Thursday, June 11, 2020

சேமிப்பு

விடிந்தாலும் வெளிச்சம் இல்லை வானத்தில். முருகனுக்கு பாயிலிருந்து எழும்பவே மனமில்லை. குளிர் காற்று நடுங்கச்செய்ய நெஞ்சைக் குறுக்கிக்கொண்டு புரண்டு படுத்தான். அப்பாலே அவன் மனைவி சரசுவும் இருபிள்ளைகளும் ஒண்டிக்கொண்டு படுத்திருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் துயரம் வந்து கௌவிக்கொண்டது. எல்லாம் இந்த கொரோணா செய்தவேலை. இந்த இரண்டு மாதமாகத்தான் இந்தப்பாடு. 

கட்டட வேலைதான் முருகனின் தொழில். திறமையான மேசன் எனப்பெயரெடுத்தவன். வருடத்தில் பெரும்பாலான நாட்கள் வேலை இருக்கும். வீடு கட்டும் கொன்ராக்டர் சுப்பையா அண்ணன் ஒரு வீடு முடிய இன்னொரு வீடு என வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு, உடுப்பிட்டி என எங்கேயாவது எடுத்துவிடுவார். எடுத்தால் அதை முடிக்காமல் மற்றவீடு தொடங்கமாட்டார். அவரது தொழில் நேர்த்தி கண்டு எப்படியும் யாராவது அவருக்காக காத்திருப்பார்கள். அவரது ஆஸ்தான மேசன் முருகன். தச்சுவேலை நடக்கும் சில தினங்களுக்கு முருகனுக்கு வேலை இருக்காது. அப்போது சுப்பையா அண்ணன் சொல்லுவார் “டேய் முருகா ஒண்டுக்கும் யோசியாத. கூரை போட்டதும் கெதியா பூச்சுவேலை முடிச்சிடு அடுத்த வீடு ரெடியா இருக்கு. நாங்கதான் கட்டோனும் எண்டு கந்தையாண்ணை ஒத்தைக்காலிலை நிக்கிறார்.” சொல்லும்போது அவர் முகத்தில் ஒரு பெருமிதம் இருக்கும். இவன் வெறுமனே சிரித்துவைப்பான். அவனது சுபாவமே அப்படித்தான். அவ்வளவாக கதைக்கமாட்டான். சுப்பையா அண்ணன் மேலும் சொல்லுவார் “எங்கட சனத்திட்ட காசு இருக்கு கண்டியோ. அதுவும் சாகிறதுக்குள்ள வீடுகட்டாட்டி அவையின்ற ஆத்மா சாந்தியடையாது”. “ஏதோ எங்கட சிவபெருமான் அருளால தொடர்ந்து வேலைவந்தாச்சரி” என மனதுக்குள் நினைத்துக்கொள்வான்.

முருகனுக்கு பீடி சிகரெட் என எந்த கெட்டபழக்கமும் இல்லை. மனம் சந்தோசமாக இருந்தால் தவறணையில் போய் கொஞ்சம் கள்ளு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவான். கள்ளு குடித்திருந்தால் படலையில் கதவைச்சாத்தும்போதே சரசு கண்டுபிடித்துவிடுவாள். பக்கத்தில் படித்துக்கொண்டிருக்கும் மகளைப்பார்த்துச் சொல்வாள் “உன்ர கொப்பருக்கு இண்டைக்கு என்ன குசியோ தெரியேல்லை வந்திட்டார் கள்ளடிச்சிட்டு”. குடிச்சிட்டு ஒரு வம்புதும்பும் செய்யமாட்டார் ஆனால் முறைக்கும் மனைவியை சமாதானப்படுத்த கொஞ்சம் அதிகமாகவே கொஞ்சிவழிவார். இது கல்யாணமான புதிதில் முதல்முறையாக கள்ளு குடித்துவிட்டு வந்ததில் இருந்து தொடர்கிறது. சரசுவும் கூலிக்கு வெங்காயம் வைப்பது, புல்லுப் பிடுங்கப் போகிறது என அவ்வப்போது வேலைக்குப் போகிறவள். எனவே பெரிய கஸ்டம் ஏதுமின்றி சீவிக்கமுடிந்தது. இடையிடையே வரும் பிள்ளைகளின் செலவுகள், திருவிழாக்கள், சொந்தக்காரர்களின் விசேசங்கள் என எதிர்காலத்துக்காகச் சேமிப்பதை கவனிக்காது விட்டுவிட்டதால் தான் இந்த இட்டுமுட்டு.

“காசைக்கொஞ்சம் பாங்கில போட்டுவையுங்கோ. மூத்தவளுக்கும் பிறகு தேவைப்படும்” என்று சரசு அடிக்கடி கூறினாலும் “அடி இவளுக்கு இப்பதானே எட்டு வயசாகிது. அவன் சின்னவன் வளர்ந்து தன்ரபாடப் பார்ப்பான். இவளுக்குத்தானே இந்த வீடு” என அவள் வாயை அடைத்துவிடுவான். ஏதோ கையில் இருந்ததை வைத்து ஒருமாதம் சமாளிக்க முடிந்தது. அரசாங்கம் தந்த சமுர்த்தி காசு ஐந்தாயிரமும் ஐந்தாயிரம் பெறுமதியான உணவுப்பொட்களும் எத்தனை நாட்களுக்குப் போதும். நகைகள் இருந்தாலும் அடகுவைக்கலாம். எல்லாம் வீடுகட்டுவதில் கரைந்துவிட்டது. பிள்ளைகளும் வாய்க்கு ருசியாக சாப்பிட்டு வளர்ந்தவர்கள். செலவைக்குறைப்பதற்காக சிக்கனச்சாப்பாடு சாப்பிட்டு இளைத்துப்போய்விட்டார்கள்.

நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்துவதாக சூரியன் காலைச் செய்தியறிக்கை கூறியது. ஒரு உத்வேகம் வர சீக்கிரம் தேநீரைக்குடித்துவிட்டு சைக்கிளை எடுத்து வீதியில் பொலிஸ் நிற்கிறார்களா என அவதானித்துவிட்டு வேகமாக மிதித்து சுப்பையா அண்ணாவின் வீட்டைநோக்கி விரைந்தான். அங்கே சுப்பையா அண்ணன் தற்போது கட்டிக்கொண்டிருக்கும் வீட்டுச்சொந்தக்காரரிடம் தான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். பேசிவிட்டு கேள்வியுடன் ஏறிட்ட முருகனின் முகத்தைப்பார்த்து மலர்ச்சியுடன் “முருகா நாளைக்கு வேலை தொடங்குவம். காலமை வந்திடு, நான் எங்கட ஆக்களுக்கு போன்பண்ணி வரச்சொல்றன்.” என்றவாறே ஒரு ஐநூறு ரூபாயை எடுத்து கொடுத்தார்.

மனநிம்மதியுடன் வீட்டுக்கு சைக்கிளை மிதித்தான் முருகன். வழியில் மதவடியில் இருந்த சாப்பாட்டுக்கடையைப் பார்த்ததும் பிள்ளைகளின் நினைப்பு வந்தது. அவர்களுக்கு நீண்டகாலமாக ஒன்றும் வாங்கிக்கொடுக்கவில்லை எனநினைத்தபடியே ஆளுக்கு முன்று தோசைகள் வாங்கிக்கொண்டு வீடு வந்து ஆவலுடன் பார்த்த பிள்ளைகளுக்குக் கொடுத்தபடி சந்தோசமாக சரசுவிடம் விசயத்தைச் சொன்னான்.

“ம்ம்... இனி பழையபடி எல்லாம் சரிவரும். ரெண்டு மாசமா கையில காசில்லாம சரியாக் கஸ்ரப்பட்டிட்டம். இனியாவது நான் சொல்றபடி காசைக் கொஞ்சம் சேர்த்துவைப்பம். திரும்பவும் இதுபோல வேலைக்குப் போகேலாம இருந்தா பிறகும் இதேமாரி கஸ்ரப்படோணும். இப்பவே சிக்கனமா இருந்து பழகீட்டம்தானே. கொஞ்சம் பார்த்து செலவுகளைக் குறைக்கோணும். என்ன நான் சொல்றது” சரசு கேட்டாள்.

அமைதியாக சிலவிநாடிகள் சரசுவை பார்த்தவன் ஆமோதிப்பாகத் தலையசைத்தான் முருகன்.

Monday, June 8, 2020

மெசெஞ்சரில் வந்த மாயக்காரி

ஃபேஸ்புக் மெசெஞ்சரில் ஹாய் என்று குறுந்தகவல் வந்திருந்தது. இரண்டு தினங்களுக்கு முன்பே வந்திருந்தாலும் அனுப்பிய நபர் நண்பராக இல்லையென்பதால் வழக்கமான உள்பெட்டியில் காட்டவில்லை அவனும் கவனிக்கவில்லை. யார் என்று பார்த்தான். பெண் பெயரில் இருந்து. தெரிந்த பெயராக இல்லை. ஃபேஸ்புக் கணக்கில் போய்ப்பார்த்தான். யாரோ ஒரு நடிகை சிரித்துக்கொண்டிருந்தார். சமீபத்தில் பிரபலமான நடிகை. ஆனால் அவனுக்கு அந்த நடிகையைப் பிடிப்பதில்லை. வேறு எந்த விபரமும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அந்தநேரம் பார்த்து புரஜெக்ட் மனேஜரின் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினான். இன்று நண்பகல்தான் விடுமுறை முடிந்து சிங்கப்பூர் வந்திருந்தான். நாளைதான் வேலைத்தளத்துக்குப் போகவேண்டியது. அதற்கிடையில் அவருக்கு அவசரம். சலிப்புடன் தொலைபேசியை கட்டிலில் எறிந்துவிட்டு வாங்கிவந்த பிக்மக் பேகரை அசுவாரசியமாக விழுங்கினான்.

சற்றுநேரம் தூங்குவோம் என கட்டிலில் விழுந்தவன் பளீரென அறைவிளக்கு பிரகாசமாக முகத்தில் அடிக்க விழித்துப் பார்த்தால் அறைநண்பன் நின்றிருந்தான். “என்னடா வெள்ளனை வந்திட்டாய்” என்று கேட்டான். அவன் கேலியாகச் சிரித்தபடி “டேய் இரவு மணி ஆகீட்டுது. நானே இண்டைக்கு சப்கொன்ரக்டர் கொன்கிறீட்டை லேற்றாக்கி என்னை வெளிக்கிடவிடாமல் செய்திட்டான் எண்டு கடுப்பில இருக்கிறன்” என்றபடி குளியலறைக்கு போனான். அடகறுமத்த எட்டுமணியாகீற்றா இனி நாளைக்கு வேலை என யோசித்துக்கொண்டே நிமிர்ந்து படுத்தான்.

ஸ்பொட்டிஃபையை எடுத்து தட்டினால் சத்யபிரகாஸ் பறக்கும் ராசாளியே என்று ஆரம்பித்தார். மனம் இயல்பாக நான்குநாட்களுக்குமுன் ஆதிவிநாயகர் கோயிலில் பார்த்த பெண்ணை நினைத்தது. அவன் பொதுவாக கோயில்களுக்குப் போவதில்லை. சிங்கப்பூர் போகமுன்பும் வவுனியாவில் இருந்தகாலப்பகுதியில் ஆதிவிநாயகர் கோயிலுக்குப் போனதாக நினைவில்லை. பாடசாலைத் தோழன் ஒருவன் கேட்டதால் அவனுடன் சென்றான். கோயிலைச் சுற்றிக்கும்பிட்டபின் ஒருஓரமாக தூண்பக்கத்தில் அமர்ந்திருந்தான். நண்பன் இப்போதுதான் பிரகாரத்தை பாதி முடித்திருந்தான். அப்போதுதான் அவளைப் பார்த்தான். இரு நண்பியருடன் வந்துகொண்டிருந்தாள். இருபத்திநாலு இருபத்தைந்து வயது இருக்கலாம். படங்களில் காட்டுவதுபோல் பேரழகியென்று சொல்லமுடியாது. ஆனால் அவனுக்கு அவளில் ஏதோ ஈர்த்தது. மாநிறத்தில் ஊதா நிற சுடிதார் அணிந்திருந்தாள். நீள்வட்ட முகத்தில் சின்னதாக சுடர்போன்ற பொட்டு. கூந்தலை பின்னால் அவிழ்த்து விட்டிருந்தாள். இன்றுதான் முழுகியிருப்பாள் போலும். வீசும் காற்றில் கூந்தல் அலைபாய்ந்தது. அவன் கவனிப்பதை அவளது நண்பி சுட்டிக்காட்ட சடாரென திரும்பிப்பார்த்தாள். அந்த பார்வையில் இருந்த கூர்மை அவனுக்குப் பிடித்திருந்தது. மேலும் பார்ப்பது நாகரிகம் இல்லையென பார்வையை விலக்கினாலும் அவள்பக்கம் பார்வையைத் திருப்பாமலிருக்க முடியவில்லை. மறுபடியும் பார்த்தபோது அவள் அவனை கடைக்கண்ணால் பார்த்தபடி ஏதோ நண்பிகளிடம் கேட்பது தெரிந்தது. என்ன கேட்டிருப்பாள் என அறியும் ஆவல் எழுந்தது. அவளைத்தெரியுமா என நண்பனிடம் கேட்கலாம் என அவனை அணுகுவதற்குள் மூவரும் வெளியே சென்றுவிட்டனர்.

நண்பனிடம் “டேய் யார்ரா அந்த ஊதா சுடிதார்காரி” என்று கேட்டால்  அவன் கோயிலுக்கு வந்து சைட் அடிக்கிறியா நாயே என்கிறான். “என்ன இழவுடா இது போற இடமெல்லாம் சைட் அடிக்கும் நாதாரி கோயில்ல பொண்ணுகளை ஏறெடுத்தும் பார்க்கமாட்டியோ” என்றால் முறைக்கிறான். இன்னும் சிலதினங்களில் வெளிக்கிடவேண்டும் அதற்குமுன் அவளை மறுபடியும் பார்க்கலாம் என்றால் கண்ணில் தென்படவே இல்லை அவள்.

பசிவயிற்றைக் கிள்ளியதும் உணவுச்சாலைக்குச் சென்று கிரிலில் வாட்டிய மாட்டிறைச்சியை ஒரு பிடி பிடித்தபின் அப்படியே காலாற நடக்கும்போதுதான் பகலில் தகவல் அனுப்பிய பெண்ணின் ஞாபகம் வந்தது. யாரும் பெண் பெயரில் விளையாடுகிறார்களோ எனவும் ஒரு சந்தேகம் வந்தது. அடுத்தவிநாடியே இந்த முரட்டு சிங்கிளுடன் யார் விளையாடப்போகிறார்கள் என சிரிப்பும் வந்தது. ஒரு பதில் ஹாய் அனுப்பிவிட்டு தூங்கிவிட்டான்.

காலையில் மறுபடியும் அவளிடம் இருந்து பதில் வந்திருந்தது. ஆனால் அப்போதே வேலைக்கு நேரமாகிவிட்டிருந்தது. அடித்துப்பிடித்து கிளம்பினால் சைட் வாட்ஸப் குறூப் அப்போதே உயிர்பெற்று வேலைச்சுழலுக்குள் இழுத்தது. அவனுக்காக இருவாரமாக காத்திருந்த வேலைகளை ஓரளவு முடிக்கவே இரவாகிவிட்டது. இப்போதுதான் மெசெஞ்சரில் வந்த குறுந்தகவலைப் பார்த்தான்.

“ஹாய் என்னைத் தெரியுமா?” என்றிருந்தது

“தெரியாது. என்னை உங்களுக்குத் தெரியுமா?” என பதில் அனுப்பினான்.

“தெரியும். உங்களை வீனஸில் பார்த்திருக்கிறேன். எனக்கு ஒரு தகவல் வேண்டும். நீங்கள் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த Mirror திரைப்படம் எங்கே பார்க்கலாம் என சொல்வீர்களா?”

அவளது பதிலைப்பார்த்ததும் எனக்கு குழப்பம்தான் வந்தது. நான் வீனஸில் படிக்கவேயில்லை. அதைவிட மிரர் ஒரு பேய்ப்படம். பேய்ப்பட விரும்பிகளுக்கு மாத்திரமே அதைப் பரிந்துரைத்தேன். சரி என்னவாக இருந்தால் என்ன என்று படம் இருக்கும் தளத்தை அனுப்பினேன். தொடர்ந்த நாட்களில் தொடர்ந்த தகவல் பரிமாற்றத்தில் திரைப்படங்கள் புத்தகங்கள் என போன உரையாடலில் இடையிடையே வந்த தனிப்பட்ட தகவல் மூலம் அவளுக்கு என்னைத் தெரிந்திருப்பது தெரியவந்தது. இடையிடையே இருவரும் ஓய்வாக இருந்தால் குரல் அழைப்பு ஏற்படுத்தி கதைப்பதும் தொடர்ந்தது. முகம் தெரியாத அவளது இரசனைகளும் பேச்சும் எனக்குப் பிடிக்க ஆரம்பித்திருந்தது. தினமும் அவளின் தகவலுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். அவளுக்கு நான் பதில் அனுப்ப எடுக்கும் நேரம் குறைய ஆரம்பித்திருந்தது.

அன்று காலையில் இருந்தே அவளை ஒன்லைனில் காணவில்லை. அடிக்கடி மெசெஞ்சரை எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். தொலைபேசி டிங் என பாய்ந்து எடுத்து பார்த்தால் அவள்தான். என்ன கேட்பதென்று தெரியாமல் எழுதி எழுதி அழிக்கின்றேன். கைகள் நடுங்கத்தொடங்கிவிட்டது. எனது தடுமாற்றம் அவளுக்கு விளங்கியிருக்க வேண்டும். மெசெஞ்சரில் அழைப்பை எடுத்தாள்.

அழைப்பை அனுமதித்து ஹலோ என்றேன். சிலவிநாடிகள் மௌனம். திடுமென “அன்று ஏன் என்னை அப்பிடி முறைச்சு முறைச்சு பார்த்தனியள்” என்றாள். ஏற்கனவே இருந்த மனநிலையில் ஒன்றும் புரியவில்லை. பேந்த பேந்த முழிக்கத்தான் முடிந்தது. “என்ன பதிலையே காணோம்” இது அவள். “எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை. உங்கட முகமே தெரியாது இதில நான் எப்பிடி முறைச்சு முறைச்சு பார்க்கிறது” இது நான். சிரித்துக்கொண்டே “நான் கேட்கிறது அண்டைக்கு  நீங்கள் ஆதிவிநாயகர் கோயில்ல என்னை பார்த்ததை”. அப்போதுதான் எனக்கு எல்லாம் விளங்கியது. “அடிகள்ளி அப்ப என்னை வீனஸில பார்த்தது, மிரர் பட லிங் கேட்டது எல்லாம் என்னை ஏமாற்றவா?” சந்தோசத்தில் கத்தியேவிட்டேன். சத்தத்தையே காணவில்லை. எடுத்துப்பார்த்தால் கட்பண்ணிவிட்டாள்.

சிரித்துக்கொண்டே தொலைபேசியைப்பார்த்தால் காதலுடன் ஒரு ஸ்மைலி சிரித்தது என்னைப்பார்த்து.



Saturday, June 6, 2020

Web Series - Defending Jacob

அப்பிள் ரீவி+ ல் வெளியாகியிருக்கும் ஒரு குறும் தொடர் Defending Jacob. ஸ்ட்ரீமிங் தளத்தை அப்பிள் நிறுவனம் தொடங்கியதும் சந்தையைப் பிடிப்பதற்காக அப்பிள் சில குறுந்தொடர்களைத் தயாரித்தது. இதுவும் எட்டு அத்தியாயம் மட்டும் கொண்ட ஒரு குறுந்தொடர். கதைச்சுருக்கம் என்னவென்றால் பதின்னான்கு வயதான ஜேக்கப் பார்பர் தனது பள்ளியில் பயிலும் சகமாணவனை கத்தியால் குத்திக் கொலைசெய்ததாக கைது செய்யப்படுகிறார். ஜேக்கப்பின் தந்தை அன்ட்ரூ பார்பர் தான் அப்போதைய அரசத்தரப்பு வக்கீல் மற்றும் விசாரணை அதிகாரி. ஜேக்கப்மீது சந்தேகம் வந்ததும் அன்ட்ரூ தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுகிறார். ஜேக்கப் பிணையில் விடப்பட்டாலும் பார்பர் குடும்பம் தமது சாதாரண வாழ்க்கையை வாழமுடியவில்லை. ஜேக்கப் கைதுசெய்யப்பட்ட நிமிடத்திலிருந்து பார்பர் குடும்பம் சந்திக்கும் சவால்களும் வழக்குக்கு தயாராவதும் வழக்கு நடைபெறுவதும் நொன்லீனியர் காட்சியமைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அன்ட்ரூவை நீதிபதி இல்லாத அவையில் அரச சட்டத்தரணி ஜூரிகள் முன்னிலையில் விசாரணை செய்வதோடு தொடங்கும் தொடரில் ஜேக்கப்பின் வழக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. அன்ட்ரூவின் மீதான கேள்விகளின் காரணம் இறுதியில் தெரியவருகிறது.

நான் இதைப்பார்க்க முடிவுசெய்ததன் காரணம் நீதிமன்ற வழக்கு சம்பந்தமான கதைகளில் எனக்கு இருந்த ஆர்வம். நீதிமன்றத்துக்கு முக்கியமான தேவை ஆதாரம். அத்தோடு அந்த ஆதாரத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் வழக்கறிஞரின் சாமர்த்தியமும் வாதத்திறமையும். இருக்கும் ஆதாரங்கள் ஜேக்கப்புக்கு எதிராகவே உள்ளன. அதை எவ்வாறு பார்பர் குடும்பமும் அவர்களது வழக்கறிஞரும் சமாளிக்கின்றார்கள் என்பது நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற காட்சிகளைவிட பார்பர் குடும்பம் எவ்வாறு சமூகத்திலிருந்து அந்நியப்பட்டு வாழவேண்டி இருப்பதையும் அவர்களது வேலையிடத்தில்கூட அவர்களுக்கு வரவேற்பு இல்லாதிருப்பதும், அத்தோடு தொடர்ந்து துரத்தும் பத்திரிகையாளர்களும் என வலிநிறைந்த வாழ்க்கையை வாழவேண்டி வருகிறது. வழக்கு முடிந்தபின் உங்கள் வாழ்க்கை மீண்டும் பழையபடி திரும்பியதுதானே என அன்ட்ரூவிடம் கேட்கப்பட்டபோது அன்ட்ரூ சொல்வார் “இச்சம்பவத்தின் பின் மீண்டும் எல்லாம் திரும்பியது என்றில்லை. நடந்தது நடந்ததுதான். அதைமாற்றமுடியாது. இனிமேல் வழக்குக்கு முன் வழக்குக்கு பின் என்றுதான் வாழ்க்கை இருக்கும்.” பார்க்கும் எங்களுக்கும் தெரியும் அதுதான் நிதர்சனமும் என்று.

இறுதிமுடிவும் ஒரு எதிர்பார்க்காத திருப்பமாக அமைந்துவிடுகிறது. இங்கே குறிப்பிடவேண்டிய ஒரு விசயம் ஜேக்கப் குடும்பத்தில் இருந்த ஒளிவுமறைவுகள். அன்ட்ரூ கொலை, வன்புணர்வு குற்றங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தந்தைபற்றி மனைவி லோரியிடம்கூட சொல்லவில்லை. அது பின்னர் தெரியவரும்போது சில பிரச்சனைகளை ஏற்படத்துகிறது. கொலை நடந்தபின் அதைத்தழுவி ஜேக்கப் நண்பர்கள் மத்தியில் எழுதிய ஒரு கதை பின்னர் நீதிமன்றத்தில் வைத்துவெளிவரும்போது அது வழக்கில் ஒரு பின்னடைவாகின்றது. ஜேக்கப் பற்றி அன்ட்ரூவும் லோரியும் சரியாகத் தெரிந்துவைத்திருக்கவில்லை. இனி எமக்கிடையில் இரகசியங்கள் இல்லை என்றபின்னும் அவர்கள் சில செயல்களை மறைக்கிறார்கள். இந்த இரகசியங்கள் பின்னர் எவ்வாறு என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்க்கும்போது, கணவன் மனைவிக்கிடையில் காணப்படும் ஒளிவுமறைவுகள், பெற்றோர் தமது பிள்ளைகளை சரியாக கண்காணிக்காத சந்தர்ப்பங்கள் எந்த நிலைமையில் கொண்டுபோய் விடும் என்பதையும் காணலாம்.

இத்தொடர் வில்லியம் லான்டி எழுதிய டிஃபெண்டிங் ஜேக்கப் என்ற அதேபெயரில் வந்த புத்தகத்தை அடிப்படையாக எடுக்கப்பட்டது. அன்ட்ரூ பார்பராக நடித்திருந்தவர் Caption America ஆக நடித்து புகழ்பெற்ற கிறிஸ் ஈவான். Crime drama வகையில் ஆர்வமுள்ளவர்கள் விரும்பிப்பார்க்கலாம். அதிரடி வகையில் எடுக்கப்படாத்தால் சிலருக்கு தொடர் மெதுவாக செல்வதுபோல் தெரியும். ஆனால் அவர்களது உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் நன்றாக எடுக்கப்பட்ட ஒரு தொடர் எனச்சொல்வேன் நான். அதோடு வசனங்களும் நன்றாக இருந்தது. தமிழ் subtitle ம் காணப்பட்டது. குறைவான நடிகர்களோடு நிறைவான நடிப்பும்கூட.

Thursday, June 4, 2020

Web Series - Fauda

ஃபௌடா என்ற அரபுச் சொல்லின் அர்த்தம் குழப்பம் என கூகிள் ஆண்டவர் சொல்கிறார். ஆனால் இந்த இஸ்ரேலிய தொடர் பார்க்கும்போது கலவரம் என்பதும் பொருந்தும்போல் தெரிகிறது. இஸ்ரேலிய இரகசிய தேடுதல் குழுவில் இருந்து ஒரு வெற்றிகரமான நடவடிக்கையின் மூலம் மிகவும் வேண்டப்பட்ட ஹமாஸ் உறுப்பினர் ஒருவரை கொலைசெய்தபின் அதிலிருந்து வெளிவந்து தனது குடும்பத்துடன் சாதாரண வாழ்க்கை வாழ்கின்றர் டோரோன். ஒன்றரை வருடத்தின்பின் அந்த கடைசி நடவடிக்கை தோல்வி என்று தெரியவந்ததும் மீண்டும் வந்து இணையுமாறு கேட்கப்படுகிறார் ஒரு இரண்டுமணிநேர இரகசிய நடவடிக்கைக்காக. ஏனெனில் டோரோன்போல அந்த தீவிரவாதியை நன்கு தெரிந்தவர் யாருமில்லை. அதில் ஆரம்பிக்கும் டோரோன் மற்றும் இரகசிய குழுவின் நடவடிக்கைகள் இரண்டு தரப்பிலும் ஏற்படுத்தும் தாக்கங்கள் காட்டப்படுகிகின்றது. இதுவரை மூன்று சீசன்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொன்றிலும் பத்து அல்லது பதினொரு எப்பிசோட்கள். ஒவ்வொரு எப்பிசோட்டும் முப்பத்தைந்திலிருந்து நாற்பத்தைந்து நிமிடங்கள் மட்டுமே. ஆகவே கதைக்குத் தேவையற்ற இழுவைகள் ஏதுமின்றி தொடர் மிகவேகமாகச் செல்கின்றது. திரில்லர் வகையில் மிகவும் விறுவிறுப்பான தொடர். 

இஸ்தரேலிய தயாரிப்பு என்பதால் நாங்கள் எதிர்பார்ப்பது போல தனியே இஸ்ரேலியர்களை மட்டும் நல்லவர்கள்போல் காட்டாது இஸ்ரேலிய மேலிடம் செய்யும் சில தவறுகளையும் காட்டுகின்றனர். இரகசிய குழுவினர் செய்யும் தேவையற்ற கொலைகளையும்கூட காட்டுகின்றனர். ஒரு குடும்பத்தில் ஒருவர் ஹமாஸ் முக்கியத்தவராக இருந்தால் அவரை வேட்டையாட இஸ்ரேல் எந்த எல்லைக்கும் செல்லும். அவரது குடும்பமெல்லாம் இஸ்ரேலுக்கு ஒரு பொருட்டே இல்லை. ஒரு கதையில் டோரோன் ஒரு ஹமாஸ் முக்கியஸ்தரின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள மேற்குக்கரையில் ஆறுமாதம் வரையில் இரகசியமாக வசிக்கிறார். அந்த முக்கியஸ்தரின் ஒன்றுவிட்ட சகோதரரான பஷாருக்கு குத்துச்சண்டை பயிற்சியளிக்கிறார். இறுதியில் வேறுவழியின்றி பஷாரை ஏமாற்றி அந்த ஹமாஸ் முக்கியஸ்தரை அழிக்கிறார். இப்பொழுது அப்பாவியான பஷீர் மேற்குக்கரையில் துரோகிப்பட்டம் பெறுகிறார். பஷாரை இஸ்ரேலுக்கு அழைத்துவர முயலும் டோரோனுக்கு மேலதிகாரிகளின் ஒப்புதல் கிடைக்க தாமதமாகிறது. இதற்கிடையில் தனது பாதுகாப்புக்காகவும் தனது துரோகிப்பட்டத்தைத் துடைத்தெறியவும் முற்படும் பஷார் இறுதியில் ஒரு தீவிரவாதியாகி வாழ்க்கையை சிறையில் கழிக்க நேரிடுகிறது. ஒரு சிறந்த குத்துச்சண்டைவீரன் இறுதியில் அனைத்தையும் இழந்து வாழ்க்கையையும் இழப்பது வேதனையான ஒன்று.

ஒருகாட்சியில் பஷாரும் பஷாரின் தந்தையும் காஸாவுக்கு தப்பிச்சென்றபின் அவர்களை இஸ்ரேலால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே மேற்குக்கரையில் இருந்த அவர்களின் வீடு இஸ்ரேலால் குண்டுவைத்துத் தகர்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததுபோலவே பஷாரின் தந்தை இரகசியமாக தனது மனைவியைத் தொடர்புகொள்கிறார். இது எனக்கு நான் சிறுவயதாக இருக்கையில் மேற்குக்கரையில் இருந்த யாசிர் அரபாத் அவர்களின் இருப்பிடம் அடிக்கடி இஸ்ரேலிய படையினரால் அழிக்கப்படும் செய்தி நினைவுக்கு வந்தது. பாலஸ்தீனியரின் இருப்பிடங்களை அழித்து அவர்களது மனோவலிமையைப் பலவீனப்படத்தும் நடவடிக்கையாக காலங்காலமாகவே இஸ்ரேலிர்களால் மேற்கொள்ளப்படுவதைப் புரிந்துகொள்ளலாம்.

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையில் இஸ்ரேல், பாலஸ்தீன எல்லைப்பாதுகாப்பு அமைப்பு, ஹமாஸ், சுற்றியுள்ள அரபுநாடுகள் மற்றும் சர்வதேசம் என அனைத்தும் இடியாப்ப சிக்கலில் குழம்பிப்போய் உள்ளன. இதில் சிலரின் தனிமனித விருப்புவெறுப்புகளும் சேர்ந்து நிலமையை மேலும் சிக்கலாக்குகின்றன. பாலஸ்தீன பகுதிக்குள் இரகசிய நடவடிக்கை மேற்கொள்ளும்முன் எப்படி பாலஸ்தீனர்கள் போலத் தோற்றமளிப்பதற்காக தயாராகின்றார்கள் என்பதெல்லாம் போன்ற ஆச்சரியங்கள் உண்டு இத்தொடரில். இதுவரை இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையைப்பற்றி சிறிது வாசித்து அறிந்திருந்தாலும் அந்நிலப்பரப்பு, அங்கே அவர்களின் வாழ்க்கைமுறைகளை விளங்கிக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு இத்தொடர். பாலஸ்தீனர்கள் சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்களை இத்தொடர் குறிப்பிட்டுப் பேசவில்லையாகினும் தொடர் பார்க்கும்போது ஏராளமானவற்றை விளங்கிக்கொள்ள முடிகிறது.

திரில்லர் விரும்பிகள் நிச்சயம் தவறவிடக்கூடாத ஒரு தொடர் Fauda.