரெடுத்தவன். வருடத்தில் பெரும்பாலான நாட்கள் வேலை இருக்கும். வீடு கட்டும் கொன்ராக்டர் சுப்பையா அண்ணன் ஒரு வீடு முடிய இன்னொரு வீடு என வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு, உடுப்பிட்டி என எங்கேயாவது எடுத்துவிடுவார். எடுத்தால் அதை முடிக்காமல் மற்றவீடு தொடங்கமாட்டார். அவரது தொழில் நேர்த்தி கண்டு எப்படியும் யாராவது அவருக்காக காத்திருப்பார்கள். அவரது ஆஸ்தான மேசன் முருகன். தச்சுவேலை நடக்கும் சில தினங்களுக்கு முருகனுக்கு வேலை இருக்காது. அப்போது சுப்பையா அண்ணன் சொல்லுவார் “டேய் முருகா ஒண்டுக்கும் யோசியாத. கூரை போட்டதும் கெதியா பூச்சுவேலை முடிச்சிடு அடுத்த வீடு ரெடியா இருக்கு. நாங்கதான் கட்டோனும் எண்டு கந்தையாண்ணை ஒத்தைக்காலிலை நிக்கிறார்.” சொல்லும்போது அவர் முகத்தில் ஒரு பெருமிதம் இருக்கும். இவன் வெறுமனே சிரித்துவைப்பான். அவனது சுபாவமே அப்படித்தான். அவ்வளவாக கதைக்கமாட்டான். சுப்பையா அண்ணன் மேலும் சொல்லுவார் “எங்கட சனத்திட்ட காசு இருக்கு கண்டியோ. அதுவும் சாகிறதுக்குள்ள வீடுகட்டாட்டி அவையின்ற ஆத்மா சாந்தியடையாது”. “ஏதோ எங்கட சிவபெருமான் அருளால தொடர்ந்து வேலைவந்தாச்சரி” என மனதுக்குள் நினைத்துக்கொள்வான்.
முருகனுக்கு பீடி சிகரெட் என எந்த கெட்டபழக்கமும் இல்லை. மனம் சந்தோசமாக இருந்தால் தவறணையில் போய் கொஞ்சம் கள்ளு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவான். கள்ளு குடித்திருந்தால் படலையில் கதவைச்சாத்தும்போதே சரசு கண்டுபிடித்துவிடுவாள். பக்கத்தில் படித்துக்கொண்டிருக்கும் மகளைப்பார்த்துச் சொல்வாள் “உன்ர கொப்பருக்கு இண்டைக்கு என்ன குசியோ தெரியேல்லை வந்திட்டார் கள்ளடிச்சிட்டு”. குடிச்சிட்டு ஒரு வம்புதும்பும் செய்யமாட்டார் ஆனால் முறைக்கும் மனைவியை சமாதானப்படுத்த கொஞ்சம் அதிகமாகவே கொஞ்சிவழிவார். இது கல்யாணமான புதிதில் முதல்முறையாக கள்ளு குடித்துவிட்டு வந்ததில் இருந்து தொடர்கிறது. சரசுவும் கூலிக்கு வெங்காயம் வைப்பது, புல்லுப் பிடுங்கப் போகிறது என அவ்வப்போது வேலைக்குப் போகிறவள். எனவே பெரிய கஸ்டம் ஏதுமின்றி சீவிக்கமுடிந்தது. இடையிடையே வரும் பிள்ளைகளின் செலவுகள், திருவிழாக்கள், சொந்தக்காரர்களின் விசேசங்கள் என எதிர்காலத்துக்காகச் சேமிப்பதை கவனிக்காது விட்டுவிட்டதால் தான் இந்த இட்டுமுட்டு.
“காசைக்கொஞ்சம் பாங்கில போட்டுவையுங்கோ. மூத்தவளுக்கும் பிறகு தேவைப்படும்” என்று சரசு அடிக்கடி கூறினாலும் “அடி இவளுக்கு இப்பதானே எட்டு வயசாகிது. அவன் சின்னவன் வளர்ந்து தன்ரபாடப் பார்ப்பான். இவளுக்குத்தானே இந்த வீடு” என அவள் வாயை அடைத்துவிடுவான். ஏதோ கையில் இருந்ததை வைத்து ஒருமாதம் சமாளிக்க முடிந்தது. அரசாங்கம் தந்த சமுர்த்தி காசு ஐந்தாயிரமும் ஐந்தாயிரம் பெறுமதியான உணவுப்பொட்களும் எத்தனை நாட்களுக்குப் போதும். நகைகள் இருந்தாலும் அடகுவைக்கலாம். எல்லாம் வீடுகட்டுவதில் கரைந்துவிட்டது. பிள்ளைகளும் வாய்க்கு ருசியாக சாப்பிட்டு வளர்ந்தவர்கள். செலவைக்குறைப்பதற்காக சிக்கனச்சாப்பாடு சாப்பிட்டு இளைத்துப்போய்விட்டார்கள்.
நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்துவதாக சூரியன் காலைச் செய்தியறிக்கை கூறியது. ஒரு உத்வேகம் வர சீக்கிரம் தேநீரைக்குடித்துவிட்டு சைக்கிளை எடுத்து வீதியில் பொலிஸ் நிற்கிறார்களா என அவதானித்துவிட்டு வேகமாக மிதித்து சுப்பையா அண்ணாவின் வீட்டைநோக்கி விரைந்தான். அங்கே சுப்பையா அண்ணன் தற்போது கட்டிக்கொண்டிருக்கும் வீட்டுச்சொந்தக்காரரிடம் தான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். பேசிவிட்டு கேள்வியுடன் ஏறிட்ட முருகனின் முகத்தைப்பார்த்து மலர்ச்சியுடன் “முருகா நாளைக்கு வேலை தொடங்குவம். காலமை வந்திடு, நான் எங்கட ஆக்களுக்கு போன்பண்ணி வரச்சொல்றன்.” என்றவாறே ஒரு ஐநூறு ரூபாயை எடுத்து கொடுத்தார்.
மனநிம்மதியுடன் வீட்டுக்கு சைக்கிளை மிதித்தான் முருகன். வழியில் மதவடியில் இருந்த சாப்பாட்டுக்கடையைப் பார்த்ததும் பிள்ளைகளின் நினைப்பு வந்தது. அவர்களுக்கு நீண்டகாலமாக ஒன்றும் வாங்கிக்கொடுக்கவில்லை எனநினைத்தபடியே ஆளுக்கு முன்று தோசைகள் வாங்கிக்கொண்டு வீடு வந்து ஆவலுடன் பார்த்த பிள்ளைகளுக்குக் கொடுத்தபடி சந்தோசமாக சரசுவிடம் விசயத்தைச் சொன்னான்.
“ம்ம்... இனி பழையபடி எல்லாம் சரிவரும். ரெண்டு மாசமா கையில காசில்லாம சரியாக் கஸ்ரப்பட்டிட்டம். இனியாவது நான் சொல்றபடி காசைக் கொஞ்சம் சேர்த்துவைப்பம். திரும்பவும் இதுபோல வேலைக்குப் போகேலாம இருந்தா பிறகும் இதேமாரி கஸ்ரப்படோணும். இப்பவே சிக்கனமா இருந்து பழகீட்டம்தானே. கொஞ்சம் பார்த்து செலவுகளைக் குறைக்கோணும். என்ன நான் சொல்றது” சரசு கேட்டாள்.
அமைதியாக சிலவிநாடிகள் சரசுவை பார்த்தவன் ஆமோதிப்பாகத் தலையசைத்தான் முருகன்.
No comments:
Post a Comment